இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா சன்ஸ்கார் குளிர்காலப் போட்டிகள், இளைஞர்கள் திருவிழா 2021 நிறைவு
Posted On:
31 JAN 2021 5:56PM by PIB Chennai
13 நாட்களாக நடைபெற்று வந்த கேலோ இந்தியா சன்ஸ்கார் குளிர்காலப் போட்டிகள் மற்றும் இளைஞர்கள் திருவிழா, லடாக் யூனியன் பிரதேசத்தின் சன்ஸ்கார் பள்ளத்தாக்கில் நிறைவடைந்தது. முதன் முறையாக நடைபெற்ற இந்தத் திருவிழாவை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, லடாக் சுற்றுலாத் துறையுடன் இணைந்து நடத்தியது.
லடாக் யூனியன் பிரதேசத்தில் சாகச விளையாட்டுகள் மற்றும் சுற்றுலாவுக்கான வாய்ப்புகளை எடுத்துக் காட்டவும், பொருளாதார ரீதியாக சாகசங்கள் சார்ந்த புதிய முன்முயற்சியை லடாக்கில் ஏற்படுத்தவும் இந்தத் திருவிழா நடத்தப்பட்டது. லடாக்கில் குளிர்கால சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் மிகப்பெரிய நிகழ்ச்சிகளுள் இதுவும் ஒன்று. கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய இந்தத் திருவிழா, 13 நாட்களுக்குப் பிறகு ஜனவரி 30-ஆம் தேதி நிறைவடைந்தது. லடாக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜாம்யாங் ஷெரிங் நம்கியால் சிறப்பு விருந்தினராகவும், சா தொகுதியின் மன்ற உறுப்பினர் திரு ஸ்டான்சின் லக்பா, கௌரவ விருந்தினராகவும் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு ஜாம்யாங் ஷெரிங் நம்கியால், லடாக்கின் குளிர்கால விளையாட்டுகளையும், சுற்றுலாவையும் ஊக்குவிப்பதில் இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி அடைந்திருப்பதாகக் கூறினார். இதுவரை புனிதத்தலங்களையும் இதரப் பகுதிகளையும் காண்பதற்கே சுற்றுலா பயணிகள் லடாக்கிற்கு வந்ததாகவும், இந்த நிகழ்ச்சியின் மூலம் லடாக்கின் பொருளாதார நடவடிக்கைகளும், சுற்றுலா வரத்தும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐஸ் ஹாக்கி, பனிச்சறுக்கு, குதிரை ஓட்டம், பனிக்கட்டி ஏறும் போட்டி, வில்வித்தை போன்ற விளையாட்டு போட்டிகள் இந்தத் திருவிழாவில் இடம் பெற்றிருந்தன. பனிச் சிற்பங்கள், உணவு திருவிழா, யோகா போன்ற சமூக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage .aspx?PRID=1693730
*************************
(Release ID: 1693766)
Visitor Counter : 169