PIB Backgrounder
azadi ka amrit mahotsav

உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த சாரநாத்

இடுகை இடப்பட்ட நாள்: 26 AUG 2026 11:54AM by PIB Chennai

தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுக் கூட்டத்தின் 48-வது அமர்வில், பழங்கால பௌத்த தலமான சாரநாத் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றொரு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. புத்தர் தனது முதல் போதனையை வழங்கிய இடம் என்பதால், சாரநாத் அவரது வாழ்க்கையுடன் தொடர்புடைய நான்கு முக்கிய பௌத்த புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்தச் சேர்க்கை, இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்களின் எண்ணிக்கையை 45 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம், உலக அளவில் இந்தியா ஆறாவது இடத்தையும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், இது பௌத்த மதத்தின் பிறப்பிடமாக இந்தியாவின் அடையாளத்தையும், மிகச்சிறந்த உலகளாவிய மதிப்புள்ள பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அதன் அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துகிறது.

 

 

இந்தியாவின் பாரம்பரியத்திற்கான ஒரு மைல்கல் :

 

 

பாரம்பரியம் என்பது கடந்த காலத்தை நினைவூட்டுவது மட்டுமல்ல. அது நிகழ்காலத்தை வடிவமைத்து, எதிர்காலத்திற்கு வழிகாட்டுகிறது. சமூகங்கள் பாதுகாத்து, தலைமுறை தலைமுறையாகக் கடத்திச் செல்லும் கதைகள், மரபுகள், மாண்புகளை அது பிரதிபலிக்கிறது.

 

2026 ஜூலை 25 ஆம் தேதி மாலையில் , தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 48-வது அமர்வில், சாரநாத் பௌத்த தலம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில் பொறிக்கப்பட்டது.

 

யுனெஸ்கோ எனப் பரவலாக அறியப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு , மனிதகுலத்தில் சிறந்த மதிப்பைக் கொண்டுள்ள கலாச்சார, இயற்கை பாரம்பரியத்தை அடையாளம் காணுதல், பாதுகாத்தல், பேணுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. இந்த உறுதிப்பாடு, 1972-ல் யுனெஸ்கோவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக கலாச்சார, இயற்கை பாரம்பரியத்தின் பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் வேரூன்றியுள்ளது.

 

ஜூலை 2026 நிலவரப்படி, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் 173 நாடுகளில் பரவியுள்ள 1,273 இடங்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் 991 கலாச்சார , 240 இயற்கை, 42 கலப்புத் தலங்கள் அடங்கும். அக்டோபர் 2024 நிலவரப்படி, 196 உறுப்பு நாடுகள் உலகப் பாரம்பரிய மாநாட்டை அங்கீகரித்துள்ளன. இதன் மூலம் இது ஐக்கிய நாடுகள் சபையின் எந்தவொரு முகமையாலும் மிகவும் கொண்டாடப்பட்டும், அங்கீகரிக்கப்படும் மாநாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

 

உலகப் பாரம்பரியம் என்ற கருத்து தனித்துவமானது. ஏனெனில் அது தேசிய எல்லைகளைக் கடந்து விரிவடைகிறது. இந்தத் தலங்கள் தனிப்பட்ட நாடுகளின் எல்லைகளுக்குள் இருந்தாலும், அவற்றின் முக்கியத்துவம் முழு மனிதகுலத்திற்கும் உரியதாகும். அவை, வரும் தலைமுறையினருக்காகக் கூட்டுப் பராமரிப்புக்கும் பாதுகாப்பிற்கும் தகுதியான ஒரு பகிரப்பட்ட பாரம்பரியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

 

சாரநாத்தின் கதை:

 

பௌத்த மரபில் சாரநாத் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் அமைந்துள்ள இது, நான்கு முக்கிய பௌத்த புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தலப் பட்டியலில், சௌகண்டி ஸ்தூபி, சாரநாத்தின் தொல்பொருள் எச்சங்கள் ஆகிய இரண்டு ஒன்றோடொன்று இணைந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொல்பொருள் வளாகத்தில் தாமேக் ஸ்தூபி, தர்மராஜிகா ஸ்தூபி, மூலகந்தகுடி விகாரம், அசோகத் தூண், பல பழங்கால எச்சங்கள் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து, இந்தப் பழங்காலத் தலத்தின் வரலாற்று நிலப்பரப்பைப் பாதுகாக்கின்றன.

 

 

அங்கீகாரத்திற்கான பாதை:

 

சாரநாத் உலகப் பாரம்பரியத் தலமாக அங்கீகாரம் பெறுவதற்கான பயணம் ஒரு நீண்ட செயல்முறையாக இருந்துள்ளது. இந்தப் பழமையான தலம் 1998-ம் ஆண்டில் இந்தியாவின் உலகப் பாரம்பரியத் தலங்களின் உத்தேசப் பட்டியலில் சேர்க்கப்பட்டது .

 

இதை உலக பாரம்பரியக் குழுமத்தில் சேர்ப்பதற்கான முன்மொழிவு, 2025 ஜனவரியில் பரிசீலனைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது . இதைத் தொடர்ந்து பதினெட்டு மாத கால மதிப்பீட்டு செயல்முறை நடைபெற்றது. அதன் பிறகு தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுக் கூட்டத்தின் 48-வது அமர்வில் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவில் அது பாரம்பரிய பட்டியில் சேர்க்கப்பட்டது.

 

கடந்த காலத்தைப் பாதுகாத்து, எதிர்காலத்தை வடிவமைத்தல்:

 

இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியம் என்பது, தலைமுறை தலைமுறையாக மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து, கல்வி புகட்டி, அவர்களை இணைக்கும் ஒரு மரபாகும். சாரநாத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, தனிச்சிறப்பு வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதிலும், கல்வி, பண்பாட்டுப் பரிமாற்றம், நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் அவற்றின் பங்கை வலுப்படுத்துவதிலும் நாட்டின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்தியா முன்னேறிச் செல்லும்போது, ​​அதன் நாகரிக மரபைப் பேணிப் பாதுகாப்பதற்கும், அதனை உலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கும், தனது பாரம்பரியத்தைப் பாதுகாப்பது முக்கியமான ஒன்றாகத் திகழும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303427&reg=3&lang=1

(Release ID : 2303427)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303553) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati