பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேசத்தில் பாக்பட்டில் கிழக்கு புறவழி விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
प्रविष्टि तिथि:
27 MAY 2018 6:46PM by PIB Chennai
அன்னை இந்தியாவுக்கு வெற்றி!
இங்கே பெருமளவில் கூடியிருக்கும் என் அன்புக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே ,
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அளவற்ற ஆதரவை அளித்து நாட்டுக்கு சேவையாற்றும் வாய்ப்பை எனக்கு நீங்கள் தந்தீர்கள். எங்கள் அரசு இந்த நாட்டை சரியான திசையில் வெற்றிகரமாக வழிநடத்திச் செல்கிறது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. வெயில் கொளுத்தும் மே மாதத்தில் உங்களுடைய ஆசிகளை அளிப்பதற்காக இங்கே இவ்வளவு பெருமளவில் நீங்கள் திரண்டிருப்பதன் மூலம் அது நிரூபணம் ஆகியிருக்கிறது.
சகோதர சகோதரிகளே,
சேவகன் மீது எஜமானருக்கு ஏற்பட்டுள்ள திருப்தியின் விளைவாகத்தான் நீங்கள் அன்பும் பாசமும் காட்டியிருக்கிறீர்கள். பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 4 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள நிலையில், 125 கோடி இந்தியர்களுக்கான தலைமை சேவகன் மீண்டும் ஒரு முறை தலைவணங்கி வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி தலைநகரப் பிராந்தியத்தில் உள்ள பாக்பத் மக்களுக்கு இன்றைய நாள் முக்கியமான நாள். இரண்டு முக்கிய சாலைத் திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன - டெல்லி - மீரட் விரைவு சாலையின் முதலாவது பகுதியும், கிழக்கு புறவழி விரைவு சாலையும் அர்ப்பணிக்கப் பட்டுள்ளன. கிழக்கு புறவழி விரைவு சாலைக்கு ரூ.11000 கோடி செலவிடப் பட்டுள்ளது. டெல்லி - மீரட் விரைவு சாலையின் சமீபத்திய பகுதிக்கு ரூ.850 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் முழு திட்டத்துக்கும் ரூ.5000 செலவாகும். இன்றைக்கு, இந்தப் புதிய சாலையில் நடந்து வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தபோது, 14 பாதைக்கோடுகள் உள்ள இந்த சாலையில் பயணம் செய்வது டெல்லி தலைநகர பிராந்திய மக்களின் வாழ்வை இலகுவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கான்கிரீட் மற்றும் பசுமை இங்கே இணைந்திருக்கின்றன.
சகோதர சகோதரிகளே,
இந்தப் பணியை முடிப்பதற்கு 18 மாதங்கள் மட்டும் தான் ஆனது. இன்றைக்கு 9 கிலோ மீட்டர் நீளம் உள்ள 14 பாதைக்கோடுகள் கொண்ட இந்தச் சாலை திறக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், 9 கிலோ மீட்டர் பாதையும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பட்பர்கஞ்ச், மயூர் விஹார், காஜியாபாத், இந்திரபுரம், வைசாலி மற்றும் நொய்டா மக்களுக்கு இது தெரியும். இந்த 9 கிலோ மீட்டர் நீளத்துக்கான சாலைப் பணி முடிக்கப்பட்ட அதே வேகத்தில், மீரட் வரையிலான இரண்டாவது கட்ட விரைவு சாலை பணிகளும் வேகமாக முடிக்கப்படும். அது முடிந்தவுடன் மீரட்டில் இருந்து டெல்லிக்கான தொலைவை வெறும் 40 - 45 நிமிடங்களில் கடந்துவிட முடியும்.
நண்பர்களே,
டெல்லி தலைநகர பிராந்தியம் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையால் மட்டுமின்றி, அதிக மாசுபாடு பிரச்சினைகளையும் எதிர்கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு அது அபாயகரமாக மாறி வருகிறது. டெல்லியில் நுழையும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களும், போக்குவரத்து நெரிசலும், இந்த மாசுபாடு அதிகரிப்புக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருக்கின்றன. இந்தப் பிரச்சினையை முக்கியமானதாகக் கருதி, டெல்லியை சுற்றி விரைவு சாலைகள் அமைப்பதற்கு எங்கள் அரசு திட்டமிட்டது. அது 2 கட்டங்களாகச் செய்யப்படும். அதன் முதலாவது கட்டத்தை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதாவது, சில நொடிகளுக்கு முன்பு கிழக்கு புறவழி விரைவு சாலையை தொடங்கி வைத்தேன்.
