பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறை விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த இந்தியா - இத்தாலி உறுதி
இடுகை இடப்பட்ட நாள்:
27 FEB 2026 5:08PM by PIB Chennai
இந்தியப் பாதுகாப்புத் துறை உற்பத்திப் பிரிவுச் செயலாளர் திரு. சஞ்சீவ் குமார் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இத்தாலியின் ரோம் நகருக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளுடன் முக்கியக் கூட்டங்களை நடத்தினார். இத்தாலியின் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் மேட்டியோ பெரேகோ டி கிரெம்னாகோ, தேசிய ஆயுத பிரிவு இயக்குநர் அட்மிரல் ஜியாசிண்டோ ஒட்டாவியானி மற்றும் இத்தாலியப் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் லூசியானோ போர்டோலானோ ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புகளின் போது, இரு நாடுகளும் தத்தமது பாதுகாப்பு விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும், தொழில் கூட்டாண்மைகளை மேம்படுத்தவும் தங்களின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தின. இரு நாடுகளின் பாதுகாப்புத் தொழில் சூழலை இணைப்பதன் மூலம் தொழில்முறை ஒத்துழைப்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டன.
ரோமில் நடைபெற்ற 'இந்தியா-இத்தாலி பாதுகாப்புத் தொழில் கருத்தரங்கில்' உரையாற்றிய திரு. சஞ்சீவ் குமார், இந்தியாவின் பாதுகாப்பு கொள்முதல் கொள்கைகள், நேரடி அந்நிய முதலீட்டு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்புத் தொழில் வழித்தடங்கள் குறித்து விரிவாக விளக்கினார். 2026 ஜனவரியில் கையெழுத்தான இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புப் பங்கீடு, இந்திய நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும் என இரு தரப்பும் குறிப்பிட்டன.
இந்தக் கருத்தரங்கில் இந்தியப் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தொழில்நுட்பக் கூட்டாண்மை மற்றும் கூட்டுத் தயாரிப்பு குறித்து இத்தாலிய நிறுவனங்களுடன் ஆலோசித்தனர்.
***
(Release ID: 2233581)
TV/VK/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2233767)
வருகையாளர் எண்ணிக்கை : 42