பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

அரிவாள் செல் நோய் குறித்த இரண்டாவது தேசிய இணையதள மாநாடு

Posted On: 19 JUN 2021 11:02PM by PIB Chennai

சர்வதேச அரிவாள் செல்  தினத்தை முன்னிட்டு அரிவாள் செல் நோய் குறித்த இரண்டாவது தேசிய இணையதள மாநாட்டிற்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி), நோவார்டிஸ், பிரமல் ஃபவுண்டேஷன்அப்பல்லோ மருத்துவமனை, நாஸ்கோ, காஸ்க்டோ ஆகியவற்றுடன் இணைந்து இந்த மாநாடு நடத்தப்பட்டது.

இந்தியா முழுவதும் உள்ள அரிவாள் செல் நோயின் நிபுணர்கள் குழுவினர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு, முன்கூட்டியே நோயைக் கண்டறிதல் முதல் சமீபத்திய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் வரையிலான மேலாண்மை குறித்து விவாதித்தனர்.

மத்திய பழங்குடியினர் நல அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா மற்றும் இணை அமைச்சர் திருமதி ரேணுகா சிங் சவுதா ஆகியோர் உன்முக்த் திட்டத்தின் கீழ் ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் அரிவாள் செல் நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடமாடும் ஊர்திகளை கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் மாநில அரசுகளுடன ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள அரிவாள் செல் நோய் மீதான தேசிய கவுன்சில் மற்றும் பழங்குடியினர் மருத்துவ அமைப்பு போன்ற முன்முயற்சிகள் குறித்து அமைச்சர் திரு முண்டா ஆலோசனை நடத்தினார். “வருங்கால பழங்குடி சந்ததியினரை இந்த நோய் தாக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்”,  என்று அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர் திருமதி ரேணுகா சிங், அரிவாள் செல் நோய் பெரும்பாலும் பெண்களையும் குழந்தைகளையும் தாக்குவதாகவும், சுமார் 20% பழங்குடியின குழந்தைகள் 2 வயதிற்குள்ளாகவும், 30% பேர் குழந்தைப் பருவத்திலேயே இந்நோயால் உயிரிழப்பதாகவும் தெரிவித்தார். எளிதான, அதேசமயம் புதுமையான நடவடிக்கைகளின் மூலம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728681

 



(Release ID: 1728780) Visitor Counter : 200


Read this release in: English , Urdu , Hindi , Punjabi