சகோதர சகோதரிகளே,
டெல்லியில் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையை ஏறத்தாழ 30% அளவுக்கு இந்த விரைவு சாலை குறைத்துவிடும். அந்த வாகனங்கள் புறவழிச் சாலையில் சென்றுவிடும். பெரிய வாகனங்களும் லாரிகளும் மட்டுமின்றி, 50 ஆயிரம் கார்களும் டெல்லியில் நுழையத் தேவையில்லாத வகையில் ஒரு நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், அணுகுதலை கட்டுப்படுத்தும் இயற்கையான பசுமை விரைவு சாலை என்ற அந்தஸ்தைக் கொண்ட, நாட்டில் முதலாவது சாலையாக கிழக்கு புறவழி விரைவு சாலை இருக்கிறது. இந்தச் சாலை வெறும் 500 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய திட்டங்கள் இப்போது உங்கள் சேவைக்குத் தயாராக உள்ளன. இவற்றில் அதிநவீன தொழில்நுட்பங்கள் சேர்ந்துள்ளன. சூரியஒளி மின்சக்தி மூலம், மின்சாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அதாவது, இது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்துவதோடு மட்டுமின்றி மாசுபாட்டையும் குறைக்கிறது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு பால், காய்கறிகள், உணவு தானியங்களைக் கொண்டு செல்வது எளிதாகிவிடும்.
சகோதர சகோதரிகளே,
125 கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் நவீன கட்டமைப்பு வசதிகளுக்கு கணிசமான பங்கு உள்ளது. 'அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம்' என்பதை நோக்கிய பாதையை திறப்பதாக இது இருக்கிறது; ஏனெனில் கட்டமைப்பு வசதிகளில் சாதி, இனம், ஏழை, செல்வந்தர் என்ற வித்தியாசம் கிடையாது. எல்லோருக்கும் சமமான வாய்ப்புகளை இது உருவாக்குகிறது. எனவே, நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், விமானப் போக்குவரத்து, நீர்வழித் தடங்கள் மற்றும் மின்சாரம் தொடர்பான கட்டமைப்பு வசதிகளுக்கு எங்கள் அரசாங்கம் பிரதானமாக முக்கியத்துவம் அளித்துள்ளது.
நண்பர்களே,
கடந்த 4 ஆண்டுகளில் 28000 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளத்துக்கு புதிய நெடுஞ்சாலைகளை உருவாக்குவதற்கு நாங்கள் 3 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறோம். நீங்களும், எனது நாட்டு மக்களும் இதை கவனமாகக் கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு வரையில், நாளொன்றுக்கு 12 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. இன்றைக்கு நாளொன்றுக்கு 27 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. பாரத் மாலா திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், சுமார் 35 ஆயிரம் கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. சொல்லப்போனால், நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி ரயில்பாதைகளும், முன் எப்போதும் இல்லாத வேகத்தில் அமைக்கப் படுகின்றன. முன்பு ரயில் தொடர்பு இல்லாத பகுதிகளில், பரவலாக பாதை வசதிகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஒற்றை வழித் தடங்களை, இரட்டை ரயில் பாதைகளாக மாற்றுவது, மீட்டர் கேஜ் பாதைகளை, பிராட் கேஜ் பாதைகளாக மாற்றுவது ஆகியவற்றில் முயற்சிகளை வேகப்படுத்தி வருகிறோம். ரயில்களின் வேகமும் அதிகரிக்கப் படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 5500 ஆளில்லா லெவல் கிராசிங்குகளை அகற்றியிருக்கிறோம்.
