பிரதமர் அலுவலகம்

ஷாங்ரி லா பேச்சுவார்த்தைக்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய சிறப்புரை

Posted On: 01 JUN 2018 7:35PM by PIB Chennai

பிரதமர் லீ சீன் லூங் அவர்களே,

உங்களது நட்புக்கும், பிராந்தியத்தின் சிறப்பான எதிர்காலம் மற்றும் இந்திய-சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கு தலைமை வகிப்பதற்கும் உங்களுக்கு எனது நன்றி.

திரு.ஜான் சிப்மேன் அவர்களே,

மேதகு தலைவர்களே,

உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

பழங்காலம் தொட்டே தங்க நிலம் என்று இந்தியாவுக்கு பரிச்சயமான பிராந்தியத்துக்கு மீண்டும் வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆசியான் அமைப்புடனான இந்தியாவின் நல்லுறவில் முக்கிய ஆண்டாக இது அமைந்துள்ளது. அத்தகைய சிறப்பு மிக்க ஆண்டில் நான் இங்கு இருப்பதில் மகிழ்கிறேன்.

ஜனவரி மாதத்தில், எங்களது குடியரசு தின விழாவில், ஆசியான் நாடுகளின் தலைவர்களை கவுரவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆசியான் நாடுகள் மீதான எங்களது வாக்குறுதியையும், நமது கிழக்கு நோக்கிய கொள்கையையும் வெளிப்படுத்தும் சான்றாக ஆசியான்-இந்தியா மாநாடு அமைந்தது.

பல ஆயிரம் ஆண்டுகளாக, இந்தியர்களுக்கு கிழக்கு நோக்கிய பார்வை இருந்தது. அது சூரிய உதயத்தைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அதன் பிரகாசம்  ஒட்டுமொத்த உலகுக்கும் பரவ வேண்டும் என்ற ஆவலில். இந்த 21-ம் நூற்றாண்டு, ஒட்டுமொத்த உலகத்துக்குமானதாக இருக்க வேண்டும் என்ற எதி்ர்பார்ப்புடன், கிழக்குப் பகுதி வளர வேண்டும் என்று மனிதசமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ளது.  ஏனெனில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி, எதிர்கால உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏனெனில், நடப்புக்கான வாக்குறுதி யுகம், உலக அரசியல் மற்றும் வரலாறு ஆகிய பூதாகர இக்கட்டில் சிக்கியுள்ளது. நாம் எதிர்நோக்கும் எதிர்காலம் கனவு தேசமான ஷாங்ரி-லா போன்றது அல்ல. நமது ஒருங்கிணைந்த நம்பிக்கை மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் இந்த பிராந்தியத்தை நம்மால் வடிவமைக்க முடியும். சிங்கப்பூரைத் தவிர வேறு எந்த நாடும் இந்த கூட்டத்தை நடத்த பொருத்தமானதாக இருந்திருக்காது என்பது திண்ணம். இந்த அற்புதமான தேசம் நமக்கு பல விஷயங்களை கற்பிக்கிறது. பெருங்கடல்கள் வெட்ட வெளியாய் திறந்திருக்க, கடலோரப் பாதுகாப்புக்கு பஞ்சமில்லை. தேசங்கள் ஒன்றோடொன்று கைகோர்த்துள்ளன. சட்டம் தன் கடமையை செய்து வருகிறது. இந்த பிராந்தியம் நிலைப்புத் தன்மையுடன் நீடிக்கிறது. இங்குள்ள சிறியதும், பெரியதுமான நாடுகள் இறையாண்மைப் பெற்ற தேசங்களாக வளர்ச்சிப் பெற்று வருகின்றன. அவை தங்கள் முடிவுகளை சுதந்திரமாகவும், பயமின்றியும் எடுக்கின்றன.

சக்திவாய்ந்த நாடு அல்லது இதர நாடுகளின் பக்கம் சாயாமல் கொள்கையை முன்னிறுத்தி வாதிடும் நாடாக இருக்கும் பட்சத்தில் அது உலகத்தின் மரியாதையைப் பெற முடியும் என்பதோடு, சர்வதேச விவகாரங்களில் அதன் குரல் ஓங்கி ஒலிக்கும் என்பதை சிங்கப்பூர் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளது.  சிங்கப்பூர் உள்நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமையைப் பின்பற்றியபோதும், உலக அளவில் அது உள்ளடக்கிய உலகை எதிர்நோக்கியுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, சிங்கப்பூர் மீதான மதிப்பு அதிகம். தன் சின்னத்தில் சிங்கத்தைக் கொண்டிருக்கும் தேசமும், சிங்க நகரம் என்று அழைக்கப்படும் சிங்கப்பூரும் உணவுகளால் ஒன்றுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியான் அமைப்பிற்கு சிங்கப்பூர் மிகப்பெரும் உந்து சக்தியாக விளங்குகிறது. கிழக்கு நாடுகளுக்கு இந்தியாவின் நுழை வாயிலாக சிங்கப்பூர் பல நூற்றாண்டுகளாக திகழ்ந்து வருகிறது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த பிராந்தியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான உறவை மழைக்கால தென்றலும்,  கடலின் ஓயாத அலைகளும் மனித இதயங்களின் விருப்பங்களும் பிணைத்து வைத்துள்ளன. அமைதி மற்றும் நட்புறவு, மதம் மற்றும் கலாச்சாரம், கலை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றால் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் மாச்சரியங்களும், வர்த்தக ஏற்ற இறக்கங்களும் நிலவிய போதிலும், இரு நாட்டு மக்களிடையேயான தொடர்பு நீடித்து நிலைத்திருக்கிறது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தப் பிராந்தியத்தில் நமது பங்களிப்பு மற்றும் நட்புறவை தொடர்வதற்கான பாரம்பரியத்தை மீண்டும் பெற்றுள்ளோம். இந்தியாவைப் பொருத்தவரை, எந்தப் பிராந்தியத்திலும், இந்த அளவுக்கு அதிக கவனம் செலுத்தியதில்லை. நல்ல காரணங்களுக்காகவே இது நடைபெறுகிறது.

