பிரதமர் அலுவலகம்

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மக்களோடு இணைப்பதே இந்தியாவின் உண்மையான பலம்: 106 ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் உரை

Posted On: 03 JAN 2019 2:16PM by PIB Chennai

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மக்களோடு இணைப்பதே இந்தியாவின் உண்மையான பலம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இன்று தொடங்கிய 106 ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் துவக்க உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த ஆண்டுக்கான இந்திய அறிவியல் மாநாட்டின் மையக் கருத்து வருங்கால இந்தியா: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்பதை சுட்டிக்காட்டினார்.

ஆச்சாரியாஸ் ஜே சி போஸ், சி வி ராமன், மேகநாத் சாஹா, மற்றும் எஸ் என் போஸ் போன்ற கடந்த கால இந்திய விஞ்ஞானிகளை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர், குறைந்த அளவிலான நிதி ஆதாரத்தோடு கடும் போராட்டத்திற்கு இடையே மக்களுக்கு இவர்கள் பணியாற்றி வந்ததாக கூறினார்.

தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தேசத்தின் கட்டமைப்பு விஷயங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது நூற்றுக்கணக்கான இந்திய விஞ்ஞானிகளின் வாழ்வு மற்றும் பணியின் உதாரணங்களாக திகழ்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.

நவீன கால அறிவியல் எனும் கோயில் மூலமாகத்தான் இப்போதுள்ள நமது வளர்ந்து வரும் இந்தியா பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி செல்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் திரு லால்பகதூர் சாஸ்திரி, திரு அடல் பிஹாரி வாஜ்பேயி ஆகியோரை நினைவுகூர்ந்த பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் ஜெய் ஜவான், ஜெய் கிஷான் என்ற முழக்கத்தை நமக்கு தந்ததாகவும், அடல் பிஹாரி வாஜ்பேயி ஜெய் விஞ்ஞான் என்ற முழக்கத்தை அதில் சேர்த்ததாகவும் குறிப்பிட்டார்.  இந்த முழக்கங்களோடு இப்போது ஜெய் அனுசந்தன் என்ற முழக்கத்தை இப்போது இணைப்பதற்கு நேரம் கனிந்து விட்டதாக குறிப்பிட்டார்.

அறிவியலின் நோக்கம் நிறைவேறுவதற்கு இரண்டு முக்கிய அம்சங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, விஞ்ஞான அறிவு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், இரண்டாவதாக இந்த விஞ்ஞான அறிவு சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அறிவியல் கண்டுபிடிப்பு சூழ்நிலைகளை மேம்படுத்தும் அதேவேளையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில் நிறுவனங்களை துவக்குவது போன்றவற்றில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.  நமது விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசு அடல் புதுமைத் திட்டம் துவக்கி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  கடந்த 40 ஆண்டுகளை விட, கடந்த நான்காண்டுகளில் அதிக  எண்ணிக்கையிலான தொழில்நுட்ப வர்த்தக மையங்கள் துவக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

குறைந்த செலவிலான மருத்துவ சேவை, வீடு, தூய்மையான காற்று, குடிதண்ணீர், எரிசக்தி, வேளாண் உற்பத்தி மற்றும் உணவுப்பதப்படுத்துதல் துறைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நமது விஞ்ஞானிகள் உறுதிபூண வேண்டும் என்று  பிரதமர் கேட்டுக் கொண்டார்.  அறிவியல் என்பது உலகளாவிய விஷயம் என்றாலும், தொழில்நுட்பம் என்பது உள்நாட்டு மக்களின் தேவைகள் மற்றும் நிலைமைகளுக்கு தீர்வுகள் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதிக புள்ளி விவரங்களை பகுத்தாய்வு செய்வது, செயற்கை நுண்ணறிவு, அனைத்து தகவலும் ஒரே ஏட்டில் இடைவெளி இன்றி தொடர்ந்து பதிவிடப்பட்டு இருக்கக்கூடிய குறியாக்கப்பட்ட (Block Chain) தொழில்நுட்பம் ஆகியவை வேளாண் துறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.  குறிப்பாக குறைந்த அளவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார் பிரதமர்.

மக்கள் சிரமமின்றி வாழ்வதற்கு விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.  குறைந்த மழைப்பொழிவு உள்ள இடங்களில் வறட்சி மேலாண்மை, இயற்கை பேரழிவு பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்வது, ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிப்பது, யானைக்கால் நோய் போன்ற நோய்களை தடுக்க பாடுபடுவது தூய்மையான எரிசக்தி, தூய்மையான குடிநீர் மற்றும் இணைய தள பாதுகாப்பு போன்றவற்றுக்கு விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும் என்றார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு கால வரையறுடன் கூடிய தீர்வுகளை விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

2018 ஆம் ஆண்டு இந்திய அறிவியலின் முக்கிய சாதனைகளை பிரதமர் பட்டியலிட்டார். 

  • உயிரி விமான எரிபொருள் உற்பத்தி
  • திவ்ய நாயன் என்ற பார்வையற்றோர் படிக்கும் கருவி
  • முதுகுத்தண்டு புற்றுநோய், காசநோய் மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்க குறைந்த செலவிலான கருவிகள் கண்டுபிடிப்பு
  • சிக்கிம்-டார்ஜிலிங் மலைப் பிராந்தியத்தில் மண்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவி

 

நமது அறிவியல் மற்றும் மேம்பாடு சாதனைகளை வர்த்தக ரீதியில் தொழில்துறை உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கு வலுவான வழிவகைகளை கண்டறிய வேண்டும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். கலை மற்றும் மானுடவியல், சமுதாய அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

நமது தேசிய ஆய்வகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் மையம் உள்ளிட்ட நிறுவனங்கள் நமது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முதுகெலும்பாக திகழ்வதாக குறிப்பிட்ட பிரதமர், மாநில பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வலுவான ஆராய்ச்சி சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

மூவாயிரத்து 600 கோடி ரூபாய் முதலீட்டில் பலதுறை இணைய கட்டமைப்பு தேசிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார்.  ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதவளம் மற்றும் திறன் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், புதிய நிறுவனங்களை துவக்குவதற்கான சூழல், வலுவான தொழில்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகள் போன்றவைகள் மேம்பட இந்த திட்டம் உதவும் என்றார்.

கார்ட்டோசாட்-2 மற்றும் பிற செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர்,  விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளையும் பட்டியலிட்டார்.  2022 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மூன்று மனிதர்களை அனுப்புவதற்கு உண்டான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள், இதுதொடர்பான அமைச்சகங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு உதவுவதற்காக பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் ஆலோசனைக் குழு உதவும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

பிரதமரின் ஆராய்ச்சித் திட்டத்தின்கீழ் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் இந்திய அறிவியல் மையம் ஆகியவற்றில் நேரடியாக முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆயிரக்கணக்கான திறமை வாய்ந்த இளையோர்கள்  அனுமதிக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை மூலம் ஆராய்ச்சியினுடைய திறன் மேம்படுவதோடு, நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

*************

ஏடிஜி / வேணி



(Release ID: 1558466) Visitor Counter : 1261