பிரதமர் அலுவலகம்

இணையவெளி பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த இந்தோ- பிரெஞ்ச் திட்டம் (ஆகஸ்ட் 22, 2019)

Posted On: 22 AUG 2019 11:59PM by PIB Chennai

பொது நோக்கு

இந்தியாவும் ,பிரான்சும் தங்கள் சமுதாயங்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நீடித்த மேம்பாடு காணவும், டிஜிட்டல் ரீதியான பிளவுகளை ஒன்றிணைக்க தேவையான இணைய தொடர்பை பாதுகாக்கவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மாற்றத்துக்கான அம்சமாக கருதுகின்றன.

இவ்வாறு, மக்களுக்கு அதிகாரமளித்து, சமத்துவமற்ற நிலையைக் குறைத்து, நீடித்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் டிஜிட்டல் தொழில்நுட்ப தொலைநோக்கை இந்தியாவும் ,பிரான்சும் வலியுறுத்துகின்றன.

சர்வதேசப் பாதுகாப்பு மற்றும் ராஜீய முயற்சி

பிரான்சும், இந்தியாவும் வெளிப்படையான, நம்பத்தகுந்த, பாதுகாப்பான, நிலைத்த, அமைதியான இணையவெளிக்கான உறுதிப்பாட்டை கொண்டுள்ளன. இத்தகைய எளிதில் அணுகக்கூடிய டிஜிட்டல் சூழலை ஏற்படுத்தவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்கவும் சர்வதேச சட்டம், குறிப்பாக ஐ.நா சாசனம் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. இணையவெளியில் பொறுப்பு மிக்க நாடு என்பதை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை இருநாடுகளும் உணர்ந்துள்ளன. இதற்காக நம்பிக்கை மற்றும் திறன் அடிப்படையிலான நடவடிக்கைகளை ஐ.நா சட்டதிட்டத்துக்கு உட்பட்டு மேற்கொள்ள அவை உறுதிபூண்டுள்ளன. இணையவெளியில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அடித்தளமாக இது திகழும்.

இணைய வெளி நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை பல்வேறு காரணிகள் மூலமாக மேம்படுத்த வேண்டும் என்பதை இந்நாடுகள் நன்கு உணர்ந்துள்ளன. வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு, நிலைத்தன்மை, எளிதில் அணுகக்கூடிய அமைதியான டிஜிட்டல் சூழலை உறுதி செய்ய பல்முனை பங்கேற்பு தேவை என அவை வலியுறுத்துகின்றன. இந்த நிலையை உருவாக்க அரசுகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடிமை சமுதாயம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி அவசியம் என இருநாடுகளும் வலியுறுத்துகின்றன.

நிர்வாகம், இறையாண்மை மற்றும் தொழில்நுட்ப ஒழுங்குமுறை

அரசுகள் உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்டவர்களின் நலன்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில், பல்முனை அணுகுமுறையைப் பாதுகாக்கும் ,அனைத்தையும் உள்ளடக்கிய, வெளிப்படையான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கு பாடுபட பிரான்சும், இந்தியாவும் திட்டமிட்டுள்ளன.

சர்வதேச சமுதாயத்தின் ஒத்துழைப்பு, ஒத்திசைவு மற்றும் உறுதிப்பாடு கொண்ட, தீர்க்கமான நடவடிக்கையுடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதை இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அங்கீகரிக்கின்றன. இது, டிஜிட்டல் கட்டமைப்பு அமைந்துள்ள பகுதிகளின் இறையாண்மை, இணைய பயன்பாட்டாளர்களின் மனித உரிமைகள், கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அவை கருதுகின்றன. 

இணையவெளி பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு

2019 ஜூன் 20-ந்தேதி பாரிசில் நடைபெற்ற இணையவெளி உரையாடலின் மூன்றாவது நிகழ்வில் வெளியிடப்பட்ட  கூட்டறிக்கையை பிரான்சும், இந்தியாவும் வரவேற்றுள்ளன. இணையவெளி உரையாடலை மேலும் வலுப்படுத்தி செயல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் அங்கீகரிக்கின்றன.

