பிரதமர் அலுவலகம்

மக்களுக்கான மருந்துகளை வழங்கும் பிரதமர் தேசிய திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

Posted On: 07 MAR 2019 3:06PM by PIB Chennai

மக்களுக்கான மருந்துகளை வழங்குவதற்கான பிரதமர் தேசிய திட்டத்தினால் பயனடைந்தோருடனும் மற்றும் மக்களுக்கான மருந்து விற்பனையகங்களின் உரிமையாளர்களுடனும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சியின் மூலம் கலந்துரையாடினார். பொதுவான மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்கவும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2019-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதியை மக்களுக்கான மருந்து தினமாக அனுசரிப்பதென மத்திய அரசு முடிவெடுத்திருந்தது.

நாடெங்கிலும் இருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பயனாளிகள் மற்றும் விற்பனையக உரிமையாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய பிரதமர் குறைந்த விலையில் உயர்தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு இரண்டு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது  என்று குறிப்பிட்டார். முதலாவதாக, 850 அத்தியாவசியமான மருந்துகளின் விலைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன; இதய நோய்க்கான ஸ்டெண்ட் மற்றும் மூட்டு அறுவைசிகிச்சைக்கான கருவிகள் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன. இரண்டாவதாக, நாடு முழுவதிலும் மக்கள் மருந்து விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் ஏழைகளுக்கு மட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெருமளவிற்குப் பயன்தரும் வகையில் அமைந்தன என பிரதமர் கூறினார்.

இந்த மக்கள் மருந்து விற்பனை மையங்களில் சந்தை விலையை விட ஐம்பது முதல் தொண்ணூறு சதவீதம் குறைவான விலையில் மருந்துகள் கிடைக்கின்றன என்றும் பிரதமர் கூறினார். கடந்த நான்கரை ஆண்டுகளில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் மருந்து விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார். இந்த மையங்கள் நல்ல தரமான மருந்துகளை மட்டும் வழங்கவில்லை; சுய வேலைவாய்ப்பையும் புதிய வேலைகளுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சுகாதாரத் துறையின் முழுமையான மாற்றம் குறித்த தொலைநோக்கு பற்றிப் பேசிய பிரதமர் இந்த விஷயத்தில் “தள்ளிப்போடுவதல்ல தீர்வுகளைத் தருவதே” என்பதே அரசின் அணுகுமுறையாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்டார். இத்துறையை மாற்றி அமைப்பதற்காக இத்துறையோடு தொடர்புடைய அனைவருமே இணைந்து செயல்பட்டு வருகின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கடந்த நான்கரை ஆண்டுகளில் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன; அல்லது கட்டப்பட்டு வருகின்றன என்றும் மருத்துவத் துறையில் 31,000 எம் பி பி எஸ் மற்றும் பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமருடன் கலந்துரையாடிய பயனாளிகள் மக்கள் மருந்து விற்பனை மையங்களில் நல்ல தரமான மருந்துகள் கிடைப்பது குறித்த தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முறையான மருத்துவ கவனிப்பைப் பெறும் அதே நேரத்தில் குறைந்த விலையில் மருந்துகளை பெற முடிவதன் விளைவாக தங்களால் சேமிக்க முடிந்துள்ளது என்றும் பயனாளிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

----

 


(Release ID: 1568349)