வேத காலங்களுக்கு முன்பிருந்தே இந்தியாவின் சிந்தனைகளுக்கு முக்கிய இடமாக பெருங்கடல்கள் திகழ்ந்து வந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து சமவெளி நாகரீகம் மற்றும் இந்திய தீபகற்பத்தில் கடல்சார் வணிகம் நடைபெற்றுள்ளது. உலகின் மிகவும் பழமையான புத்தகங்களான வேதங்களில் பெருங்கடல்களுக்கும், அனைத்து நீருக்கும் கடவுளான வருண பகவானுக்கும் முக்கிய இடம் உள்ளதை நாம் அறிவோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பழமையான புராணங்களில் கூட, இந்தியாவின் புவியமைப்பை கடல்களுடன் இணைத்தே குறிப்பிடப்பட்டுள்ளது: அதாவது கடல்களுக்கு வடக்குப்பகுதியில் அமைந்துள்ள நிலம் என்று இந்தியா அழைக்கப்பட்டுள்ளது.

உலகின் பழமையான துறைமுகங்களில், எனது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள லோத்தலும் ஒன்று. இன்றும் கூட, கப்பல் கட்டம் தளங்களின் சுவடுகள் உள்ளன. இன்றும்கூட, குஜராத்தியர்கள் சாகசங்கள் புரிவதில் வல்லவர்களாகவும், பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை! இந்தியாவின் வரலாற்றை, பெருமளவில் இந்தியப் பெருங்கடலே வடிவமைத்துள்ளது. இது நமது எதிர்காலத்தின் முக்கிய காரணியாக திகழ்கிறது. இந்தியாவின் வர்த்தகம் மற்றும் நமது எரிசக்தி வளத்தில் 90 சதவீதத்தை பெருங்கடல்களே கொண்டுள்ளன. உலக வர்த்தகத்தின் வாழ்வாதாரமாகவும் இது  திகழ்கிறது. மாறுபட்ட கலாச்சாரங்களை கொண்ட பிராந்தியங்களையும், அமைதி மற்றும் வளத்தின் பல்வேறு கட்டங்களையும் இந்தியப் பெருங்கடல் இணைக்கிறது. மிகப்பெரும் நாடுகளின் கப்பல்களுக்கும் இது இடமளிக்கிறது. சில தருணங்களில் இவை நிலைப்புத்தன்மை மற்றும் போட்டி அடிப்படையிலான  கவலையை ஏற்படுத்துகின்றன.

கிழக்கில் இந்தியாவை பசிபிக் மற்றும் மிகப்பெரும் கூட்டு சக்திகளான – ஆசியான், ஜப்பான், கொரிய குடியரசு, சீனா மற்றும் அமெரிக்காவுடன் மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு சீன கடல் இணைக்கின்றன. இந்தப் பிராந்தியத்தில் எங்களது வர்த்தகம் பெருமளவில் உயர்ந்துள்ளது. எங்களது வெளிநாட்டு முதலீடுகளில் குறிப்பிட்ட பகுதி, இந்த வழியிலேயே நடைபெறுகின்றன. ஆசியான் மட்டுமே இதில் 20 சதவீதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது.

 

இந்தப் பிராந்தியத்தின் மீதான எங்களது ஆர்வம் பெருமளவிலானது,  எங்களது ஒத்துழைப்பு அளவிடற்கரியது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் எங்களது நல்லுறவு வலுவானதாக மாறி வருகிறது. எங்களது நண்பர்கள் மற்றும் கூட்டு நாடுகளின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், பொருளாதாரத் திறனை வலுப்படுத்தவும் நாங்கள் உதவி வருகிறோம். இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு போன்ற அமைப்புகள் மூலம், ஒருங்கிணைந்த பாதுகாப்பை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

