புவி அறிவியல் அமைச்சகம்

வங்க கடலில் புயல் சின்னம்

தமிழகம், புதுச்சேரியில் 24 மற்றும் 25ம் தேதிகளில் ஒருசில இடங்களில் தீவிர கனமழை பெய்யும்
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Posted On: 23 NOV 2020 10:15AM by PIB Chennai

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், புயலாக தீவிரமடையும் வாய்ப்புள்ளதால், தமிழகம் புதுச்சேரியில் 24 மற்றும் 25-ம் தேதிகளில் ஒருசில இடங்களில் தீவிர கனமழை பெய்யும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தில்லியில் உள்ள மண்டல வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு கூறியுள்ளது.

தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், கடந்த 6 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, புதுச்சேரிக்கு தெற்கு - தென்கிழக்கே 600 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கு திசையில் 630 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்புள்ளது.  இது தமிழக மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு நடுவே நவம்பர் 25-ம் தேதி மதியம் கரையை கடக்கும் எனத் தெரிகிறது.

எச்சரிக்கை:

1) மழைபொழிவு

இதன் காரணமாக இந்தியாவின் தெற்கு தீபகற்ப பகுதியில், நவம்பர் 23-ம் தேதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும்.  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும்.  ஒரு சில இடங்களில் தீவிர கனமழை பெய்யும். ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு கடலோர பகுதி, ராயலசீமா மற்றும் தெலங்கானாவில் 25-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் தீவிர கனமழை பெய்யும்.

2) காற்று எச்சரிக்கை

இந்த புயல் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் 23-ம் தேதி முதல் காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோ மீட்டரில் தொடங்கி படிப்படியாக அதிகரித்து 120 கி.மீ வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

3) மீனவர்களுக்கு எச்சரிக்கை

புயல் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மேற்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிக்கு நவம்பர் 23ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். ஏற்கனவே கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்பும்படியும், மேலே கூறிய கடல் பகுதிகளை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

வடக்கு சோமாலியா பகுதியில் உருவான அதி தீவிர புயல் ‘கதி’ கடந்த 6 மணி நேரத்தில் புயலாக மாறி சோமாலியாவுக்கு தெற்கு -தென்மேற்கே 150 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் எனத் தெரிகிறது. அதனால் மீனவர்கள் ஈடன் வளைகுடா மற்றும் தென்மேற்கு கடல் பகுதிக்கு என நவம்பர் 23 மாலை வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675008

**********************

(Release ID: 1675008 )



(Release ID: 1675062) Visitor Counter : 165


Read this release in: English , Urdu , Hindi , Bengali