2026ஆம் ஆண்டிற்கான வைஸ் அட்மிரல் கே.கே. நய்யார் நினைவு சொற்பொழிவு பிப்ரவரி 16 அன்று நடைபெற்றது. இது தேசிய கடல்சார் அமைப்பின் (என்எம்எப்) 21-வது நிறுவன நாளை முன்னிட்டு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி என்எம்எப் அமைப்பை உருவாக்க முக்கிய பங்காற்றிய வைஸ் அட்மிரல் நய்யாரின் சேவையை நினைவுகூரும் வகையில் நடைபெற்றது. அவர் இந்தியாவில் கடல்சார் விழிப்புணர்வை உருவாக்கவும், கடல்சார் கொள்கை சிந்தனையை வளர்க்கவும் முக்கிய பங்களிப்பு செய்தவர். மேலும், விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை அமைப்பை உருவாக்கவும் அவர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் என்எம்எப் தலைவர் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி முக்கிய உரையாற்றினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு கடல்சார் பாதுகாப்பு மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்திய கடற்படையின் பங்கு அதிகரித்து வருவதாகவும், வரவிருக்கும் சர்வதேச கடற்படை அணிவகுப்பில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 9-வது இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு மாநாட்டில் இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது என்றும் கூறினார்.
நினைவு சொற்பொழிவை இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர், என்.ஆர். நாராயணமூர்த்தி வழங்கினார். “சேவைக்கான வாழ்க்கைக்கு ஒரு வணக்கம்” என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். 2047க்குள் இந்தியா முன்னேற்றமான நாடாக உயர்வதற்கு கடல்சார் வலிமை முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் பாதுகாப்பு, கடல்சார் வர்த்தகம் மற்றும் உலகளாவிய முன்னேற்றத்தில் கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், நவீன தொழில்நுட்பங்கள் போன்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய பாதுகாப்பு திறன்கள் எதிர்காலத்தில் முக்கியமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் ஆயுதப்படை அதிகாரிகள், தூதரக பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் துணை அட்மிரல் நய்யாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229049®=3&lang=1
***
AD/PKV/SH