இந்தியப் பெருங்கடல் எல்லை கூட்டமைப்பு மூலம், விரிவான பிராந்திய ஒத்துழைப்புக்கான நடவடிக்கையில் முன்னேறி வருகிறோம். சர்வதேச வழித்தடங்கள் தொடர்ந்து அமைதியாகவும், அனைவரும் சுதந்திரமாக பயன்படுத்தும் வகையிலும் இருப்பதை உறுதிப்படுத்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியங்களையும் தாண்டி, நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மொரீஷியஸில் நான் பேசும்போது, எங்களது இலக்கு என்பது சாகர் என்ற ஒற்றை வார்த்தையில் குறிப்பிட்டேன். அதாவது, பெருங்கடல் என்று அர்த்தம். சாகர் என்பது பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. தற்போது இதனை கிழக்குப் பகுதியிலும் கூட, கிழக்கு நோக்கிய கொள்கை மூலம் தீவிரமாக பின்பற்றி வருகிறோம். அதாவது, நமது நிலப்பகுதியிலிருந்து கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளையும், கடல் பகுதியின் கிழக்கில் உள்ள நாடுகளையும் இந்தியாவுடன் இணையுமாறு அழைக்கிறோம்.

நிலம் மற்றும் கடல் பரப்பின் அடிப்படையில் தென்கிழக்கு ஆசியா என்பது நமது நெருக்கமான பிராந்தியமாகும். ஒவ்வொரு தென்கிழக்கு ஆசிய நாட்டுடனும், அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு வளர்ந்துள்ளது. ஆசியான் அமைப்பில், வெறும் பேச்சுவார்த்தை நடத்திவந்த நாடுகளுடனான ஒத்துழைப்பு, 25 ஆண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு மிகுந்தவையாக மாறியுள்ளன. நமது நல்லுறவுகளை வருடாந்திர மாநாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைக்கான 30 வழிமுறைகள் மூலம், தொடர்ந்து வருகிறோம். இருந்தாலும் கூட, பிராந்தியத்துக்கான ஒரே மாதிரியான இலக்கு, ஏற்கத்தக்க நிலை, நமது பழமையான பிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

ஆசியான் தலைமையிலான அமைப்புகளான கிழக்கு ஆசிய மாநாடு, ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் ஆசியான் பிராந்திய கூட்டமைப்பு போன்றவற்றில் தீவிரமாக பங்கேற்று வருகிறோம். பிம்ஸ்டெக் மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை இணைக்கும் பாலமாக உள்ள மெகாங்-கங்கா பொருளாதார முனையம் ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளோம்.

ஜப்பானுடனான எங்களது ஒத்துழைப்பு, பொருளாதாரம் முதல் பாதுகாப்பு வரை, முற்றிலுமாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த ஒத்துழைப்பு, மிகவும் சிறப்புவாய்ந்ததாகவும், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் அடிப்படை நோக்கமாகவும் அமைந்துள்ளது. கொரிய குடியரசுடனான நமது ஒத்துழைப்பு வலுவான நிலையை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்துடன் நமது ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.

நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு நாடுகளுடன், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளில் நாம் சந்திக்கிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதிகாலையில் ஃபிஜியில் தரையிறங்கினேன். பசிபிக் தீவு நாடுகளுடன் புதிய வழியில் ஒத்துழைப்பை வெற்றிகரமாக தொடங்குவதற்காக அங்கு சென்றேன். இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டங்கள் மூலம், பகிர்ந்தளிக்கப்பட்ட நலன்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம், புவியியல் எல்லைகளுக்கு இடையே பாலத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தாண்டி, நமது ஒத்துழைப்பு வலுவானதாகவும், வளர்ந்து வரும் வகையிலும் அமைந்துள்ளது. ரஷியாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு, சிறப்பானதாகவும், சிறப்புரிமை பெற்றதாகவும் வளர்ந்துள்ளது. இது நமது பாதுகாப்பு தன்னாட்சியை அளவீடு செய்யும் வகையில் திகழ்கிறது.

10 நாட்களுக்கு முன்பு, சோச்சி நகரில், அதிபர் புதினுடன் திட்டமிடப்படாத மாநாட்டில் கலந்துகொண்டேன். அப்போது, நிகழ்காலத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வலுவான பலதுருவ உலக நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான கருத்துக்களை புதினும், நானும் பகிர்ந்துகொண்டோம். அதேநேரத்தில், அமெரிக்காவுடனான இந்தியாவின் உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பு, வரலாற்றுத்தடைகளைத் தாண்டி, நமது ஒத்துழைப்பின் எல்லைகளையும் தாண்டி ஆழமானதாக நீடிக்கிறது. மாறிவரும் உலகில், புதிய முக்கியத்துவத்தை இது அளிக்கிறது. இந்த ஒத்துழைப்பின் முக்கியத்தூண் என்பது, திறந்த, நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே மாதிரியான இலக்கு ஆகும். சீனாவுடன் நமக்கு உள்ள பல அடுக்கு ஒத்துழைப்பைப் போன்று வேறு எந்த நாட்டுடனும் ஒத்துழைப்பு இல்லை. நாங்கள் உலகின் அதிக மக்கள்தொகையை கொண்ட இரண்டு நாடுகளாகவும்,  வேகமாக வளர்ந்துவரும் மிகப்பெரும் பொருளாதாரங்களாகவும் திகழ்கிறோம். எங்களது ஒத்துழைப்பு விரிவடைந்து வருகிறது. வர்த்தகம் வளர்ந்து வருகிறது. பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், எல்லைப்பகுதியை அமைதியாக வைத்திருப்பதிலும், முதிர்ச்சி மற்றும் விவேகத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.   