இதுதொடர்பாக முன்பு வெளியிடப்பட்டுள்ள ஐ.நா அரசு சார் வல்லுநர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இணையவெளி குறித்த அரசுகளின் பொறுப்பான செயல்பாட்டுக்கான விதிமுறைகளை வகுப்பதுடன், சர்வதேச சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பல்வேறு அமைப்புகளில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கு ஆதரவளித்து, அவற்றை வலுப்படுத்த இந்த இருநாடுகளும் விரும்புகின்றன. 

தீயநோக்கம் கொண்ட நடவடிக்கைகளைத் தடுப்பது, அவற்றுக்கு உடனடி திருத்தங்களை வெளியிடுவது, அவற்றின் காரணிகளைக் கண்டறிந்து, அதன் தாக்கத்தைத் தணிக்கும் வகையில், இந்தியாவும், பிரான்சும் தங்கள் இணையவெளி பாதுகாப்பு முகமைகளுக்கு இடையே, தகவல்களைப் பரிமாறுவதன் மூலம், உறுதியான ஒத்துழைப்பை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன..

டிஜிட்டல் நடைமுறைகள், உற்பத்தி, சேவைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நன்கு உணர்ந்துள்ள பிரான்சும், இந்தியாவும் , தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார தகவல் உள்கட்டமைப்பை பாதுகாப்பது,, பரிசோதனை மற்றும் உற்பத்திக்கான சான்றளிப்பு உள்ளிட்ட சிறந்த நடைமுறைகளைக் கையாளுவதுடன், விதிமுறைகளுக்கு உட்பட்டு சட்டபூர்வமாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. 

இந்தியாவும், பிரான்சும் இடம் பெற்றுள்ள வாஸ்ஸனார் ஏற்பாட்டின் கீழ், உரிய விவாதங்களில் தவறாது பங்கேற்பதன் மூலம், இணையவெளியில் தீயநோக்கம் கொண்ட தகவல் பரவலால் ஏற்றபடும் பிரச்சினைகளைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நன்றாக உணர்ந்துள்ளன. இதன் வாயிலாக, பொருளாதார தகவல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பது உள்பட    விதிமுறைகளுக்கு உட்பட்டு சட்டபூர்வமாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ள, பிரான்சும், இந்தியாவும் திட்டமிட்டுள்ளன.

இணையவெளி பாதுகாப்புக்கு, குறிப்பாக தேசியப் பாதுகாப்பு மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதாரத் தகவல் உட்கட்டமைப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அனைத்து நாடுகளுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை  பிரான்சும், இந்தியாவும் எடுத்துக்காட்டியுள்ளன.


இணையவெளி குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பு

இணையவெளி குற்றங்கள் நாடு கடந்த குற்றம் என்பதையும், அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின் முன்பு நிறுத்த திறமையான சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்பதையும் பிரான்சும், இந்தியாவும் புரிந்துகொண்டுள்ளன. இதற்காக , இந்த விஷயத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அவை திட்டமிட்டுள்ளன. குற்றவாளிகளை அடையாளம் காணுதல், குறிப்பாக தீயபிரச்சாரங்களை வடிவமைப்பவர்கள், அவற்றைப் பரப்புபவர்கள், அதற்கு இடம் கொடுப்பவர்கள், அதை ஒளிபரப்புபவர்கள் குறித்த தகவல் பரிமாற்றம், ஆதாரத் திரட்டல் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏடிஎம் நிலையங்கள் உள்பட கணினி வழி நிதி முறைகேடுகள், மின்னணு பரிவரர்த்தனை மோசடிகள் ஆகியவை பற்றி கவலை தெரிவித்துள்ள இரு நாடுகளும், அவற்றில்  இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பது தொடர்பாக தங்களது உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளன. இறுதியாக, இணையவெளி குற்றங்களைத் தடுக்க சேவை வழங்குவோர், சமூக ஊடக நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தகவல் பரிமாற்ற ஏற்பாடுகளைக் கோருவதுடன், தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கவும் அவை திட்டமிட்டுள்ளன.  

