பிரதமர் அலுவலகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2020 உச்சிமாநாட்டில் பிரதமர் வழங்கிய கருத்துரை

Posted On: 10 NOV 2020 4:48PM by PIB Chennai

இன்றைய கூட்டத்தின் தலைவரான மேதகு ரஷ்ய அதிபர் அவர்களே, எனது சக நண்பர்களாகிய மேதகு தலைவர்களே,

கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள சவால்கள், தடங்கல்களுக்கு இடையே இந்த உச்சிமாநாட்டை நடத்தியதற்காக, முதலில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓ-வின் திறமையான தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிபர் புதினை நான் வாழ்த்த விரும்புகிறேன். இந்த வேதனையான சூழ்நிலையிலும், எஸ்சிஓ-வின் கீழ், விரிவான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை எதிர்நோக்கி, நம்மால் இன்னும் நடைபோட முடிகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மேதகு தலைவர்களே,

எஸ்சிஓ-வில் இந்தியாவுக்கு இது முக்கியமான ஆண்டாகும். முதல் முறையாக, ‘’ எஸ்சிஓ அரசுகளின் தலைவர்கள் கவுன்சில்’’  என்ற உச்சிமாநாடு அளவிலான கூட்டத்தை நாம் கூட்டவுள்ளோம். பொருளாதார ஒத்துழைப்பு நோக்கிய சிறப்பு கவனத்துடன் கூடிய விரிவான நிகழ்ச்சி நிரல் இந்தக் கூட்டத்துக்காக வகுக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் சூழல் முறையில் எங்களது ஆழ்ந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக சிறப்பு பணிக்குழுவை ஏற்படுத்த உத்தேசித்துள்ளோம். எஸ்சிஓ நாடுகள் முழுவதும் பாரம்பரிய, பழமையான மருத்துவம் பற்றிய அறிவைப் பரப்புவதற்காக, பாரம்பரிய மருத்துவம் குறித்த பணிக்குழுவையும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,  சமகால மருத்துவத்தின் முன்னேற்றத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடியும்.

மேதகு தலைவர்களே,

பொருளாதார பன்னோக்குவாதம்  மற்றும் தேசிய திறன் உருவாக்கத்தின் கூட்டுக் கலவையில் இந்தியா உறுதியான நம்பிக்கை வைத்துள்ளது. இதன் மூலம், எஸ்சிஓ நாடுகள், பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பிலிருந்து மீள முடியும். பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகில், ‘’ தன்னிறைவு இந்தியா’’ என்னும் தொலைநோக்குடன் நாங்கள் முன்னோக்கி நகர்ந்து வருகிறோம்.  ‘’ தன்னிறைவு இந்தியா’’, உலகப் பொருளாதாரத்துக்கான தனது பன்மடங்கு ஆற்றலை நிரூபிக்கும் என நான் நம்புகிறேன். மேலும், இது, எஸ்சிஓ பிராந்தியத்தில் பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிக்கவும் செய்யும்.

மேதகு தலைவர்களே, எஸ்சிஓ நாடுகளுடன், இந்தியா நெருங்கிய கலாச்சார, வரலாற்று உறவுகளைப் பராமரித்து வ,ருகிறது. நமது முன்னோர்கள், இடையறாத, தொடர்ச்சியான தொடர்புகளை, வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பகிர்ந்து கொண்டதன் மூலம் உயிர்ப்புடன் வைத்திருந்தனர். சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து நெடும்பாதை, சாபஹார் துறைமுகம், அஷ்காபாத் உடன்படிக்கைகள் போன்ற நடவடிக்கைகள், இணைப்பில் இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த இணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில்  இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்கும் முக்கிய கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இது அவசியமாகும்.

மேதகு தலைவர்களே,

ஐக்கிய நாடுகள் சபை தனது 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆனால், பல சாதனைகளுக்கிடையில், ஐ.நா சபையின் அடிப்படை லட்சியம் இன்னும் நிறைவேறவில்லை. பெருந்தொற்றால் உருவான பொருளாதார, சமூக இடர்ப்பாடுகளைக் களைய உலகம் போராடி வருகிறது. இந்தப் போராட்டம் ஐ.நா நடைமுறையில் தீவிர மாற்றங்களைக் கொண்டு வருவதிலும் உள்ளது.

