புவி அறிவியல் அமைச்சகம்
கிழக்கு மத்திய அரபிக்கடலில் நிலவும் “நிசார்கா” புயல்: வடக்கு மகாராஷ்டிரா – தெற்கு குஜராத் கடலோரப் பகுதிகளுக்குப் புயல் எச்சரிக்கை: ஆரஞ்சு அறிவுறுத்தல்
Posted On:
02 JUN 2020 8:57PM by PIB Chennai
தேசிய வானிலை முன்கணிப்பு மையம்/ மண்டல சிறப்பு வானிலை மையம்/ இந்திய வானிலைத் துறையின் புயல் எச்சரிக்கைப் பிரிவு ஆகியன கீழ்க்காணும் தகவல்களை அளிக்கின்றன:
கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலவும் “நிசார்கா” புயல், கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு-வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. ஜூன் 2, 2020, இன்று மாலை 5-30 மணி நிலவரப்படி, கிழக்கு மத்திய அரபிக்கடலில் 16.3°N அட்சரேகை மற்றும் 71.3°E தீர்க்கரேகை அருகேயும், பஞ்சம் (கோவா) பகுதியிலிருந்து மேற்கு-வடமேற்கில் 280 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பையிலிருந்து (மகாராஷ்டிரா) தெற்கு-தென்மேற்கில் 350 கிலோமீட்டர் தொலைவிலும், அலிபாக்-கிலிருந்து (மகாராஷ்டிரா) தெற்கு-தென்மேற்கில் 300 கிலோமீட்டர் தொலைவிலும், சூரத்-திலிருந்து (குஜராத்) தெற்கு-தென்மேற்கில் 560 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
இது அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர சூறாவளிப் புயலாக வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இது வடக்கு-வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடலோரப் பகுதியையொட்டி, ஹரிஹரேஷ்வர் மற்றும் டாமன் இடையே அலிபாக்-கை ஒட்டி (ராய்காடு மாவட்டம், மகாராஷ்டிரா) தீவிர சூறாவளிப் புயலாக ஜூன் 3-ஆம் தேதி பிற்பகலில் கரையைக் கடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதிகபட்சம், மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் புயல் கடக்கும்போது, மணிக்கு 120 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோரப் பகுதியை ஒட்டிய, கிழக்கு மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக்கடலுக்கு ஜூன் 3 வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரை:
- மீன்பிடி நடவடிக்கைகளை முற்றிலும் நிறுத்தவேண்டும்.
- தாழ்வான பகுதிகளில் வசித்துவரும் மக்களை வெளியேற்ற வேண்டும்.
- ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்தை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டும்.
விசைப்படகுகள் மற்றும் சிறுகப்பல்களில் செல்வது பாதுகாப்பானது இல்லை
(Release ID: 1628923)