பிரதமர் அலுவலகம்

லே-யில் பிரதமர்: புத்தமத தலைவர் 19-வது குஷோக் பகுலா ரின்போச் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பு; ஜோஸிலா சுரங்கப்பாதைத் திட்டப்பணிகளின் தொடக்கத்தை குறிக்கும் பெயர்ப்பலகையையும் திறந்து வைத்தார்.

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2018 3:15PM by PIB Chennai

    ஜம்மு காஷ்மீரில்  தமது ஒருநாள் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.05.2018) லே வந்தடைந்தார்.

   லே-வில் நடைபெற்ற 19-வது 19-வது குஷோக் பகுலா ரின்போச் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இதே நிகழ்ச்சியில், ஜோஸிலா சுரங்கப்பாதைத்  திட்டப் பணிகளின் தொடக்கத்தை குறிக்கும் பெயர்ப்பலகையையும் பிரதமர் திறந்து வைத்தார்.

    14 கிலோமீட்டர் தூரமுள்ள ஜோஸிலா சுரங்கப்பாதை, இந்தியாவின் மிக நீளமான சாலை சுரங்கப்பாதையாக மட்டுமின்றி, ஆசியாவின் நீளமான இருவழி சுரங்கப்பாதையாகவும் அமைய உள்ளது. ஸ்ரீநகர் – லே இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 1A-யில், ரூ.6,800 கோடி மதிப்பீட்டில், கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு அடிப்படையில் இத்திட்டத்தை மேற்கொள்ள, இம்மாதத் தொடக்கத்தில் பிரதமர் தலைமையில், நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுவதன் மூலம், எத்தகைய பருவகாலத்திலும், ஸ்ரீநகர், கார்கில் மற்றும் லே இடையே தடையற்ற போக்குவரத்தை மேற்கொள்ள முடியும்.  அத்துடன் ஜோஸிலா கணவாயைக் கடக்க தற்போது மூன்றரை மணி நேரம் ஆகும் நிலையில், இந்த சுரங்கப்பாதை மூலம் பதினைந்தே நிமிடங்களில் கடக்க முடியும். இந்தப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சமூக – கலாச்சார ஒருங்கிணைப்புக்கும் இது வழிவகுக்கும். அத்துடன் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இந்த சுரங்கப்பாதை கருதப்படுகிறது.

  நிகழ்ச்சியில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர்,19-வது குஷோக் பாகுலா ரின்போச்சின் அளப்பறிய பங்களிப்பை  நினைவூட்டினார். பிறருக்காக உழைப்பதற்காகவே தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அவர் என்றும்  பிரதமர் புகழாரம் சூட்டினார்.

     19வது குஷோக் பாகுலா ரின்போச் மிகச் சிறந்த தூதராகவும் திகழ்ந்தார் என அவர் கூறினார். மங்கோலியாவில் தாம் மேற்கொண்ட பயணத்தின் போது, அந்நாட்டில் அவர் மீது வைத்துள்ள நல்லெண்ணத்தை தாம் நேரில் உணர்ந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

     ஜம்மு காஷ்மீரின் 3 பிராந்தியங்களுக்கும் இன்று (19.05.2018) தாம் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் திரு நரேந்திர மோடி  தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீரில், ரூ.25,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தத் திட்டங்கள் இம்மாநில மக்களிடம் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

-------


(வெளியீட்டு அடையாள எண்: 1532938) வருகையாளர் எண்ணிக்கை : 177
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , Assamese , Kannada