சகோதர சகோதரிகளே,
விமான பயணச் செலவைக் குறைக்கவும், புதிய விமான பயண வழித்தடங்களை உருவாக்கவும் புதிதாக உதான் (UDAN) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுமார் ஒரு கோடி பேர் விமானங்களில் பயணம் செய்திருக்கின்றனர்; ரயில்களில் ஏ.சி. வகுப்புகளில் பயணம் செய்தவர்களைவிட இது அதிகம். கடந்த 4 ஆண்டுகளின் விவரங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன். சாதாரண செருப்பு அணிந்தவர்கள் கூட விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு, குறைந்த செலவில் பயணம் செய்யும் வசதியை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாட்டில் உள்ள நீர்வழித் தடங்களின் வாய்ப்புகளையும் அதிகபட்ச அளவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். நாடு முழுக்க விரைவில் 100 நீர்வழித் தடங்கள் உருவாகும். இப்போது உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதியில் கப்பல்கள் செல்கின்றன. கங்கை நதியின் மூலம் உத்தரப்பிரதேச மாநிலம் நேரடியாக கடலுடன் இணைக்கப்படும். விரைவில் பெரிய சரக்கு கப்பல்கள் நாட்டின் முக்கிய துறைமுகங்களுக்கு வந்து செல்லும். கங்கை நதியைப் போலவே, யமுனா நதிக்கும் ஒரு புதிய திட்டம் உருவாக்கப் படுகிறது.
நண்பர்களே,
புதிய போக்குவரத்து நடைமுறைகள் எங்கே உருவாக்கப்பட்டாலும், தொழிற்சாலை வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப் படுகின்றன. இதை மனதில் கொண்டு, உத்தரப்பிரதேசத்தில், புதிய பாதுகாப்புத் தொழில் மண்டலம் உருவாக்குவதற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறோம். இந்த மண்டலம் ஆக்ரா, அலிகார், லக்னோ, கான்பூர், ஜான்சி மற்றும் சித்ரகூட் வரையில் பரவி இருக்கும். இந்த மண்டலங்களில் மட்டும் ஏறத்தாழ இரண்டரை லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்படும்.
நண்பர்களே,
புதிய இந்தியாவை உருவாக்குவதில் அனைத்துமே இளைஞர்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே செய்யப் படுகின்றன. நாட்டில் அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட் வசதி கிடைக்கச் செய்வதற்காக பாரத்நெட் திட்டத்தின் கீழ் துரித வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நமது அரசு எவ்வளவு வேகமாக செயல்பட்டு வருகிறது என்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம். நெடுஞ்சாலை மேம்பாட்டில் நான் அளித்த ஒப்பீட்டு விவரங்களைப் போலவே, மற்றொரு விவரத்தையும் நான் அளிக்க விரும்புகிறேன். அதைக் கவனிப்பது பயனுள்ளதாக இருக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 59 அல்லது சராசரியாக 60 பஞ்சாயத்துகளுக்கு மட்டுமே ஆப்டிக்கல் பைபர் நெட்வொர்க் இணைப்பு தரப்பட்டது. நாங்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறோம். ஒரு பக்கம் 60க்கும் குறைந்த கிராமங்கள். மற்றொருபுறம் நான்கு ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள்! பணிகள் எப்படி செய்யப்படுகின்றன என்பதை நாடு தெளிவாகக் காண முடியும். மேக் இன் இந்தியா திட்டம், உற்பத்தித் துறைக்கு ஓர் உந்துதலைத் தந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் செல்போன்கள் தயாரிக்க வெறும் 2 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. இப்போது எந்த நிலையை எட்டியிருக்கிறோம் என்று நீங்களே பாருங்கள். அப்போது வெறும் 2 தொழிற்சாலைகள் மட்டுமே செல்போன்கள் தயாரித்தன. இன்றைக்கு 120 தொழிற்சாலைகள் செல்போன்கள் தயாரிக்கின்றன. அவற்றில் பலவும் NCR என்ற தலைநகர பிராந்தியத்தில் உள்ளன. அவை பல இளைஞர்களுக்கு வேலைகள் தந்துள்ளன. அவர்களில் சிலர் இன்றைக்கு இங்கிருக்கலாம்.
நண்பர்களே,
உற்பத்தித் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அல்லது MSME-கள் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன. வேளாண்மைத் துறைக்கு அடுத்தபடியாக MSME துறை பெருமளவில் வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. உ.பி.யில் சுமார் 50 லட்சம் தொழில் நிறுவனங்களின் நெட்வொர்க் உள்ளது. இந்தத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் இணைந்து பணியாற்றுகின்றன. MSME துறைக்கு பெரிய அளவில் வரிச் சலுகைகளையும் மத்திய அரசு அளித்துள்ளது. யோகி ஜி தலைமையின் கீழ் உத்தரப்பிரதேச அரசு பெரிய முயற்சி ஒன்றை எடுத்திருக்கிறது. `மாவட்டத்துக்கு ஓர் உற்பத்திப் பொருள்' என்ற திட்டம் இதில் குறிப்பிடத்தக்கது. ஸ்கில் இந்தியா மிஷன், ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களிலும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திலும் உத்தரப்பிரதேச அரசின் முயற்சிகளுக்கு, தனது பங்களிப்பைச் செய்வதற்கு மத்திய அரசு ஒரு செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
நண்பர்களே,
சரியான பாதுகாப்பு நடைமுறை அமலில் இருந்தால் தான் தரமான தொழில், வர்த்தகம் சாத்தியமானதாக இருக்கும். கடந்த கால சூழ்நிலைகளுக்கு மேற்கு உத்தரப்பிரதேச மக்கள் சாட்சிகளாக உள்ளனர். இன்றைக்கு யோகி ஜி தலைமையின் கீழ், கிரிமினல்கள் அரசிடம் சரணடைந்து வருகிறார்கள். எதிர்காலத்தில் எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என கிரிமினல்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். இதற்காக யோகி ஜி மற்றும் மனோகர்லார் ஜி ஆகியோரை பாராட்ட நான் விரும்புகிறேன். உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்துவதற்கு அவர்கள் எடுத்திருக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. கிரிமினல்களை கண்காணிக்கும் ஒரு நடைமுறையை அற்புதமாக தொடர்புபடுத்தி இருக்கிறார்கள்! முன்பு இங்கே குற்றச் செயலில் ஈடுபட்டுவிட்டு அடுத்த மாநிலத்திற்கு சென்று ஒளிந்து கொள்வார்கள் அல்லது அங்கே குற்றம் செய்துவிட்டு இங்கே வந்துவிடுவார்கள். இருந்தாலும், இதுபோன்ற செயல்களுக்கு முடிவு கட்டும் வகையில் அனைத்து வழிகளையும் அவர்கள் அடைத்துவிட்டனர். அவர்கள் இருவரையும் நான் பாராட்டுகிறேன்.
சகோதர சகோதரிகளே,
மகளிருக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 7.5 கோடி கழிப்பறைகள், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 4 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் ஆகியவை பெண்களின் வாழ்க்கை நிலையை எளிதாக்கி இருக்கின்றன. முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 13 கோடி கடன்களில் 75% பெண் தொழில் முனைவோருக்கு வழங்கப் பட்டுள்ளன. 13 கோடி கடன்களில் 75% அளவுக்கு நாட்டின் மகள்கள், சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கு கிடைத்திருப்பது பற்றி யாராவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் நமது பெண்களை கவுரவப்படுத்தி, அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்திருக்கிறோம்.
நண்பர்களே,
பெண்கள் மட்டுமின்றி, தலித்கள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகாரம் கிடைப்பதற்கான சமூக பாதுகாப்பு அல்லது சுயவேலை வாய்ப்பு போன்றவை கிடைப்பதற்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் பல முக்கியமான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தரப்பட்ட கடன்களில் பாதிக்கும் மேற்பட்டவை தலித்களுக்கும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் தரப்பட்டுள்ளன. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் தலித் மற்றும் பெண் தொழில்முனைவோரும் பயன் பெற்றுள்ளனர். பாபாசாஹிப் அம்பேத்கருடன் தொடர்புடைய ஐந்து இடங்களை பஞ்சதீர்த்தம் அல்லது புனித யாத்திரைக்கான 5 இடங்கள் என்று நாங்கள் உருவாக்கியது எங்கள் அரசுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.
சுயநல அரசியல் செய்பவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசியலை அல்லது கவர்ச்சி அரசியலை செய்கிறார்கள் என்பதை என்னுடைய அனுபவத்தின் மூலம் நான் உறுதியாகக் கூற முடியும். அதே சமயத்தில், தலித்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூகத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் பற்றி உண்மையான அக்கறை கொண்ட ஒருவர், அவர்களின் நலன் சார்ந்த அரசியலில் ஈடுபடுவாரே தவிர, கவர்ச்சி அரசியலில் ஈடுபட மாட்டார். வாய்ப்புகள் அளிப்பதுடன் மட்டுமின்றி, எனது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைப்பதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கல் பல முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறோம்.
தலித்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்த சட்டங்களை நாங்கள் மேலும் கடுமையானதாக ஆக்கி இருக்கிறோம். தலித்களுக்கு எதிரான கொடுமை என கருதப்படும் செயல்களின் பட்டியலில் 22 செயல்களில் இருந்து 47 ஆக அதிகரித்திருக்கிறோம். தலித்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிய வழக்குகளை வேகமாக விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப் படுகிறது.