ஏப்ரல் மாதத்தில், அதிபர் ஜி-யுடன் இரண்டு நாள் திட்டமிடப்படாத மாநாட்டில் கலந்துகொண்டேன். இது உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு நமது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான மற்றும் நிலையான நல்லுறவு இருக்க வேண்டியது முக்கியம் என்ற நிலைப்பாட்டை வலுப்படுத்த உதவியது. இந்தியாவும், சீனாவும் நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கையில் ஒன்றாக இணைந்து பணியாற்றும்போதும், பரஸ்பர நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்போதும், ஆசியா மற்றும் உலகுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் நட்புறவு வளர்ந்து வருகிறது. இது இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டமைப்பு மாநாடுகள் போன்ற வழிமுறைகள் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவின் தேவைக்கு ஏற்ப ஒத்துழைப்பு, நட்புறவு மற்றும் பரஸ்பரம் மதிப்பளிக்கும் வரலாறு ஆகியவையே இதன் அடிப்படையாக உள்ளது. 


நண்பர்களே,

நமது பிராந்தியத்துக்கு வருவோம். இந்தியாவின் வளரும் ஒத்துழைப்பு என்பது, ஆழ்ந்த பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் சேர்ந்து விளங்குகிறது. உலகின் மற்ற எந்தப் பகுதியையும்விட, இங்குள்ள நாடுகளுடன் அதிக அளவில் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம். சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரிய நாடுகளுடன் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

ஆசியான் மற்றும் தாய்லாந்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளோம். மேலும், பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டை இறுதிசெய்வதற்காக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நான் இந்தோனேஷியாவுக்கு முதல்முறையாக தற்போது பயணம் மேற்கொண்டேன். 90 கடல்மைல்கள் தொலைவுக்குள் உள்ள அண்டை நாடாக இந்தோனேஷியா உள்ளது.

எனது நண்பர் விடோடோ-வும், நானும் இந்தியா-இந்தோனேஷிய நல்லுறவை விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பு அளவுக்கு மேம்படுத்தியுள்ளோம். மற்ற ஒரே மாதிரியான நலன்களில் ஒன்றாக, இந்தோ-பசிபிக் கடல்சார் ஒத்துழைப்பு என்ற பொதுவான இலக்கில் இருவரும் உள்ளோம். இந்தோனேஷியாவிலிருந்து வரும்வழியில், மலேஷியாவில் ஆசியான் நாடுகளில் மிகவும் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரதமர் மஹாதிரை சந்திப்பதற்காக சிறிதுநேரம் இருந்தேன்.

நண்பர்களே,

இந்திய பாதுகாப்புப் படைகள், குறிப்பாக எங்களது கடற்படை, அமைதி மற்றும் பாதுகாப்பு, அதோடு மனிதநேய உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடன் நல்லுறவை வலுப்படுத்தி வருகிறது. அவர்கள் பயிற்சிகளைப் பெற்று, கூட்டுப் பயிற்சிகள் மேற்கொண்டு, பிராந்தியம் முழுமைக்கும் நல்லெண்ண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உதாரணமாக, சிங்கப்பூருடன் நீண்டகாலமாக தடையற்ற கடற்படைப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இது தற்போது 25-வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. 

சிங்கப்பூருடன் புதிய முத்தரப்பு கூட்டுப் பயிற்சியை நாங்கள் தொடங்க உள்ளோம். இதனை மற்ற ஆசியான் நாடுகளுக்கும் விரிவுபடுத்துவோம் என்று நம்புகிறோம். பரஸ்பரம் திறனை வலுப்படுத்துவதற்காக வியட்நாம் போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் மலபார் பயிற்சியை இந்தியா நடத்தியது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா நடத்திய பயிற்சியில் பல்வேறு பிராந்திய நட்பு நாடுகள் கலந்துகொண்டன. மேலும், பசிபிக் பகுதியில் ரிம்பாக் பயிற்சியில் கலந்துகொண்டோம்.

ஆசியாவில் – இந்த நகரில் – கப்பல்களில் கடல்கொள்ளையர்கள் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளையர்களை எதிர்கொள்வதற்கான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள முக்கிய உறுப்பினர்களே, எங்களது நாட்டில், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை அடையும் 2022-ம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில், இந்தியாவில் மாற்றங்களைக்  கொண்டுவருவதே எங்களது பிரதான இலக்கு.

