எஃகுத்துறை அமைச்சகம்

4076 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை விநியோகித்தன எஃகு ஆலைகள்

Posted On: 05 MAY 2021 6:10PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை எஃகு நிறுவனங்கள் நாட்டின் மருத்துவ ஆக்ஸிஜன் தேவையை நிறைவேற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.

நேற்று, எஃகு ஆலைகளின் மொத்த திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி 3680.30 மெட்ரிக் டன்.  மற்றும் திரவ மருத்துவ ஆக்ஸிஜனின் மொத்த விநியோகம் 4076.65 மெட்ரிக் டன்னாக இருந்தது. கடந்த ஏப்ரல் 25ம் தேதி பல மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஆக்ஸிஜன் விநியோகம் 3134.84 மெட்ரிக் டன்கள். ஏப்ரல் மத்தியில் 1500-1700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே விநியோகிக்கப்பட்டது.

மத்திய எஃகு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், எஃகு நிறுவனங்களின் தலைவர்களுடன் கடந்த வாரம் ஆலோசனை கூட்டங்கள் நடத்தினார். அப்போது, மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க முடிந்த அளவு அனைத்தையும் செய்யும்படியும், ஆக்ஸிஜன் வசதி படுக்கைகளுடன் மிகப் பெரிய கொவிட் சிகிச்சை  வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

உள்நாட்டில் மிகப் பெரிய எஃகு உற்பத்தி நிறுவனமான இந்திய எஃகு ஆணையம்(செயில்), நாட்டில் ஆக்ஸிஜன் விநியோக திறனை அதிகரித்துள்ளது. சட்டீஸ்கரின் பிலாய், ஒடிசாவின் ரூர்கேலா, ஜார்கண்டின் பொகாரா, மேற்குவங்கத்தின் துர்காபூர் மற்றும் பர்ன்பூரில் உள்ள தனது ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளில் இருந்து ஏப்ரல் 2வது வாரத்தில் 500 மெட்ரிக் டன்னாக இருந்த  தினசரி திரவ ஆக்ஸிஜன் விநியோக அளவை, தற்போது 1100 மெட்ரிக் டன்டாக இந்திய எஃகு ஆணையம் உயர்த்தியுள்ளது.  

இந்த நிறுவனம் இதுவரை 50,000 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை விநியோகித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் செயில் நிறுவனம், நாடு முழுவதும் 15 மாநிலங்களுக்கு 17,500 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமாக திரவ ஆக்ஸிஜனை விநியோகித்துள்ளது.

.*********************



(Release ID: 1716358) Visitor Counter : 218