சகோதர சகோதரிகளே,
பிற்படுத்தப்பட்ட சாதிகளை, உட்பிரிவுகளாக வகைப்படுத்துவதற்கு ஒரு கமிஷன் அமைக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் அதிகம் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வி நிலையங்களில், இடஒதுக்கீட்டு கிடைப்பதற்கு, வரையறைகளுக்கு உள்பட்டு சிறந்த வசதிகளை உருவாக்க அரசு விரும்புகிறது. எனவே, ஓ.பி.சி.களில் துணை பிரிவுகளை வகைப்படுத்துவதற்கு இந்தக் கமிஷனை நாங்கள் அமைத்திருக்கிறோம்.
நண்பர்களே,
ஓ.பி.சி. கமிஷனுக்கு அரசியல்சாசன அந்தஸ்தை கொடுப்பதற்கும் அரசு விருப்பம் கொண்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக ஓ.பி.சி. சமூகத்தவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்து வருகின்றனர். ஆனால், அதுபற்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கண்டுகொள்ளவில்லை. அதற்கு மாறாக, நாங்கள் புதிய சட்டம் உருவாக்கி இருக்கிறோம். ஓ.பி.சி. கமிஷனுக்கு அரசியல்சாசன அந்தஸ்து அளிப்பதற்கு முக்கியமான சட்டங்களை நாடாளுமன்றத்தில் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் அதை ஆதரிக்கவில்லை. எனவே அவர்கள் தடையாக நின்றார்கள். அதனால், அந்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால், மோடி எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக முழுமை பெறும் என்று ஓ.பி.சி. சமூக மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.
சகோதர சகோதரிகளே,
உண்மை என்னவென்றால், ஏழைகள், தலித்கள், பிற்படுத்த வகுப்பினர் மற்றும் மலைவாழ் மக்களின் நன்மைக்காக எதைச் செய்தாலும் அதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் தோழைக் கட்சிகள் தடையாக இருக்கும். நாட்டின் வளர்ச்சியைக் கூட அவர்கள் பரிகாசம் செய்வார்கள். தூய்மை இந்தியா திட்டத்தை ஒரு ஜோக் போல அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஏழைப் பெண்களுக்கு கழிவறை கட்டியதை ஜோக் போல எடுத்துக் கொண்டார்கள். ஏழைப் பெண்களுக்கு எங்கள் அரசாங்கம் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு கொடுத்ததையும் கூட அவர்கள் உண்மையில் கேலி செய்தனர். ஏழைகளுக்கு விரோதமான மனநிலை கொண்டவர்கள் , நாங்கள் ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் கொடுத்ததையும் கூட கேலி செய்தார்கள். முதலாளித்துவ மனநிலை கொண்டவர்களுக்கு, ஏழைகளுக்காக எதைச் செய்வதைப் பார்த்தாலும் ஜோக் போலத்தான் நினைக்கிறார்கள். அமைச்சரவைத் தாள்களைக் கிழித்து எறிந்தவர்கள், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மதிப்பு தருவதில் நம்பிக்கை இல்லாதவர்கள்.
இன்றைக்கு, அரசியல் ஆதாயங்களைத் தேடுபவர்கள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் பற்றியும் கூட அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள். இந்தப் பொய்களால் ஏற்படக் கூடிய ஸ்திரத்தன்மை பாதிப்பு பற்றியும் கூட அவர்கள் சிந்திக்கவில்லை. இட ஒதுக்கீடு அல்லது தலித்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிய சட்டங்கள் குறித்து அவர்கள் புரளிகளை பரப்பி மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். மக்கள் மத்தியில் அவர்கள் புதிதாக ஒரு பொய்யை பரப்பி வருவதாக நான் கேள்விப்பட்டேன். அநேகமாக இந்தப் பகுதி மக்களுக்கும் அது வந்திருக்கலாம். தங்கள் விவசாய நிலத்தை குத்தகைக்கு விட்டாலோ அல்லது சாகுபடி பகிர்தல் முறையை கையாண்டாலோ அவர்களுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்று அவர்கள் புரளியை பரப்பி வருகிறார்கள். தோல்வியடைந்து வரும் அரசியல் கட்சியினர், இதுபோன்ற மோசமான அரசியல் செய்ய வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவ்வளவு பொய்களை பரப்புகிறார்கள்! எனது நாட்டு விவசாயிகளை அவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள். நீங்கள் செய்யும் பாவத்தின் அளவை நீங்கள் அறிந்திருக்கவில்லை. அதுபோன்ற புரளிகளில் கவனம் செலுத்த வேண்டாம் எனது விவசாய சகோதர, சகோதரிகளை நான் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற புரளிகள் பரப்புவோருக்கு எதிராகப் புகார் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற புரளிகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்களுக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன்.
