PIB Backgrounder
azadi ka amrit mahotsav

சுரங்கத் துறை வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2026

प्रविष्टि तिथि: 18 AUG 2026 8:29PM by PIB Chennai

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றில் கனிம வளங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எஃகு, சிமெண்ட், மின்சாரம், மின்னணுவியல், போக்குவரத்து, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அடிப்படைத் தேவையாகக் கனிமங்கள் விளங்குகின்றன. இந்தியாவில் சுரங்கத் தொழில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2026 கனிமத் துறைக்குச் சீரான, சமச்சீரான நிதிக் கட்டமைப்பை உருவாக்குகிறது.

கனிம வளங்கள் சில மாநிலங்களில் அதிகமாகக் காணப்பட்டாலும், அவை நாடு முழுவதிலும் உள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றன. ஒரே சுரங்கச் செயல்பாட்டிற்குச் சுமார் 14 வகையான வரிகளும் கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன. மாநிலங்களுக்கு இடையே மாறுபடும் வரிகள் சுரங்கச் செலவை அதிகரிப்பதுடன், தொழில்துறையின் போட்டித்திறனையும் பாதிக்கின்றன. உள்நாட்டுக் கனிமங்களின் விலை அதிகரிப்பதால் இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. முக்கியக் கனிமங்களின் உற்பத்திக்கும் அதிகப்படியான வரிகள் தடையாக உள்ளன.

இந்தத் திருத்தச் சட்டத்தின் புதிய பிரிவு 9-டி-யின்படி, கனிம உரிமைகள் அல்லது கனிம வளம் கொண்ட நிலங்களுக்கு மாநில அரசுகள் எந்தப் பெயரிலும் வரி, செஸ் அல்லது பிற வரிகளை விதிக்க முடியாது. மத்திய அரசு நிர்ணயிக்கும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மட்டுமே இத்தகைய வரி விதிப்புகளை மேற்கொள்ள முடியும். இந்தத் திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு செலுத்தப்படாத அல்லது வசூலிக்கப்படாத வரி விதிப்புகள் செல்லாது எனக் கருதப்படும். ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகைகள் திருப்பி வழங்கப்படாது. இதற்கான விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு கனிம உற்பத்தி மூலம் மாநிலங்களுக்குக் கிடைக்கும் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. கனிமத் துறை வருவாயில் சுமார் 90 சதவீதம் தற்போது மாநிலங்களுக்கே செல்கிறது. மாநிலங்களுக்கு ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது. ஏல முறையின் மூலம் கூடுதல் வருவாய் வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. சிறு கனிமங்கள் தொடர்ந்து முழுமையாக மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இந்தத் திருத்தச் சட்டம் அவற்றில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

கனிம ஆய்வு, முக்கியக் கனிமங்களின் பாதுகாப்பு, மறுசுழற்சி, செயலாக்கம், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றுக்கு அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட தேசிய முக்கியக் கனிமங்கள் இயக்கத்திற்கு ரூ.16,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டித்தன்மை கொண்ட மின்னணு ஏலம், டிஜிட்டல் கண்காணிப்பு, கனிம வளம் சார்ந்த உள்ளூர் சமூகங்களுக்கான நலத்திட்டங்கள் ஆகியவை கனிமத் துறையை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

நிலையான, வெளிப்படையான நிதிக் கட்டமைப்பு மூலம் முதலீடு, உற்பத்தி, வேலைவாய்ப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, தேசியப் பாதுகாப்பு, தற்சார்பு ஆகியவற்றை மேம்படுத்தி, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கு இந்தத் திருத்தச் சட்டம் மேலும் வலுசேர்க்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301002&reg=3&lang=1

****

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2301024) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu