பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு

உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் இந்தியாவின் 7.8% வளர்ச்சி, அதன் பொருளாதார வலிமையை பிரதிபலிக்கிறது: பிரதமர்

140 கோடி இந்தியர்களும் இணைந்து இந்தியாவை வளர்ச்சியடைந்த, தற்சார்பு நாடாக மாற்றுவார்கள்: பிரதமர்

இந்தியர்களால் உலகின் முன்னணி நிறுவனங்களை வழிநடத்த முடியுமென்றால், இந்திய நிறுவனங்களாலும் உலகை வழிநடத்த முடியும், இவை அனைத்தும் சாத்தியமே: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2026 9:52PM by PIB Chennai

ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். விழாவில் உரையாற்றிய அவர், கடந்தகால சவால்களையும் இன்றைய சாதனைகளையும் ஒப்பிட்டுப் பேசினார். பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதையும், ஆயுதப் படைகள் எதிரிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று துணிச்சலுடன் தாக்குவதையும், ஜம்மு-காஷ்மீர் முதல் வடகிழக்கு பிராந்தியம் வரை அமைதி திரும்பியிருப்பதையும் எடுத்துரைத்தார். இந்தியாவின் கொள்கை ரீதியான துடிப்பான செயல்பாடுகளையும், மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக அது திகழ்வதையும் உலக நாடுகள் பாராட்டி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். "மேற்கு ஆசியப் போர், உலகளாவிய வர்த்தகச் சிக்கல்களுக்கு மத்தியிலும் 7.8% காலாண்டு வளர்ச்சியை எட்டியிருப்பது இந்தியாவின் உள்ளார்ந்த திறனை வெளிப்படுத்துகிறது," என்று திரு மோடி குறிப்பிட்டார்.

கைப்பேசி ஏற்றுமதி தற்போது ரூ.2.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றும், உள்நாட்டுப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி என்ற வரலாற்றுச் சாதனை அளவை எட்டியுள்ளது என்றும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். இதன் மூலம், 2013-14-ல் வெறும் ரூ.600-700 கோடியாக இருந்த பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதித் துறை, இன்று ரூ.40,000 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான துறையாக வளர்ந்துள்ளது.

இளைஞர்கள், 140 கோடி இந்தியர்களின் திறன்கள் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர், தன்னிறைவு கொண்ட, முழுமையாக  வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஒரு துணிச்சலான தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார். விவசாய ஏற்றுமதியில் வல்லரசாகத் திகழ்வது, இந்திய விண்வெளி நிலையத்தை அமைப்பது, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது உள்ளிட்ட லட்சியமிக்க எதிர்கால மைல்கற்களையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

21-ம் நூற்றாண்டின் இளைஞர்களின் லட்சிய மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில், யூனிகார்ன் என்ற அதிக முதலீட்டு நிறுவனங்களை உருவாக்குதல், ட்ரோன் தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்துதல், அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றில் அவர்கள் காட்டும் ஆர்வத்தை பிரதமர் பாராட்டினார். முந்தைய தலைமுறையினரை விடப் பெரிய அளவில் கனவு காணுமாறு இளைஞர்களை ஊக்குவித்த அவர், உலகையே வழிநடத்தக்கூடிய வகையிலான ஆலோசனை, கணக்கியல், நிதி, சட்ட நிறுவனங்களை உருவாக்கும் சவாலை அவர்களுக்கு விடுத்தார். "இன்று உலகின் முன்னணி நிறுவனங்களை இந்தியர்களே வழிநடத்தி வருகின்றனர்அப்படியிருக்க, இந்தியர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் ஏன் உலகை வழிநடத்தக் கூடாது?" என்று திரு மோடி கேள்வி எழுப்பினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307060&reg=3&lang=1

***

SS/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307163) வருகையாளர் எண்ணிக்கை : 21