மத்திய அமைச்சரவை

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்க பிரதம மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கத்திற்கு (PM-AASHA) மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 SEP 2018 4:24PM by PIB Chennai

விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை மத்திய அரசு  உத்வேகமாகச் செயல்படுத்தும் வகையிலும் விவசாயிகளின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையிலும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை பிரதம மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம் (Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan - PM-AASHA) என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2008ம் ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கையில், அறிவித்ததற்கேற்ப விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

விவசாயிகளின் நலன்களுக்குப் பெரிதும் உதவும் வகையில் அவர்களது வருவாயைக் காக்கும் விதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே, காரீப் பருவத்தில் விளையும் வேளாண் பொருட்களுக்கு அவற்றின் உற்பத்திக்கான செலவைப் போல் ஒன்றரை மடங்கு அதிகமான விலையை அரசு அறிவித்துள்ளது. இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகரிப்பு விவசாயிகளுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசுகளுடன் இணைந்து கொள்முதல் செய்யப்படும் இதற்கான பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பிரதம மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கத்தின் அம்சங்கள்:

இத்திட்டம் விவசாயிகள் போதிய வருவாயைப் பெறுவதை உறுதிசெய்யும். அவையாவன

  • ஆதரவு விலைத் திட்டம் (Price Support Scheme - PSS)
  • விலைப் பற்றாக்குறை வழங்கும் திட்டம் (Price Deficiency Payment Scheme - PDPS)
  • தனியார் கொள்முதல் மற்றும் இருப்புச் சரக்கு முன்னோடித் திட்டம் (Pilot of Private Procurement & Stockist Scheme - PDPS)

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க உதவும் வகையில் நெல், கோதுமை, இதர வகை தானியங்கள், பருப்பு வகைகளின் கொள்முதல் தொடர்பாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் திட்டங்களும் பருத்தி, சணல் ஆகியவற்றின் கொள்முதலுக்கான மத்திய ஜவுளி அமைச்சகத் திட்டங்களும் தொடர்ந்து நீடிக்கும்.

கொள்முதலில் தனியார் பங்களிப்பு முன்னோடித் திட்டமாக அமையவேண்டும் என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தனியார் பங்களிப்பு அதிகரிக்கும். அது விலைப் பற்றாக்குறை வழங்கும் திட்டத்துக்கு (PDPS) கூடுதலாக இது அமையும்.

 

எண்ணெய் வித்துக்களைப் பொறுத்தவரையில் மாநில அரசுகள் தனியார் கொள்முதல் சரக்கிருப்பு திட்டத்தை (PDPS) தங்களது விருப்பத்திற்கேற்ப முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்திக் கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களிலும் வேளாண் உற்பத்திச் சந்தைக் குழுக்களிலும் (APMC) தனியாரின் பங்களிப்பை நடைமுறைப்படுத்தலாம். குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணெய் வித்துக்களின் கொள்முதல் இந்த முன்னோடித் திட்டத்தின்கீழ் இடம்பெறும். இது முன்னோடி மாநிலங்களில் ஆதரவு விலைத் திட்டத்தை (PSS) ஒத்திருப்பதால், அதற்கும் விலைப் பற்றாக்குறை வழங்கும் திட்டத்துக்கும் மாற்றாக அமைந்திருக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் ஏஜென்சிகள் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் விளைபொருட்களை குறிப்பிட்ட சந்தைகளிலிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்து கொள்ளலாம். தனியார் கொள்முதல் மற்றும் சரக்கிருப்பு திட்டத்தின் (PPSS) வழிகாட்டு நெறிகளின்படி இதை மேற்கொள்ளலாம்.

எப்போதெல்லாம் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட வேளாண்பொருள் விலை சரிகிறதோ, எப்போதெல்லாம் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் சந்தையில் ஈடுபடலாம் என அனுமதிக்கின்றனவோ குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15 சதவீதம் அதிகபட்சமாக சேவைக் கட்டணம் செலுத்தப்படலாம்.

 

செலவினங்கள்:

 

ஏற்கெனவே அளித்துள்ள உத்தரவாதத்துடன் கூடுதலாக ரூ. 16,550 கோடி அரசு உத்தரவாதம் அளிப்பது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன்  மூலம் மொத்தம் ரூ. 45,550 கோடி அரசு உத்தரவாதம் அளிக்கப்படும்.

இது தவிர, கொள்முதலுக்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதி  அதிகரிக்கப்பட்டு, பிரதம மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கத்துக்கு ரூ. 15,053 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு உதவுவதற்கு உறுதி பூண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.