மாற்றமே நிலையானது என்று நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது. 2021 தொடக்கத்தில், இந்தியா ஐ.நா பாதுகாப்பு சபையில், நிரந்தரமல்லாத உறுப்பு நாடாக பங்கு வகிக்கவுள்ளது. உலக நிர்வாக நடைமுறையில், இயன்ற மாற்றங்களைக் கொண்டு வருவதில் எங்கள் கவனம் இருக்கும்.

சீர்திருத்தமான பன்னோக்குவாதம், இன்றைய உலகின் எதார்த்த நிலையை பிரதிபலிக்கும். அனைவரது எதிர்பார்ப்புகள், சமகால சவால்கள், மனித நலன் போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்படும். இந்த முயற்சியில், எஸ்சிஓ நாடுகளின் முழு ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மேதகு தலைவர்களே,  சர்வே பவந்து சுகினா, சர்வே சாந்து நிரமயா. நாம் அனைவரும் நோய் நொடியற்ற மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்வோம். இந்த சமாதான முழக்கம் இந்தியாவின் முழு மனித குலத்துக்கான நம்பிக்கையின் அடையாளமாகும். முன்னெப்போதும் ஏற்பட்டிராத பெருந்தொற்றால் நிலவும் துயரமான நேரத்திலும், இந்தியாவின் மருந்து தொழில் துறை, 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை அனுப்பி உதவியுள்ளது. உலகின் பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடு என்ற விதத்தில், இந்த நெருக்கடியான நிலையை எதிர்த்து போராடி வரும் மனித குலம் முழுவதற்கும் உதவ, தனது தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத் திறனை இந்தியா பயன்படுத்தும்.

மேதகு தலைவர்களே,

இந்தியா, அமைதி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தில் உறுதியாக நம்பிக்கை வைத்துள்ளது. நாங்கள் எப்போதும், பயங்கரவாதம், சட்டவிரோத ஆயுதம், போதை மருந்து கடத்தல், சட்டவிரோத பரிவர்த்தனை ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. எஸ்சிஓ சாசனத்தில் குறிப்பிட்டுள்ள அதன் கொள்கைகளைப் பின்பற்றி நடப்பதில் இந்தியா தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

இருப்பினும், எஸ்சிஓ நிகழ்ச்சி நிரலில், இருதரப்பு பிரச்சினைகளை கொண்டுவருவதற்கு தேவையின்றி, தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது துரதிருஷ்டவசமாகும். இது ஷாங்காய் உணர்வையும், எஸ்சிஓ சாசனத்தையும் மீறும் செயலாகும். இது இந்த அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கும், எஸ்சிஓ சாசனம் வகுத்துள்ள ஒத்துழைப்புக்கும், கருத்தொற்றுமைக்கும் முரணானது.

மேதகு தலைவர்களே,

எஸ்சிஓ அமைப்பின் 20-வது ஆண்டுவிழாவை 2021-ம் ஆண்டில் ‘’ எஸ்சிஓ கலாச்சார ஆண்டாக’’ கொண்டாட நான் எனது முழு ஆதரவை வழங்குகிறேன். இந்த ஆண்டில், இந்திய தேசிய அருங்காட்சியகம், புத்தமத பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ளும், முதலாவது எஸ்சிஓ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டுள்ளது. இந்திய இலக்கிய அகாடமி, பத்து இந்திய இலக்கியப் படைப்புகளை ரஷ்ய, சீன மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகளை நிறைவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு, பெருந்தொற்று இல்லாத சூழலில், எஸ்சிஓ உணவு திருவிழாவை இந்தியா நடத்தும் என நான் நம்புகிறேன். பெய்ஜிங்கில் எஸ்சிஓ செயலகம், கூட்டாக ஏற்பாடு செய்திருந்த சமீபத்திய யோகா நிகழ்ச்சியில், எஸ்சிஓ நாடுகளில் இருந்து பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்றது குறித்து  நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேதகு தலைவர்களே, செயல்திறன் மிக்க, வெற்றிகரமான தலைமைப் பொறுப்பு வகிக்கும் அதிபர் புதினை மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்கு அவருக்கு நன்றி கூறுகிறேன். அடுத்த ஆண்டு எஸ்சிஓ தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மானை நான் வாழ்த்தி, பாராட்ட விரும்புகிறேன்.

தஜிகிஸ்தானின் வெற்றிகரமான தலைமைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பை அளிக்கும் என நான் உறுதி கூறுகிறேன்.

நன்றிகள் பல!

******



(Release ID: 1671861) Visitor Counter : 200