உள்துறை அமைச்சகம்

உத்தரகாண்ட் சமோலி மாவட்டம் ரிஷிகங்கா ஆற்றில் ஏற்பட்ட பனிச்சரிவு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல்

Posted On: 09 FEB 2021 6:13PM by PIB Chennai

உத்தரகாண்ட் சமோலி மாவட்டம் ரிஷிகங்கா ஆற்றில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ரிஷிகங்கா ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் அதன் துணை ஆறு அலகண்டா ஆகியவற்றில் கடந்த 7-ம் தேதி காலை 10 மணிக்கு பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் ரிஷிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு அமைக்கப்பட்டிருந்து 13.2 மெகா திறன் கொண்ட நீர் மின்சக்தி நிலையம் அடித்துச் செல்லப்பட்டது. தவுலி கங்கா ஆற்றில் தபோவன் பகுதியில் கட்டப்பட்டு வரும் 520 மெகா வாட் நீர் மின் நிலையத்தையும், வெள்ளம் சேதப்படுத்தியது.

தற்போது ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்துள்ளதால், வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை என உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

இச்சம்பவத்தால், இதுவரை 20 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் உத்தரகாண்ட் அரசு கூறியுள்ளது. 197 பேரை காணவில்லை. இவர்களில் 139 பேர் என்டிபிசி மின் நிலைய கட்டுமான திட்டத்தில் ஈடுபட்டவர்கள். 46 பேர் ரிஷி கங்கா திட்ட பணியில் ஈடுபட்டவர்கள், 12 பேர் கிராம மக்கள். இத்தகவல்களை மாநில அரசு சேகரித்துள்ளது.

என்டிபிசி திட்டத்தில் ஈடுபட்ட 12 பேரும், சுரங்க பாதையில் இருந்து மீட்கப்பட்டனர். ரிஷிகங்கா திட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும் மீட்கப்பட்டனர். என்டிபிசி திட்டத்தின் மற்றொரு சுரங்கப் பாதையில் சிக்கியிருப்பதாக கருதப்படும் 25 முதல் 35 பேரை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. நிலவரத்தை மாண்புமிகு பிரதமர் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை, நிலமையை 24 மணி நேரமும் கண்காணித்து மாநில அரசுக்கு தேவையான உதவியை வழங்கி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்புகளை பார்க்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696552

*****************


(Release ID: 1696620)