 

கடந்த ஆண்டுகளில் கொள்முதல்:

 

2010-14ம் ஆண்டுகளில் மொத்தம் ரூ. 3,500 கோடி அளவுதான் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், 2014-18ம் ஆண்டுகளில் கொள்முதல் 10 மடங்கு அதிகரித்து, மொத்தம் ரூ. 34,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2010-14ம் ஆண்டில் அரசு அளித்த உத்தரவாதம் ரூ. 2,500கோடிதான். ஆனால், 2014-18ம் ஆண்டுகளில் மொத்தம் ரூ. 29,000 கோடிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 2010-14ல் செலவினமோ ரூ. 300 கோடிதான். 2014-18ம் ஆண்டில் அது ரூ. 1000 கோடியாகும்.

விவரங்கள்:

 

எந்தப் பிரச்சினையையும் சிறிது சிறிதாகத் தீர்ப்பதற்கு மாறாக ஒட்டுமொத்த அணுகுமுறையில் தீர்ப்பதற்கே செயல்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகரிப்பும் போதுமானதாக இல்லை. அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம் விவசாயிகள் முழுமையான ஆதாயத்தைப் பெறவேண்டும் என்பது மிக முக்கியம். குறைந்தபட்ச ஆதரவு விலையை விட வேளாண் உற்பத்திச் சந்தை விலை குறைவாக இருந்தால், விவசாயிகளுக்கு பாதிப்பு நேராத வகையில் மாநில அரசுகளும் யூனியன் பிரதேச அரசுகளும் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு வாங்க வேண்டும். அல்லது, விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறும் வகையில் ஏதாவது முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த  அணுகுமுறையின் அடிப்படையில் மத்திய அமைச்சரவை பிரதம மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்புத் திட்டத்துடன் ஆதரவு விலைத் திட்டம் (PSS), விலைப் பற்றாக்குறை வழங்கும் திட்டம் (PDPS), தனியார் கொள்முதல் மற்றும் இருப்புச் சரக்கு முன்னோடித் திட்டம் (PDPS) என மூன்று துணைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

விலைப் பற்றாக்குறை வழங்கும் திட்டத்தில் மத்திய பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தேங்காய் ஆகியவற்றை மத்திய அரசின் தொடர்பு முகமைகள் மாநில அரசுகளின் துணையோடு நேரடியாகக் கொள்முதல் செய்யும். மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்புடன் (National Agricultural Cooperative Marketing Federation of India), இந்திய உணவுக் கழகம் (Food Cooperation of India) இணைந்து ஆதரவு விலைத் திட்டத்தைச் செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செலவும் இழப்புகள் ஆகியவற்றை மத்திய அரசு உரிய விதிகளின்படி ஈடுசெய்யும்.

 

அரசின் வேளாண் ஆதரவு முன்முயற்சிகள்:

வரும் 2022ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்கு ஆக்குவது என்ற அரசின் தொலைநோக்குத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது. உற்பத்தியை அதிகரிப்பது, பயிரிடுவதற்கான செலவைக் குறைத்தல், சந்தைக் கட்மைப்பு உள்ளிட்ட அறுவடைக்குப் பிந்தைய பணிகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாதிரி வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை சந்தைச் சட்டம் (2017) மாதிரி குத்தகை விவசாயம் மற்றும் சேவைகள் சட்டம் (2018) ஆகியவை இந்த நடவடிக்கையின் அம்சமாகும். இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதற்கு பல மாநிலங்கள் முன் வந்துள்ளன.

விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலையைப் பெறும் வகையில்ல சந்தைக்குப் புதிய கட்டமைப்பு உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு உதவும் வகையில் 22 ஆயிரம் சில்லறைச் சந்தைகளை வலுப்படுத்துவதற்கு கிராம வேளாண் சந்தைகளை (Gramin Agricultural Markets) அமைப்பதும் ஒரு நடவடிக்கையாகும். மின் வேளாண் சந்தை (eNAM) வழியாக வேளாண் உற்பத்தி சந்தைக் கமிட்டியில் (APMC) வர்த்தகம் செய்ய இது  உதவும்.

இவை தவிர, மத்திய அரசு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana), பிரதம மந்திரி வேளாண்மை நீர்ப்பாசனத் திட்டம் (Pradhan Mantri KrishiSinchai Yojana), பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் (ParamparagatKrishi Vikas Yojana), மண் வள அட்டைகள் (Soil Health Cards) வழங்குதல் போன்ற பல்வேறு  

வேளாண் ஆதரவு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பது என்று கொண்டுள்ள உறுதியின் விளைவாக உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது முன்பு எப்போதும் இல்லாத வகையிலான முடிவாகும்.

****



(Release ID: 1545898) Visitor Counter : 1422