எஃகுத்துறை அமைச்சகம்

எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகளின் எஃகுத் தேவைகளுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொண்டு உள்நாட்டு எஃகுப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று திரு. தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

Posted On: 16 JUN 2020 3:46PM by PIB Chennai

எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகளின் எஃகுத் தேவைகளுக்கு இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொண்டு, உள்நாட்டு எஃகுப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயு, எஃகுத் துறைகளுக்கான அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். ஆத்ம நிர்பார் பாரத் - சுயசார்பு இந்தியா - எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகளில் உள்நாட்டு எஃகுப் பயன்பாட்டை அதிகரிப்பது என்பது பற்றிய இணையவழிக் கருத்தரங்கு ஒன்றில் இன்று உரையாற்றிய அவர், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை என்றும், அவற்றை புதிய தளத்திற்கு கொண்டு செல்வதற்கான நேரம் இது என்றும் கூறினார்.

நாட்டை, சுயசார்பு இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி விடுத்த அறைகூவல் குறித்து குறிப்பிட்ட திரு பிரதான், சுய சார்புடன், அதே சமயம் உலக அளவில் ஒருங்கிணைந்த பொருளாதாரத்துடன், வலுவான உற்பத்தித் துறையுடன் கூடிய வலிமையான இந்தியாவை உருவாக்குவதே சுயசார்பு இந்தியா என்பதாகும் என்றார். கட்டுமானத்துறை, எண்ணெய், எரிவாயு, ஆட்டோமொபைல், இயந்திரங்கள் மற்றும் பல துறைகளுடன் வலுவான தொடர்பு கொண்ட இந்திய எஃகுத் துறை, சுயசார்பு இந்தியாவாக உருவாகும் கனவை நனவாக்குவதற்கு மிக அடிப்படையான பங்காற்ற வேண்டியுள்ளது என்று கூறினார். உள்நாட்டுத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த பின்னரே, உலக அரங்கில், இந்திய எஃகுத் துறை மிகப்பெரும் பங்காற்ற இயலும் என்று அவர் கூறினார். பொருள் வழங்கு தொடரை உள்ளூர்மயமாக்குவது என்பதை மேம்படுத்துவதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகளினால், செலவினம் அதிகரிக்காமல் இருக்கும் வகையில், உள்நாட்டுத் தயாரிப்பாளர்கள் காலத்திற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.

கடந்த ஆறு ஆண்டுகளில், முதலீட்டுக்கு சாதகமான கொள்கைகளின் காரணமாக, எண்ணெய் மற்றும் வாயுத் துறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

ண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை சார்ந்த அனைத்து அமைப்புகளும், தங்களுக்குத் தேவையான பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குப் பதிலாக உள்நாட்டிலேயே வாங்க வேண்டும் என்று திரு.பிரதான் கேட்டுக் கொண்டார் இத்துறைகளுக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் வழங்கும் திறன், உள்நாட்டு எகுத் தயாரிப்பாளர்களுக்கு உள்ளது என்று திரு பிரதான் கூறினார்.

 



(Release ID: 1631940) Visitor Counter : 157