பிரதமர் அலுவலகம்

தூய்மைப்பணியாளர் தேசிய மாநாட்டில் பிரதமர் உரை, மோத்திஹரியில் மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்

प्रविष्टि तिथि: 10 APR 2018 1:36PM by PIB Chennai

தூய்மைப் பணியாளர்கள் எனப் பொருள்படும் சுவட்சாகிரஹிகளின் தேசிய மாநாட்டை மோத்திஹரியில் இன்று (10.04.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி, தொடங்கி வைத்து உரையாற்றினார். சம்பரானில் மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பிரதமர் பல்வேறு முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார். தண்ணீர் வழங்குதல் மற்றும் சுகாதாரத் துறைகளில் மோத்திஹீல் திட்டம், பேட்டியா நகர் பரிஷத் குடிநீர் வழங்கும் திட்டம், நான்கு கங்கைத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுவதைக் குறிக்கும் விதமாக நினைவுப்பலகைகளைப் பிரதமர் திறந்துவைத்தார். அவர் திறந்துவைத்த கங்கைத் திட்டங்களில், பாட்னா, சையதுபூர் கழிவுநீர் கட்டமைப்பு, பாட்னா நான்காவது மண்டல பாஹாரி கழிவுநீர் கட்டமைப்பு, பாட்னா ஐந்தாவது மண்டல பாஹாரி கழிவுநீர் கட்டமைப்பு, பாஹாரி கழிவுநீர் சுத்திக்கரிப்பு நிலையத் திட்டம் ஆகியன அடங்கும்.

ரயில்வே துறையில் முஸாஃபர்பூர் மற்றும் சாகூலி இடையேயும், சாகூலி மற்றும் வால்மீகி நகர் இடையேயும் ரயில்பாதைகளை இரட்டிப்பாக்கும் திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மாதேபுரா மின்சார எஞ்ஜின் தொழிற்சாலையின் முதல் கட்டத்தைப் பிரதமர் காணொளி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 12,000 ஹெச் பி திறன்கொண்ட முதலாவது சரக்கு மின்சார எஞ்ஜினையும் சாம்பரான் ஹம்சஃபார் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

பீகார் – ஜார்கண்ட் எல்லைப் பகுதியில் ஔரங்காபாதில் தேசிய நெடுஞ்சாலை 2-ன் பக்கச் சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்திய எண்ணெய் கழகத்தின் பெட்ரோலியம் உயவு எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு முனையங்களை மோத்திஹரியிலும், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் கழகத்தின் சமையல் எரிவாயு நிலையத்தை சாஹூலியிலும் அமைப்பதற்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார்.

சுவட்சாகிரஹிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு விருதுகளைப் பிரதமர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றோரிடையே உரையாற்றிய பிரதமர், இன்று மோத்திஹரியில் ஏற்பட்டுள்ள உற்சாகச் சூழல் நூறு ஆண்டுகளுக்கு முன் சாம்பரான் சத்தியாகிரகத்தின்போது இருந்த, வெகுஜன இயக்கத்தின் உற்சாகத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது என்று கூறினார்.

சத்தியாகிரகத்திலிருந்து சுவட்சாகிரஹம் வரையிலான பயணத்தில் பீகார் மக்கள் தங்களது தலைமையேற்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று அவர் கூறினார். பீகாரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கழிவறைக் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய முயற்சிகளில் பீகார் மாநில மக்களும், அம்மாநில அரசும் எடுத்துள்ள முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

தூய்மை பாரத இயக்கம் அல்லது ஊழலுக்கு எதிரான போர் அல்லது சிவில் வசதிகள் மேம்பாடு ஆகிய எதுவாக இருந்தாலும், மத்திய அரசு மாநில அரசுடன் தோளோடுதோள் நின்று பணியாற்றுவதாகப் பிரதமர் தெரிவித்தார். இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ள ரூ.6,600 கோடி மதிப்பிலான திட்டங்கள் இந்த மண்டலம் மற்றும் இந்த மாநிலத்தின் மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும் என்று அவர் கூறினார். மோத்திஹரின் வரலாற்றில் ஒரு பகுதி எனப் பிரதமர் வருணித்த மோத்திஹீல் புத்துயிரூட்டல் அமைந்துள்ளதாகக் கூறினார். கழிவுநீர் கங்கையில் கலப்பதைத் தடுப்பதற்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். பீகார் மாநிலத்தில் உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற சுமார் 50 லட்சம் பெண்கள் பயனடைந்திருப்பதாகப் பிரதமர்  கூறினார். இந்த வகையில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலியத் திட்டங்கள் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சிக்கான உந்துவிசைப் பொறியாகக் கிழக்கிந்தியாவை மேம்படுத்தும் பெரிய தொநோக்கின் ஒரு பகுதியாக இன்று தொடங்கிவைக்கப்பட்ட திட்டங்கள் உள்ளன என்று பிரதமர் கூறினார். இன்று தொடங்கிவைக்கப்பட்ட சாலை மற்றும் ரயில் திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். மாதேபுரா மின்சார எஞ்ஜின் தொழிற்சாலை, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் முக்கியமான உதாரணம் என்றும், அந்த மண்டலத்தின் வேலைவாய்ப்புக்கு அது ஒரு ஆதாரம்  என்றும் பிரதமர் கூறினார். இன்று இயக்கிவைக்கப்பட்ட முதலாவது 12,000 ஹெச்பி  எஞ்ஜின் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறிப்பிடத்தக்க அளவு உயர்த்த உதவும் என்றார். இந்தத் திட்டத்திற்கான பணிகள் 2007ல் முதலாவதாக அனுமதிக்கப்பட்டதாகவும், மூன்றாண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கியதாகவும், அதன் முதலாவது கட்டம் ஏற்கெனவே நிறைவு பெற்றுவிட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார். மத்திய அரசு மக்களின் உதவியுடன் தனது அனைத்து இயக்கங்களையும் உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருப்பதாகப் பிரதமர் கூறினார்.

சுகாதாரத் துறையில் சாதனைகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், 2017ல் 40 சதவீதமாக இருந்த சுகாதாரநிலை இன்று 80 சதவிதமாக உயர்ந்துள்ளது என்றார். கழிவறைக் கட்டுமானங்கள், சமுதாய சமச்சீரின்மையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது, சமூக- பொருளாதார அதிகாரம் அளிப்பதற்கு வழிவகையாக மாறியுள்ளது, மகளிர் அதிகாரம்பெற உதவியுள்ளது என்றார் அவர். தூய்மை பாரத இயக்கம் 21ம் நூற்றாண்டில் உலகெங்கும் இணை சொல்லமுடியாத ஒரு பெரிய மக்கள் இயக்கம் என்று பிரதமர் கூறினார்.

தூய்மைக்கான தீர்மானம், தூய்மையான வளமான இந்தியாவுக்கான புதிய அத்தியாத்தை எழுதும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

=============


(रिलीज़ आईडी: 1528500) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Malayalam