பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 MAR 2026 1:01PM by PIB Chennai

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.  ஏற்கனவே நடைபெற்ற தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சித் தொடர்பான அமர்வுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பட்ஜெட் உருவாக்கத்தின் போது பங்குதாரர்கள் மதிப்புமிகு ஒத்துழைப்பை அளித்ததாகக் கூறினார்.  தற்போது பட்ஜெட்டுக்கு பின் அதன் உண்மையான பயன்களை நாடு அனுபவம் கொள்வது அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பங்கேற்பாளர்களின் ஆலோசனைகள்  முக்கியமானது என்றும் திரு மோடி கூறினார்.

இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியப் பகுதியாக வேளாண்மை, இப்போதும் உள்ளது என்பதை எடுத்துரைத்த பிரதமர், நாட்டின் நீண்டகால வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய தூணாக அது விளங்குகிறது என்றார். பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி,  குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற பல திட்டங்களும் சீர்திருத்தங்களும் விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு வருவாய் கிடைப்பதை உறுதி செய்துள்ளன என்று திரு மோடி கூறினார்.

தற்போதுள்ள திட்டங்களின் வெற்றி குறித்து விவரித்த பிரதமர், பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதியாக 10 கோடி விவசாயிகள், 4 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி பெற்றிருப்பதாக கூறினார். பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்படி, காப்பீட்டு உரிமை கோரல்களுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்  வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த இணையவழிக் கருத்தரங்கில் உங்களின் விவாதமும் ஆலோசனைகளும் பட்ஜெட் அம்சங்களை கள அளவில் விரைவாக அமலாக்க உதவும் என்று திரு மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.

மீன்வளத்துறை பற்றி குறிப்பிட்ட பிரதமர், உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இந்தியா விளங்குகிறது என்றார். தற்போது நாட்டின் பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்களில் சுமார் 4.5 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்யப்படுவதாகவும் மேலும், 20 லட்சம் டன் உற்பத்தி செய்வதற்கான திறன் இந்தியாவில் உள்ளதென்றும் அவர் கூறினார்.

உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தியாளராக உள்ள இந்தியா, முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். இதனை மேலும் அதிகரிக்க தரமான கருத்தரிப்பு, நோய்த் தடுப்பு, அறிவியல்பூர்வ நிர்வாகம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். கால்நடைகளின் சுகாதாரம் முக்கியமானது என்பதை வலியுறுத்திய திரு மோடி, ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்று நான் பேசுவது கால்நடைகளின் சுகாதாரத்தை உள்ளடக்கியதுதான் என்று குறிப்பிட்டார்.

தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் தற்சார்பு பற்றி எடுத்துரைத்த பிரதமர், தேசிய கோகுல் இயக்கத்தின் கீழ், தொழில்நுட்ப விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் கால்நடை பராமரிப்பு விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்படுவதாகவும் கூறினார். கால்நடைகளை  கால்கள் மற்றும் வாய்ப்பகுதி நோய்களிலிருந்து பாதுகாக்க 125 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் கிராமச்சாலைகள் திட்டம் போன்றவற்றின் மூலம் கிராமப்புற வளத்தை அதிகரிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஊரக பொருளாதாரத்தில் சுயஉதவிக்குழுக்களின் தாக்கம் பற்றி கூறிய திரு மோடி, 2029-க்குள் 3 கோடி பெண் தொழில் முனைவோரை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது போன்ற  இலக்குகளை விரைவாக  எட்டுவதற்கு  உங்களின் ஆலோசனைகள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கும் பிரதமர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235842&reg=3&lang=1

***

TV/SMB/KPG/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2235995) வருகையாளர் எண்ணிக்கை : 30