ஆண்டுதோறும் 7.5% முதல் 8% வரை பொருளாதார வளர்ச்சியை நீடிக்கச் செய்வோம். எங்களது பொருளாதாரம் வளரும்போது, நமது உலகளாவிய மற்றும் பிராந்திய இணைப்பு அதிகரிக்கும். நாட்டில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு, தங்களது எதிர்காலம் இந்தியப் பொருளாதாரம் வளர்வதால் மட்டுமல்லாமல், உலகளாவிய இணைப்பின் ஆழம் அதிகரிப்பதன் மூலம் உறுதிப்படுத்தப்படும் என்பது தெரியும். உலகின் வேறு எந்தப் பகுதியையும்விட, எங்களது உறவு வலுப்படும். பிராந்தியத்தில் எங்களது பங்கு அதிகரிக்கும். ஆனால், நாங்கள் எதிர்பார்க்கும் எதிர்காலத்தை கட்டமைக்க அமைதிக்கான நிலையான அடித்தளம் தேவை. இதற்கு மிக நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

உலக சக்தியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரத்தின் செயல்பாடுகளில் மாற்றம் உருவாகிறது. தொழில்நுட்பத்தில் தினசரி பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலக நிலைத்தன்மையின் அடித்தளம் அதிர்வது போன்று தோன்றுகிறது. எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நமது அனைத்து வளர்ச்சிக்கும், நிலையற்ற தன்மையின் முனை, தீர்க்கப்படாத கேள்விகள், தீர்க்கப்படாத பிரச்சினைகள்; போட்டிகள் மற்றும் முரண்பாடுகள்; மோதல் கனவு மற்றும் போட்டி மாதிரிகள் என்ற சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

பரஸ்பரம் பாதுகாப்பின்மை வளர்வது மற்றும் ராணுவத்திற்கான செலவினம் அதிகரிப்பு; உள்நாட்டு முரண்பாடுகள், வெளிநாட்டு பதற்றங்களாக மாறுகிறது; வர்த்தகத்தில் புதிய குறைபாடுகள் மற்றும் உலக அளவில் போட்டி என்பது பொதுவானதாக இருப்பது ஆகியவற்றை நாம் பார்த்து வருகிறோம். இவை அனைத்துக்கும் மேலாக, நிலைத்தன்மைக்கு மேலாக ஆதிக்க செயல்பாடுகளை சர்வதேச விதிகளாக நாம் பார்க்கிறோம். இவை அனைத்துக்கும் மத்தியில், நம் அனைவரையும், முடிவுபெறாத தீவிரவாத மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளிட்டவை பாதிக்கின்றன. இது எதிர்காலம் மற்றும் தோல்விகளுக்கு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் உலகம். தனது தனிப்பட்ட முயற்சியின் மூலம், எந்தவொரு நாடும் தன்னை கட்டமைத்துக் கொள்ள முடியாது.

வேறுபாடுகள் மற்றும் போட்டிகளுக்கு மேலாக நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று இந்த உலகம் அழைக்கிறது. இது சாத்தியமா?

ஆம். இது சாத்தியம்தான். இதற்கு ஆசியானை உதாரணமாகவும், ஊக்குவிப்பாகவும் நான் பார்க்கிறேன். உலகில் உள்ள எந்தக் குழுவையும்விட, ஆசியானில் கலாச்சாரம், மதம், மொழி, ஆளுமை மற்றும் வளத்தில் மிகப்பெரும் அளவில் வேறுபாடுகள் உள்ளன.


உலக அளவிலான போட்டியில் முன்னிலையிலும், கொடுமையான போர்களை எதிர்கொண்டும், நிலையில்லாத நாடுகளைக் கொண்ட பிராந்தியமாகவும் தென்கிழக்கு ஆசியா இருந்தபோது, ஆசியான் பிறந்தது. இன்றும் கூட, பொதுவான நோக்கத்தில் 10 நாடுகளை ஒருங்கிணைத்துள்ளது. இந்தப் பிராந்தியத்தின் நிலையான எதிர்காலத்துக்கு ஆசியான் அமைப்பின் ஒற்றுமை அவசியம்.

நாம் ஒவ்வொருவரும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். பலவீனப்படுத்திவிடக் கூடாது. நான் கிழக்கு ஆசிய மாநாடுகளில் 4 முறை கலந்துகொண்டுள்ளேன். விரிவான பிராந்தியத்தை ஆசியான் அமைப்பால் ஒருங்கிணைக்க முடியும் என்று நான் கருதுகிறேன். பல்வேறு வழியான செயல்பாடுகளிலும், ஆசியான் அமைப்பு முன்னணி வகிக்கிறது. இது தொடரும்போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு அடித்தளம் அமைக்கும். ஆசியான் அமைப்பின் இரண்டு முக்கிய நடவடிக்கைகளான கிழக்கு ஆசிய மாநாடு மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை இந்த புவியமைப்பை இணைக்கும்.

நண்பர்களே,

இந்தோ-பசிபிக் என்பது இயற்கையான பிராந்தியம். இது பல்வேறு வகையான சர்வதேச வாய்ப்புகள் மற்றும் சவால்களுக்கு இடமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு நாளையும் கடக்கும்போது, இந்தப் பிராந்தியத்தில் வாழும் நாம், இணைக்கப்படுகிறோம். இன்று, நாம் வேறுபாடுகள் மற்றும் போட்டிகளைத் தாண்டி, ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்று அழைக்கப்படுகிறோம்.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 10 நாடுகள், புவியியல் அடிப்படையிலும், நாகரீக அடிப்படையிலும் இரண்டு மிகப்பெரும் இரண்டு பெருங்கடல்களை இணைக்கின்றன. புதிய இந்தோ-பசிபிக்-கின் இதயத்தில் உள்ளடக்கிய தன்மை, வெளிப்படைத்தன்மை, ஆசியான் மத்தியத்தன்மை மற்றும் ஒற்றுமை ஆகியவை அமைந்துள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஓர் உத்தியாகவோ அல்லது குறிப்பிட்ட உறுப்பினர்களின் தொகுப்பாகவோ இந்தியா பார்க்கவில்லை.


ஆதிக்கம் செலுத்துவதற்கான குழுவாகவும் பார்க்கவில்லை. மேலும், எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதாக நாம் கருத வேண்டியதில்லை. புவியியல் வரையறையிலும் அவ்வாறு இருக்க முடியாது. எனவே, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மீதான இந்தியாவின் நிலைப்பாடு நேர்மறையானதாக  உள்ளது. இதில் பல்வேறு நிலைகள் உள்ளன.

ஒன்று,

இது சுதந்திரமான, வெளிப்படையான, உள்ளடக்கிய பிராந்தியமாக உள்ளது. இது வளர்ச்சி மற்றும் வளம் என்ற பொதுவான நிலைப்பாட்டின் கீழ், நம் அனைவரையும் ஒருங்கிணைக்கும். இதில், இந்த புவியமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும், இடம்பெற விரும்பும் மற்ற நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

இரண்டு,

இதன் மையமாக தென்கிழக்கு ஆசியா உள்ளது. இதன் எதிர்காலத்தின் மையமாக ஆசியான் இருக்கும். இந்தியாவை எப்போதுமே வழிநடத்தும் இலக்கைக் கொண்டுள்ளது. அதன்படி, இந்தப் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான கட்டமைப்புக்கு நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

மூன்றாவது,

நமது பொதுவான வளம் மற்றும் பாதுகாப்புக்கு, பொதுவான விதியின் அடிப்படையில், பேச்சுவார்த்தையின் மூலமாக, பிராந்தியத்தின் நிலைத்தன்மையை உருவாக்க வேண்டும் என்று நம்புகிறோம். மேலும், இது அனைத்து தனிநபர்கள் மற்றும் பொதுவான உலகிற்கு சமமான அளவில் பொருந்த வேண்டும். இந்த நிலைத்தன்மை, இறையாண்மை மற்றும் எல்லை ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ப இருக்க வேண்டும். மேலும், அளவு மற்றும் பலத்தின் அடிப்படையில் இல்லாமல், அனைத்து நாடுகளுக்கும் சமமாக இருக்க வேண்டும். இந்த விதிகள் மற்றும் நெறிமுறைகள், ஒரு குறிப்பிட்ட சிலரது ஆதிக்கத்தால் அல்லாமல், அனைவரது ஒப்புதல் அடிப்படையில் இருக்க வேண்டும். இது பேச்சுவார்த்தை மீதான நம்பிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும். கட்டாயத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது. மேலும், சர்வதேச வாக்குறுதிகளை நாடுகள் அளிக்கும்போது, அதில் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். இது பல நாடுகள் கூட்டமைப்பு மற்றும் பிராந்திய கூட்டமைப்பு மீதான இந்தியாவின் நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ளது. மேலும், சட்டத்தின் ஆட்சி மீதான நமது முதன்மை வாக்குறுதியாகவும் உள்ளது.

நான்காவது,

சர்வதேச சட்டத்தின்கீழ், பொதுவான இடமான கடல் மற்றும் வான் பகுதியைப் பயன்படுத்த நம் அனைவருக்கும் சமமாக பயன்படுத்தும் உரிமை இருக்க வேண்டும். இதன்படி, பயணத்தில் சுதந்திரம், தடையில்லா வர்த்தகம், பிரச்சினைகளுக்கு சர்வதேச சட்டத்தின்படி, அமைதியான வழியில் தீர்வுகாணுதல் ஆகியவை இருக்க வேண்டும். இந்த நெறிகளின்கீழ் வாழ நாம் அனைவரும் ஒப்புக் கொண்டால், நமது கடல் வழிகள் வளத்துக்கான பாதையாகவும், அமைதிக்கான முனையாகவும் இருக்கும். மேலும், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கடல்சார் குற்றங்களைத் தடுக்கவும், கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பேரிடர் ஏற்படாமல் பாதுகாக்கவும், கடல்வழி பொருளாதாரத்தின் மூலம் வளம் பெறவும் முடியும்.

ஐந்தாவது,

உலகமயமாக்கலால் இந்தப் பிராந்தியமும், நாமும் பயனடைந்துள்ளோம். இந்தப் பலன்களுக்கு சிறந்த உதாரணங்களில் இந்திய உணவும் இடம்பெற்றுள்ளது! ஆனால், சரக்கு மற்றும் சேவைகளில் உள்நாட்டு பொருட்கள் மீதான ஆதிக்க நடவடிக்கைகள் (protectionism) அதிகரித்து வருகின்றன. சுவர்களுக்குப் பின்னால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் தீர்வுகள் ஏற்படாது. ஆனால், மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். திறந்த மற்றும் நிலையான சர்வதேச வர்த்தக முறைக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், விதிகள் அடிப்படையிலான, திறந்த, சமநிலையான மற்றும் நிலைவான வர்த்தக சூழலுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இது வர்த்தகம் மற்றும் முதலீட்டில் அனைத்து நாடுகளுக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தும். இதனையே பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பில், நாங்கள் எதிர்பார்க்கிறோம். பெயரில் உள்ளதைப் போலவும், அறிவிக்கப்பட்ட கொள்கையைப் போலவும், பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு விரிவானதாக இருக்க வேண்டியது அவசியம். வர்த்தகம், முதலீடு மற்றும் சேவைகளுக்கு இடையே சமநிலையில் இருக்க வேண்டியது அவசியம்.

