நிதி அமைச்சகம்

மூலதன திட்டங்களுக்கான கூடுதல் நிதி: மத்திய பிரதேசத்திற்கு ரூ. 660 கோடி வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல்

Posted On: 24 JAN 2021 12:26PM by PIB Chennai

பல்வேறு மக்கள் மைய சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய முதல் மாநிலமான மத்திய பிரதேசத்திற்கு மூலதன திட்டங்களுக்கான கூடுதல் நிதி கிடைக்கவிருக்கிறது. ஒரே நாடு-ஒரே ரேசன் அட்டை, எளிமையான வர்த்தகத்தை மேற்கொள்ளுதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு ஆகிய மூன்று சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மூலதன செலவிற்காக அந்த மாநிலத்திற்கு கூடுதலாக ரூ. 660 கோடியை வழங்குவதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. நான்காவதாக எரிசக்தித் துறை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியையும் அந்த மாநிலம் செயல்படுத்தியுள்ளது.

ரூ. 660 கோடி மதிப்பிலான மூலதன திட்டங்களுக்கு மத்திய செலவினத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு முதல் தவணையாக 50 சதவீத தொகை (ரூ.330 கோடி) விடுவிக்கப்பட்டுள்ளது. மூலதன திட்டங்களுக்காக பகுதி இரண்டின்கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ. 660 கோடிக்கும் கூடுதலாக தற்போது அதே அளவிலான தொகை வழங்கப்படவிருக்கிறது.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகளின் மூலதன செலவை ஊக்குவிக்கும் வகையில் 2020 அக்டோபர் 12-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக மூலதன செலவிற்காக மாநிலங்களுக்கான சிறப்பு நிதி திட்டத்தை அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 27 மாநிலங்களில் ரூ.10,657 கோடி மதிப்பிலான மூலதன திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் தவணையாக மாநிலங்களுக்கு ரூ. 5,378 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் திட்டத்தின் பலன்களை தமிழகம் பெறவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691806

******************



(Release ID: 1691863) Visitor Counter : 121