நிதி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கம்: 2024-க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUL 2019 1:43PM by PIB Chennai
ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ் 2024-க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நிதிநிலை அறிக்கை 2019-20-ஐ இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போது தெரிவித்தார். மத்திய நீர்வள அமைச்சகம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ், உள்ளூர் உள்கட்டமைப்பை உருவாக்குதல், மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மேம்பாடு, வீடுகளில் வீணாகும் நீரை சுத்திகரித்து வேளாண்மைக்குப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுடன் உள்ளூர் அளவில் நீருக்கான தேவையை நிறைவு செய்யும் விதத்தில் குடிநீர் விநியோக மேலாண்மையில் கவனம் செலுத்தப்படும். நாடெங்கிலும் நிலைத்த குடிநீர் விநியோக மேலாண்மையை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த இயக்கத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் பிற திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
ஜல் சக்தி திட்டத்தில், நீர் நிலைமை சிக்கலானதாகவும், அதிக அளவில் சுரண்டப்பட்டதாகவும் உள்ள 256 மாவட்டங்களில் உள்ள 1592 வட்டங்களை அரசு கண்டறிந்துள்ளதாகவும் நிதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
**************
(வெளியீட்டு அடையாள எண்: 1577470)
வருகையாளர் எண்ணிக்கை : 282