ஆறாவது,

இணைப்பு என்பது முக்கியமானது. இது வர்த்தகம் மற்றும் வளம் அதிகரிப்பதைவிட, அதிகமானதாக இருக்க வேண்டும். இது பிராந்தியத்தை இணைக்கும். நூற்றாண்டுகளாக இணைப்பு நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இணைப்பின் பலன்களை நாங்கள் உணர்ந்துள்ளோம். இந்தப் பிராந்தியத்தில் பல்வேறு இணைப்பு நடவடிக்கைகள் உள்ளன. இவை வெற்றிகரமாக அமைந்தால், நாம் கட்டமைப்பை மட்டுமே உருவாக்காமல், நம்பிக்கையின் பாலத்தையும் கட்டமைக்க முடியும். இதற்காக, இந்த முயற்சிகள், இறையாண்மை, எல்லை ஒருங்கிணைப்பு, ஆலோசனை, சிறந்த ஆளுமை, வெளிப்படைத்தன்மை, வாய்ப்பு நிலை மற்றும் நீடித்த தன்மை ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைய வேண்டும். நாடுகளை மேம்படுத்தும் வகையில் அவர்கள் இருக்க வேண்டுமே தவிர, எதிர்கொள்ள முடியாத கடன் சுமையை ஏற்படுத்தக் கூடாது. வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும். பாதுகாப்புப் போட்டியை அல்ல. இந்த கொள்கைகளின் கீழ், ஒவ்வொருவருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராகி வருகிறோம். இந்தியா தனது பங்கை செய்து வருகிறது. தானாகவும், ஜப்பான் போன்ற நாடுகளுடன் கூட்டு அமைத்தும், தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா, இந்தியப் பெருங்கடல், ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் அதனைத் தாண்டியும் இணைந்து செயல்பட்டு வருகிறது. புதிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றில் முக்கிய பங்குதாரராக நாங்கள் உள்ளோம்.

இறுதியாக,

நான் ஏற்கனவே கூறியதைப் போன்று, யார் ஆதிக்கம் படைத்தவர் என்ற போட்டி நிறைந்த காலத்துக்கு திரும்பாவிட்டால், இவை அனைத்தும் சாத்தியம்: ஆசியாவில் போட்டி வந்தால், அது நம் அனைவரையும் பின்னோக்கி அழைத்துச் சென்று விடும். ஆசியாவின் ஒத்துழைப்பு, இந்த நூற்றாண்டை வடிவமைக்கும். எனவே, ஒவ்வொரு நாடும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்: தங்களது விருப்பம் அதிக அளவில் ஒருங்கிணைந்த உலகை உருவாக்குவதா அல்லது புதிய பிரிவினையை ஏற்படுத்துவதா? ஏற்கனவே உள்ள சக்திவாய்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு பொறுப்பு உண்டு. போட்டி என்பது இயல்பானது. ஆனால், போட்டிகள், முரண்பாடுகளாக மாறிவிடக் கூடாது; வேறுபாடுகளை பிரச்சினைகளாக மாறுவதற்கு அனுமதித்துவிடக் கூடாது. இங்கு கூடியுள்ள உறுப்பினர்களே, பகிர்ந்து அளிக்கப்பட்ட மதிப்புகள் மற்றும் நலன்கள் அடிப்படையில் நட்புறவை ஏற்படுத்துவது இயல்பானது. இந்தியாவுக்கு கூட, இந்தப் பிராந்தியத்திலும், அதனைத் தாண்டியும் பல்வேறு நாடுகளுடன் நட்புறவு உண்டு.

நிலையான மற்றும் அமைதியான பிராந்தியத்துக்காக அவர்களுடன் தனியாகவோ அல்லது மூன்று அல்லது அதற்கு மேலான நாடுகளைக் கொண்ட அமைப்பாகவோ இணைந்து செயல்பட்டு வருகிறோம். எங்களது நட்பு என்பது, மற்றவர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கான கூட்டணி இல்லை. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான கொள்கைகள் மற்றும் மதிப்புகளின் பக்கத்தையே நாங்கள் தேர்வுசெய்கிறோம். பிரித்தாளும் அல்லது மற்ற பகுதிகளை நாங்கள் பின்பற்றுவதில்லை. உலகம் முழுவதும் எங்களது நட்புறவுகள், எங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்.