டிஜிட்டல் நிர்வாகத்தில் ஒத்துழைப்பு

ஒழுங்குமுறை சவால்கள்
சர்வதேச அளவில் டிஜிட்டல் துறையைப் பாதுகாக்க சட்டபூர்வமான, நியாயமான, சமன்பாடான அணுகுமுறையை ஏற்படுத்துவதில் ஒருங்கிணைந்து செயல்பட்டு அதை வலுப்படுத்த பிரான்சும், இந்தியாவும் விரும்புகின்றன. மக்களின் உடைமைகள், தரவு இறையாண்மை , அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் தொழில்நுட்பங்கள் திகழ தேவையான விதிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இருநாடுகளும் உணர்ந்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை

செயற்கை நுண்ணறிவு உருவாக்கத்தின் ஆற்றலை இருநாடுகளும் வரவேற்றுள்ளன.  குறிப்பாக மின்னணு நிர்வாகம், தன்னாட்சிப் போக்குவரத்து, பொலிவுறு நகரங்கள், இணையவெளி பாதுகாப்பு , சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகிய துறைகளில் நீடித்த வளர்ச்சிக்கு இது அவசியம் என அவை கருதுகின்றன.

செயற்கை நுண்ணறிவு கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்துவது, மக்களை மையப்படுத்தும் சேவைகள் குறித்த திட்டங்கள், சட்டத்தின் மூலமான தரவு இறையாண்மை, இணையவெளி பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை கண்ணோட்டங்கள் ஆகியவற்றின் அவசியத்தையும் பிரான்சும், இந்தியாவும் அங்கீகரிக்கின்றன. பிரான்சும், இந்தியாவும் நிபுணத்துவம், சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதன் வாயிலாக, செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கவும் கருதுகின்றன.

சர்வதேச சட்டத்துக்கு இணக்கமாக, மனித குலத்துக்கு தொண்டாற்றும் வகையில், செயற்கை நுண்ணறிவின் அபரிமித வளர்ச்சியை உறுதி செய்யும் ,நெறிமுறையுடன் கூடிய, சட்டபூர்வ, சர்வதேச தொகுப்பை உருவாக்குவதன் அவசியத்தையும் பிரான்சும், இந்தியாவும் உணர்ந்து அதற்காக தங்கள் உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளன. இந்தத் திசையில் சேர்ந்து பாடுபடும் இசைவை இருநாடுகளும் பல்வேறு அமைப்புகளில் (ஜி7, ஜி20, ஐநா) தெரிவித்துள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேசக் குழுவிலும் அவை இடம் பெற்றுள்ளன.

பயங்கரவாதி, கொடும் தீவிரவாதி மற்றும் ஆன்லைன் துவேஷ கருத்துக்கு எதிரான போர்

மிதமான பயங்கரவாத, கொடும் தீவிரவாதக் கருத்துக்கள், வெறுப்புணர்வைத் தூண்டும் சட்டவிரோத கருத்துக்கள் தொடர்பாக   சமூக வலைதளக் களங்களின் பொறுப்புடைமை அவசியம் என்பதை இருநாடுகளும் வலியுறுத்துவதுடன், கிறைஸ்ட்சர்ச் அழைப்பின் மூலம் , அவற்றின் ஆதரவைக் கோரியிருந்தன.

தவறான தகவல் பரவல் தடுப்பு

போலி செய்திகள் மூலம் தவறான தகவல் பரவுவதைத் தடுக்க பிரான்சும் ,இந்தியாவும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்துள்ளன. அதேசமயம், ஆன்லைன் கருத்து சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் அவை உணர்ந்திருக்கின்றன. தவறான போலி செய்திகள் பரவுவது, தனிநபர் தரவுகளை வெளியிடுவது ஆகியவற்றின்  அபாயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த அச்சுறுத்தல் தொடர்பாக சர்வதேச பரிவர்த்தனைக்கு பிரான்சும், இந்தியாவும் அழைப்பு விடுத்துள்ளன. சமூக வலைதளக் களத்தை ஒழுங்குமுறைப்படுத்த விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என அந்நாடுகள் விரும்புகின்றன.