நண்பர்களே,
எங்கள் அரசு 'Gramoday Se Bharat Uday'- என்ற கோட்பாட்டை நோக்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறது. கிராமோதயம் என்ற கோட்பாட்டில் எனது நாட்டின் விவசாயிகள், கிராமங்களின் சிறிய தொழிலாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள் பற்றி கவனம் செலுத்தப்படும். கிராமங்கள் மற்றும் பண்ணைகளை பலப்படுத்தும் திட்டத்துக்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் 14 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சொல்லப்போனால், 100% வேம்பு தடவிய யூரியா, பிரதமரின் சிஞ்சய் திட்டம், பிரதமரின் பசல் பீமா திட்டம் ஆகியவை விவசாயிகளுக்கு பயன் தந்து, மறு உத்தரவாதத்தையும் தந்திருக்கின்றன. விவசாயிகளின் உற்பத்திச் செலவைவிட 1.5 மடங்கு விலை அளிப்பதற்கு எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. புதிய MSME விதிகளின் கீழ் அதிகபட்ச அளவிலான பொருட்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் வகையில் சட்டங்களை உருவாக்கிய இரண்டு முதல்வர்களையும் நான் பாராட்டுகிறேன். முந்தைய அனைத்து சாதனைகளையும் அவர்கள் முறியடித்துவிட்டனர். விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் இரண்டு முதல்வர்கள் மற்றும் இரண்டு அரசுகளையும் நான் பாராட்டுகிறேன்.
விளைநிலங்களில் இருந்து சந்தைக்குகொண்டு செல்லும் வழியில் உணவு தானியங்கள் வீணாவதைத் தடுப்பதற்கு ரூ.6000 கோடி முதலீட்டில் Pradhan Mantri Kisan Sampada Yojana என்ற திட்டம் குறித்து நாங்கள் பணிகள் மேற்கொண்டிருக்கிறோம். இந்தத் திட்டம் மேற்கு உ.பி.யில் உள்ள உருளைக் கிழங்கு விவசாயிகளுக்கு அதிக பயன் தருவதாக இருக்கும். இந்த பட்ஜெட்டில் `ஆபரேசன் கிரீன்' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருள்கள் வழங்கல் சங்கிலித் தொடர் முறை தொடர்பானது இந்தத் திட்டம். பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இதன் மூலம் அதிக பலன்கள் கிடைக்கும்.
சகோதர சகோதரிகளே,
இயற்கை விவசாயம், தேனீ வளர்ப்பு, சூரியசக்தி மூலமான வேளாண்மை போன்ற நவீன தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப் படுகின்றன. வேளாண்மையின் இந்த துணைப் பிரிவுகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எளிதில் கடன் பெறுவதற்காக, விரிவான திட்டங்கள் வரையறை செய்யப்படுகின்றன.