மேலும், நாம் இணைந்து செயல்படும்போது, நமது காலத்தின் உண்மையான சவால்களை எதிர்கொள்ள முடியும். நமது கிரகத்தைப் பாதுகாக்க முடியும். ஆயுதப் பரவல் தடுக்கப்படுவதை நம்மால் உறுதிப்படுத்த முடியும். தீவிரவாதம் மற்றும் இணையதள அச்சுறுத்தல்களிலிருந்து நமது மக்களைப் பாதுகாக்க முடியும்.

இறுதியாக, இதனை மீண்டும் தெரிவிக்க விழைகிறேன்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் செயல்பாடு என்பது – ஆப்பிரிக்க கடல் பகுதியிலிருந்து அமெரிக்கா வரை – உள்ளடக்கியதாக இருக்கும். நாங்கள் வேதாந்த கொள்கைகளைப் பின்பற்றி வருகிறோம். இது அனைவருக்கும் பொதுவானது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும், வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டாடுகிறோம். உண்மை என்பது ஒன்றுதான், கற்றோர் பல வழிகளிலும் அதை கூற முடியும். பன்முகத்தன்மை, கூடிவாழ்தல், வெளிப்படையாக இருத்தல் மற்றும் பேச்சுவார்த்தை - இவையே நமது நாகரீகத்தின் ஒழுக்கக் கோட்பாட்டின்  அடிப்படை. நம்மை ஒரு நாடாக வரையறுக்கும் ஜனநாயகத்தின் கொள்கைகளே, உலகுடன் நமது பிணைப்பை வடிவமைக்கும்.

எனவே, இந்தியில் பயன்படுத்தப்படும் ச என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தைகளை மொழிபெயர்ப்போம்: சம்மான்  (மரியாதை), சம்வாத் (பேச்சுவார்த்தை), சஹயோக் (ஒத்துழைப்பு), சாந்தி (அமைதி), சமிருதி (வளம்). இந்த வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது எளிது! எனவே, இந்த உலகை அமைதி, மரியாதை, பேச்சுவார்த்தை, சர்வதேச சட்டத்தின் மீது உறுதி ஆகியவற்றுடன் அணுகுவோம்.


நாம் ஜனநாயக மற்றும் சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச நிலைத்தன்மையை ஊக்குவிப்போம். இதில், அனைத்து நாடுகளும், சிறியது அல்லது பெரியது என எதுவாக இருந்தாலும் சமமாகவும், இறையாண்மை பெற்றதாகவும் பார்ப்போம். நமது கடல்கள், விண்வெளி மற்றும் வான்எல்லையை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் வைத்திருக்கவும்; தீவிரவாதத்திலிருந்து நமது நாடுகளைப் பாதுகாக்கவும்; நமது இணையதள கட்டமைப்புகளை பாதிப்புகள் மற்றும் முரண்பாடுகளிலிருந்து பாதுகாக்கவும், மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவோம். நமது பொருளாதாரத்தை திறந்தவெளியாகவும், நமது ஒத்துழைப்பை வெளிப்படையானதாகவும் வைத்திருப்போம். நமது ஆதாரங்கள், சந்தைகள் மற்றும் வளத்தை நமது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் பகிர்ந்துகொள்வோம். நமது கிரகத்தின் நீடித்த எதிர்காலத்தை பிரான்ஸ் மற்றும் மற்ற நாடுகளுடன் இணைந்து புதிய சர்வதேச சூரிய மின் கூட்டமைப்பின் மூலம் ஏற்படுத்துவோம்.

இந்த பரந்துவிரிந்த பிராந்தியம் மற்றும் அதனைத் தாண்டியும் நாமும், நமது கூட்டாளிகளும் இவ்வாறே செயல்பட விரும்புவோம். பிராந்தியத்தின் பழமையான  விவேகமே, நமது பொதுவான பாரம்பரியம். அமைதி மற்றும் இரக்கம் குறித்த புத்தரின் போதனை, நம் அனைவரையும் இணைக்கிறது. நாம் ஒன்றாக செயல்பட்டால், மனித நாகரீகத்துக்கு அதிக அளவில் பங்களிப்பை செய்ய முடியும். போரால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அமைதிக்கான எதிர்பார்ப்புடன் நாம் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். சக்தியின் வரம்பை நாம் பார்த்துள்ளோம். ஒத்துழைப்பின் பலன்களை நாம் கண்டுள்ளோம்.

இந்த உலகம் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய இக்கட்டான கட்டத்தில் உள்ளது. வரலாற்றின் மோசமான பக்கங்களால் தூண்டப்படக் கூடிய நிலையிலும் நாம் உள்ளோம். எனினும், மதிநுட்பமான பாதையும் கூட நமக்காக திறந்திருக்கிறது. அது நம்மை உயர்ந்த எண்ணங்களுடன் வாழ அழைத்துக் கொண்டிருக்கிறது. நமது சொந்த விருப்பு வெறுப்புகள் எனும்   குறுகிய எண்ணங்களை வேரறுத்து, அனைத்து தேசங்களின் நலனை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் இணைந்து கூட்டாக செயல்படும் போது, இந்தப் பாதையில் நமது பயணம் வெற்றிகரமாக அமையும். இந்தப் பாதையை அனைவரும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

நன்றி

மிக்க நன்றி.

*****

 

 



(Release ID: 1534906) Visitor Counter : 600