தனிநபர் தகவல் பாதுகாப்பு

பயன்பாட்டாளரின் தனிநபர் தரவுக்கு மதிப்பளித்து பாதுகாக்கும் புதுமையான டிஜிட்டல் முறையை உருவாக்க பிரான்சும், இந்தியாவும் விரும்புகின்றன. ஐரோப்பிய யூனியனின் பொதுத் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை அமலாக்கத்துக்கு இணையாக, இந்த விஷயத்தில் தேவையான ஒழுங்குமுறை தேவை என்பது இந்தியாவின் நோக்கமாகும். தரவு பாதுகாப்பு விஷயத்தில் ஐரோப்பிய நடைமுறைக்கு ஏற்ப, தரவு பாதுகாப்பு விதிமுறைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அதன் அடிப்படையில் இந்தியா, தரவுகள் மற்றும் தகவல்கள் வருகையை அணுகும்.

டிஜிட்டல் பிளவைக் குறைத்தல்

மக்களின் வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பிரான்சும், இந்தியாவும் டிஜிட்டல் பிளவைச் சரிக்கட்டும் உள்ளடக்கத்தை மேம்படுத்த திட்டமிடுகின்றன. டிஜிட்டல் கல்வியறிவை வளர்க்க, தேசிய கொள்கைகளில் உள்ள சிறந்த நடைமுறைகள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இசைவு தெரிவித்துள்ளன.

இந்தோ- பிரெஞ்ச் டிஜிட்டல் கூட்டாண்மை
பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சகம், இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை தகுந்த நடைமுறையின் மூலம் இந்தோ- பிரெஞ்ச் டிஜிட்டல் கூட்டாண்மையை ஒருங்கிணைத்து, செயல்படுத்தும் முனையங்களாக இருக்கும்.

தகவல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க, இருதரப்பும் அடிக்கடி இந்தோ- பிரெஞ்ச் டிஜிட்டல் கூட்டாண்மை குறித்த கலந்தாலோசனைகளை நேரடி பங்கேற்பு மற்றும் காணொலிகள் மூலம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படும் அமைப்புகள்,, இருநாடுகளையும் சேர்ந்த உரிய நிறுவனங்களுடன் சேர்ந்து  கலந்துரையாடி, ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும்.

    1. பொருளாதாரப் பரிவர்த்தனைகள்
      தொழில் மற்றும் புதுமை
      பிரான்சும், இந்தியாவும் தங்கள் சந்தைகளில் பணியாற்ற விரிவான வாய்ப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் துறையில் தொழில் ஒத்துழைப்பை வளர்க்க விரும்புகின்றன. மேலும், இருநாடுகளின் டிஜிட்டல் நிறுவனங்கள் சந்தை வாய்ப்பை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கூட்டாக இணைந்து செயல்படும். இதன்மூலம் தங்கள் தொழில்நுட்ப நடைமுறைகளை மேம்படுத்த இருதரப்பும் முனைப்பு  காட்டும்.

      பிரான்சு நிறுவனங்கள் இந்தியாவின் டிஜிட்டல் வெளிக் களத்தில் பங்கேற்றுள்ளன. இதேபோல, இந்திய நிறுவனங்கள் பிரான்சில் அலுவலகங்களை அமைத்து வருகின்றன. இவ்வாறு டிஜிட்டல் துறையில் இருதரப்பு முதலீடுகள் செய்யப்பட்டு, வலுவான பொருளாதாரப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
      பிரான்சும், இந்தியாவும் டிஜிட்டல் துறையில் கூடுதல் ஒருங்கிணைப்பு தேவை என்பதை புரிந்து கொண்டு, தொழில் முனைவோர் தங்களது ஆலோசனைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதை வரவேற்றுள்ளன. இந்தியாவில் உள்ள பிரெஞ்சு டிஜிட்டல் நிறுவனங்களும், பிரான்சில் உள்ள இந்திய நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க வகையில் வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளன. இதற்கான உதாரணங்கள் வருமாறு;
      தி பார்மர் பிரெஞ்ச்  டெக் இனியேடிவ், பிரான்சில் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், 13 இந்திய நிறுவனங்கள் தொடங்க வகை செய்துள்ளது.

  இருநாட்டு தொழில்நுட்ப முறைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில்     பெங்களூரில் அண்மையில் பிரெஞ்ச் டெக் நிறுவனம் தொடங்கப்பட்டது.

