நிதி அமைச்சகம்
2040-ல் இந்திய மக்கள் தொகை: 21 ஆம் நூற்றாண்டுக்கான மக்கள் நலனுக்குத் திட்டமிடல்
Posted On:
04 JUL 2019 12:12PM by PIB Chennai
2018-19 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியாவின் மக்கள் தொகை பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ``அடுத்த 2 தசாப்தங்களில் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி பெருமளவு குறைந்துவிடும். மக்கள் தொகை அதிகம் என்ற நிலை நாட்டில் நீடிக்கும் என்றாலும், மக்கள் தொகை நிலை மாற்றத்தில் முன்னேறிய நிலையில் இருக்கும் சில மாநிலங்களில் 2030களில் சமூகத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்'' என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரத் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார். 2041 ஆம் ஆண்டு வரையில் தேசிய மற்றும் மாநில அளவில் மக்கள் தொகை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றி அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியில் அடுத்தகட்டத்தை நோக்கி இந்தியா செல்கிறது. அடுத்த இரு தசாப்தங்களில் மக்கள் தொகை வளர்ச்சி வேகம் குறைவாக இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சமீபத்திய தசாப்தங்களில் மொத்த கருத்தரித்தல் விகிதம் (TFR) வேகமாகக் குறைந்து வருவது தான் இதற்குக் காரணம். 2021 ஆம் ஆண்டு வாக்கில், மரணிப்போரைவிட, புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிடக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மக்கள் தொகை வளர்ச்சி அனைத்து பெரிய மாநிலங்களிலும் குறைந்து வரும் நிலையில், பிகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா போன்ற காலங்காலமாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களிலும் இது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
****
(Release ID: 1577255)