கரும்பு விவசாயிகளுக்காகவும் எங்கள் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு கரும்புக்கான கொள்முதல் விலையை நாங்கள் 11% உயர்த்தினோம். இதனால் 5 கோடி கரும்பு விவசாயிகள் நேரடியாக பயன் பெற்றனர். நாட்டின் எத்தனால் கொள்கையில் புரட்சிகரமான மாறுதல்களை செய்ததன் மூலம், பெட்ரோலில் 10% எத்தனால் கலக்க ஒப்புதல் தரப்பட்டது. விவசாயிகளுக்கு கரும்புக்கான பணம் பட்டுவாடா செய்வதை சர்க்கரை ஆலைகள் தாமதப்படுத்தக் கூடாது என்று சமீபத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.5.50 என்ற அளவில் சர்க்கரை ஆலைகளுக்கு மானியம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த மானியம் சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு அளிக்கப்படாது. அது தவறாக பயன்படுத்தப்படும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். சர்க்கரை ஆலைகளுக்கு மானியம் தருவதற்குப் பதிலாக, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இந்த வகையில், விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி சர்க்கரை ஆலைகளிடம் சிக்கிவிடாமல் இருக்கும். கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதையும், அவற்றைத் தீர்ப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்பதையும் இங்குள்ள கரும்பு விவசாயிகளுக்கு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதர சகோதரிகளே,
நமது நகரங்களை 21வது நூற்றாண்டுக்காக தயார் செய்வதற்கும், அத்துடன் நமது கிராமங்களின் வளர்ச்சிக்கும் ஆயத்தம் செய்து வருகிறோம். ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் AMRIT திட்டம் மூலம் நகரங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகள் பலப்படுத்தப் படுகின்றன. நகரங்களில் வாழும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வீடுகள் வழங்குவதற்கு நாங்கள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். காங்கிரஸ் அரசுகளுடன் ஒப்பிடும் போது, இந்த விஷயத்தில் நாங்கள் துரித வேகத்தில் பணியாற்றி வருகிறோம். 10 ஆண்டுகளில், அதாவது 2004 முதல் 2014 வரையில், சராசரியாக நகர்ப்புறங்களில் 13.5 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் 46 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் தந்து, ஏறத்தாழ 50 லட்சத்தை எட்டியிருக்கிறோம். காங்கிரஸைவிட நாங்கள் 3 மடங்கு அதிகம் பணியாற்றி இருக்கிறோம். நகர்ப்புறங்களில் 10 ஆண்டுகளில் 5.5 லட்சம் வீடுகளின் சாவிகளை காங்கிரஸ் ஒப்படைத்திருக்கிறது. ஆனால் எங்கள் அரசு 4 ஆண்டுகளுக்குள் நகர்ப்புறங்களில் 8 லட்சம் வீடுகளின் சாவிகளை ஒப்படைத்துள்ளது.
சகோதர சகோதரிகளே,
மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கு நகர்ப்புற கட்டமைப்பு திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. ஒரே குடும்பத்தின் 38 ஆண்டு கால ஆட்சியில், நகர்ப்புறங்களில் திட்டமிடப்படாத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். பிரச்சினை எங்கே இருக்கிறது என்று நாம் அறிவோம். நகரங்களில் இருந்து கழிவுநீரை அகற்றுவதற்கு அல்லது சுத்திகரிப்பு செய்வதற்கு சரியான ஒரு நடைமுறை இல்லை. நகரங்களில் இருந்து வரும் குப்பைகளை நமது நதிகள் எடுத்துச் சென்று கடல்களில் சேர்க்கின்றன. குறிப்பாக, நமது அன்னை கங்கை நதி, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழிற்சாலை மாசுபாடு ஆகியவற்றின் பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே, எங்கள் அரசு நமாமி கங்கை திட்டத்தை தொடங்கியுள்ளது. கங்கையின் தூய்மை பற்றி மட்டும் அரசு வலியுறுத்தவில்லை. நதியில் குப்பை எதுவும் கொட்டப்படாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது. இதுவரையில் ரூ.21000 கோடி மதிப்பிலான 200க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், கங்கை நதியின் ஓரம் அமைந்துள்ள கிராமங்களில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்குவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. அன்னை கங்கை நதி பாயும் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பிகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஏராளமான கிராமங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப் பட்டுள்ளது.
நண்பர்களே,
கங்கையை சுத்தம் செய்வதற்கு கடந்த காலத்தில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருந்தபோதிலும், அரசு வெறுமனே பேசியதே தவிர, செயலில் காட்டவில்லை. இதுதான் எங்களுடைய பணியாற்றும் கலாசாரம். இதுதான் எங்களுடைய மூலதனம். பாடுபட்டு உழைத்த பொது மக்களின் ஒவ்வொரு பைசாவும் அவர்களுக்காக செலவு செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். எனவே, அமைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்துமே சரியாக செயல்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய நாங்கள் முயற்சி செய்கிறோம். ஏனென்றால், அதிகபட்ச திறனுக்கு செயல்படாத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை கட்டுவது தான் காங்கிரஸின் வழக்கமாக இருந்தது. சொல்லப்போனால், குறுகிய காலம் இயங்கிய பிறகு அவை செயல்படவில்லை. அன்னை கங்கை தொடர்பான திட்டங்களில், காங்கிரஸ் வழக்கத்தை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நண்பர்களே,
15 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கக் கூடிய தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. அந்த வகையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது மட்டுமின்றி, அவை நன்றாக செயல்பட வேண்டும் என்பதும் எங்களின் நோக்கமாக உள்ளது.
