ஆயுஷ்
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்வுகள்
இடுகை இடப்பட்ட நாள்:
04 FEB 2026 9:14PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் ஒருங்கிணைந்த புற்றுநோயியல் மையத்தின் சார்பில் 2026-ஆம் ஆண்டு உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தியது. பிப்ரவரி 3 அன்று மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் முழக்கம் எழுதுதல் போட்டிகளுடன் தொடங்கிய இந்த நிகழ்வுகளின் முக்கிய விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏஐஐஏ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் பிரதீப்குமார் பிரஜாபதி, மருத்துவக் கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் யோகேஷ் பத்வே உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மருத்துவமனை வெளிநோயாளி பிரிவில் நோயாளிகளிடையே பேசிய மருத்துவ வல்லுநர்கள், புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் புற்றுநோய் தடுப்பில் ஆயுர்வேதத்தின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதிய அமர்வில், டெல்லி ஐஐடி இணைப் பேராசிரியர் டாக்டர் அசோக் படேல் சிறப்புரை ஆற்றினார். அவர் புற்றுநோய் குறித்த மூலக்கூறு புரிதல் மற்றும் மரபணு ஆராய்ச்சி குறித்து விளக்கினார். விழாவில் ஒருங்கிணைந்த புற்றுநோயியல் மையத்தின் தகவல் கையேடு வெளியிடப்பட்டதோடு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. புற்றுநோய் தடுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் சான்றுகள் அடிப்படையிலான ஒருங்கிணைந்த சிகிச்சையில் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தை இயக்குநர் பிரதீப்குமார் பிரஜாபதி தனது உரையில் வலியுறுத்தினார்.
***
(Release ID: 2223472)
TV/VK/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2223502)
வருகையாளர் எண்ணிக்கை : 12