குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

உங்களது தாய், தாய்மொழி, தாய்நாடு மற்றும் சொந்த ஊரை என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும் - குடியரசு துணைத் தலைவர்

Posted On: 02 APR 2021 4:25PM by PIB Chennai

ஒருவர் தமது வேர்களை நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவை குறித்தும், தாய், தாய்மொழி, தாய்நாடு மற்றும் சொந்த ஊர் மீது மரியாதை வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார்.

'நீலிமா ராணி எனது அன்னை, எனது ஆதர்சம்' எனும் தலைப்பிலான புத்தகத்தை புவனேஷ்வர் ராஜ்பவனில் வெளியிட்டு பேசிய திரு நாயுடு, கல்வி, நீதித்துறை மற்றும் நிர்வாகத்தில் தாய்மொழியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வாழ்வில் வெற்றி அடைந்த நபர்கள் தங்களது சொந்த ஊர்களில் உள்ள மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மக்களவை உறுப்பினர் டாக்டர் அச்யுதா சமந்தா எழுதிய இந்த புத்தகம் அவரது தாயார் திருமதி நீலிமாராணி குறித்த வாழ்க்கை பதிவாகும்.

தமது தாயாரின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் வார்த்தைகளில் வடித்ததற்காக திரு சமந்தாவை பாராட்டிய திரு நாயுடுஒரு தாயின் வாழ்க்கையை விவரிக்கும் புத்தகத்தை வெளியிட்டதற்காக தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், ஒரு ஆண் அல்லது பெண்ணை  சிறந்த மனிதராக்குவது அன்னையே என்றும் கூறினார்.

திருமதி நீலிமா ராணிக்கு மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர், மிகவும் ஏழ்மையான சூழ்நிலையிலும் தமது குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை அவர் உறுதி செய்ததாகவும், ஏழைகள் மற்றும் பின்தங்கியோரின் நலனுக்காக அவர் தொடர்ந்து பணியாற்றியதாகவும் கூறினார்.

தமது மகன்களின் உதவியோடு தமது சொந்த ஊரான கலராபங்காவை நாட்டின் முதல் ஸ்மார்ட் கிராமங்களில் ஒன்றாக திருமதி நீலிமாராணி

மாற்றியதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

திருமதி நீலிமா ராணியையும் அவரது பணியையும் மற்றவர்கள் பின்பற்றி தங்களது சொந்த ஊர்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்று நாயுடு கேட்டுக்கொண்டார்.

ஒடிசா ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால் மற்றும் மக்களவை உறுப்பினர் டாக்டர் அச்யுதா சமந்தா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

-----



(Release ID: 1709213) Visitor Counter : 298