சகோதர சகோதரிகளே,
நாட்டின் ஏழை, நடுத்தர வகுப்பினர், விவசாயிகள் மற்றும் இளைஞர்களை 70 ஆண்டுகளாக ஏமாற்றி வந்தவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதைக் கண்டு விரக்தி அடைந்திருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு பெரிய கூட்டம் சேர்ந்திருப்பது அவர்களுடைய தூக்கத்தை கலைத்திருக்கிறது. உண்மை என்னவென்றால், அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை, அரசியல்சாசனத்தின் கீழான அமைப்புகள் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்களுடைய மனநிலை முழுமையாக வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கைக்கு எந்த அளவுக்கு அச்சுறுத்தலாக அவர்கள் இருக்கிறார்கள் என்பது கடந்த சில தினங்களில் நாடு பார்த்திருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து அவர்கள் எந்தளவுக்கு கேள்விகள் எழுப்பினார்கள் என்பது நாட்டு மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். பாரத ரிசர்வ் வங்கி மற்றும் அதன் கொள்கைகள் பற்றியும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிறுவனங்கள் மீதான நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள். தங்கள் மீதான ஊழல்களை விசாரிக்கும் அமைப்புகள் பற்றியும் அவர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். சொல்லப்போனால், ஊடகங்கள் கூட பாரபட்சமாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
சகோதர சகோதரிகளே,
அந்த ஒரு குடும்பத்தை நம்புபவர்கள், ஒருபோதும் ஜனநாயகத்தை நம்ப முடியாது. சர்ஜிக்கல் தாக்குதலின் போது இந்திய ராணுவத்தின் துணிச்சலை ஏற்பதற்கு கூட அவர்கள் தவறிவிட்டனர். சர்வதேச அமைப்புகள் இந்தியாவைப் புகழ்ந்த நிலையில், அவர்களால் அதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு புள்ளிவிவரங்கள் தயாரித்த அதே நிறுவனங்கள், இப்போதைய அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாக புதிய புள்ளிவிவரங்களை அளிக்கும் போது, அந்த நிறுவனங்கள் பற்றியே அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வெளிநாட்டு விருந்தினர் வந்து இந்தியாவை புகழ்ந்தாலும் அவர்கள் கேள்விகள் எழுப்பி, குற்றங்கள் சொல்கின்றனர்.
நண்பர்களே,
அவர்களுடைய விரக்திக்கு என்ன காரணம் என்பதை நீங்களும் நானும் நன்கறிவோம். தங்கள் மீது மக்கள் நம்பிக்கையை இழக்கும் போது விரக்தி ஏற்படுவது இயற்கைதான். மோடியை எதிர்க்கும் போது நாட்டையும் அவர்கள் எதிர்ப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், உங்கள் நம்பிக்கை மற்றும் ஆசியை ஒருவர் பெற்றிருக்கும் போது, அதாவது 125 கோடி இந்தியர்களின் நம்பிக்கை, ஆசியைப் பெற்றிருக்கும்போது, அவர் ஒருபோதும் களைப்படையவோ அல்லது நின்றுவிடவோ மாட்டார்.
நண்பர்களே மற்றும் என் நாட்டு மக்களே,
இரண்டு தரப்பினரையும் நீங்களே மதிப்பீடு செய்யுங்கள். அந்தப் பக்கம் தங்கள் குடும்பம் தான் தங்கள் நாடு என்ற நிலை. ஆனால் எனக்கு நாடுதான் எனது குடும்பம். இந்த நாட்டின் 125 கோடி மக்கள் தான் என குடும்பத்தினர். உங்களுடைய ஆசிகள், அன்பு, நம்பிக்கையை நான் பெற்றிருக்கிறேன். எனக்கு ஒரே வேலைதான், 125 கோடி பேருக்கு சேவை செய்வதுதான் உள்ளது. உங்களுடைய ஒத்துழைப்பால்,'Shreshtha Bharat' - என்ற நமது தீர்மானம் வலுப்பெறும். இவ்வளவு அதிக அளவில் இங்கு வந்தமைக்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு திறக்கப்பட்டிருக்கும் இந்தச் சாலை, 21வது நூற்றாண்டில் இந்தியா எப்படியிருக்கும் என்பதற்கு ஓர் உதாரணம். இது இந்தப் பகுதியுடன் மற்றும் நின்றுவிடாது என்பது இதன் சிறப்பு.
மிக்க நன்றி!
***
(रिलीज़ आईडी: 1556804)
आगंतुक पटल : 346