பிரெஞ்ச் டெக் இகோசிஸ்டத்தில் இந்திய ஊழியர்கள்,  நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சேர்ந்து இருநாடுகளுக்கும் இடையே புதிய உறவுகளை உருவாக்குவதற்காக புதிய தொழில்நுட்ப விசா வழங்கப்படுகிறது.       
பிரெஞ்ச் டெக் கம்யூனிட்டி பெங்களூர் பிரான்ஸ், மெய்ட்டி ஸ்டார்ட் அப் ம்மூலம் பிரான்ஸ் மற்றும் இந்தியாவில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு
1.2. ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி

சூப்பர் கம்ப்யூட்டிங், குவாண்டம் கம்ப்யூட்டிங்

டிஜிட்டல் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு கணினியியலில் சிறப்பான திறன் அவசியம் என்ற நிதர்சனத்தை பிரான்சும் இந்தியாவும் புரிந்துகொண்டுள்ளன. கணக்கிடுதல் உபகரணங்களில் உயர் திறனை மேம்படுத்தும் கூட்டு முயற்சிக்கான தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் வரைமுறைக்கு உட்பட்டு ,மேற்கொண்ட ஒத்துழைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை இருநாடுகளும் பாராட்டியுள்ளன.

மகாநதி ஆற்றுப் படுகையில், நீர் வரத்தை கணக்கிடுவதில் உயர் திறன் கொண்ட இந்தோ-பிரெஞ்ச் முன்மாதிரி திட்டம் துவங்கப்பட்டதை இருநாடுகளும் வரவேற்றுள்ளன.

மூன்று முக்கிய பிரிவுகளில், இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இருநாடுகளும் உறுதிபூண்டுள்ளன;
செயற்கை நுண்ணறிவு பிரிவில் உயர்த் திறன் கணக்கிடுதல் ;

கணக்கீட்டு அளவு, இந்த விஷயத்தில் புனேயில் உள்ள இந்தோ-பிரெஞ்ச் சென்டர் ஆப் எக்ஸலென்ஸ் உருவாக்கப்பட்டதற்கு இருதரப்பு பாராட்டு;
- கூடுதல் கணக்கீடு

செயற்கை நுண்ணறிவு, அளவீட்டு கணக்கீடு, அறிவுசார் உற்பத்தி, வாகன மின்னணு உதிரி பாகங்கள் என உருவாகி வரும் தொழில்நுட்பங்களில் முறைகளையும் திட்டங்களையும் உருவாக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு முன்முயற்சி

பிரான்ஸ், இந்தியா ஆகிய நாட்டுப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் கணிதம், கணினி அறிவியல் படிப்புகளில் தங்கள் திறமையின் மூலம் பயன்கள் கிடைக்கும் என்று நம்பும் இருநாடுகளும், செயற்கை நுண்ணறிவுக்காக இருதரப்பு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு திட்டத்தை உருவாக்க உடன்பட்டுள்ளன.

சுகாதாரம், பருவநிலை, போக்குவரத்து, விவசாயம், பேரிடர் மீட்பு, பொலிவுறு நகரங்கள் உள்ளிட்ட துறைகளில், இருநாட்டு செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் ஆற்றலை ஒருங்கிணைக்க, கல்வி நிறுவனங்கள், அமைச்சகங்கள், குறிப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் கூட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.

இந்தக் கூட்டமைப்பின் ஒருபகுதியாக, ஆண்டுக்கு 2 மில்லியன் பவுண்டுகளை நிதியாக இருதரப்பும் வழங்கும்.  இதன் மூலம், அடிப்படை மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கல்வி உதவித் தொகை, நிபுணர்கள் பரிமாற்றம், ஆராய்ச்சி திட்டங்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக இது பயன்படுத்தப்படும்.

இந்தக்கூட்டமைப்பு அறிவுசார் உச்சிமாநாட்டின் பகுதியாக ஆண்டுக்கு ஒரு முறை கூடும். இதன் முதல் கூட்டம் லியன் நகரில் 2019 அக்டோபரில் நடைபெறும்.
 



(Release ID: 1583004) Visitor Counter : 445