கலாசாரத்துறை அமைச்சகம்
தேசிய ஆவணக் காப்பாளர்கள் குழுவின் பொன்விழா கூட்டம் சென்னையில் நிறைவடைந்தது
Posted On:
19 SEP 2025 4:05PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள இந்திய தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வு நிறுவனங்கள் இணைந்து நடத்திய தேசிய ஆவணக் காப்பாளர்கள் குழுவின் இரண்டு நாள் பொன் விழாக் கூட்டம் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் இன்று (செப்டம்பர் 19, 2025) நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தை சென்னையில் நடத்துவது இது நான்காவது முறையாகும்.
மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கோவி செழியன், இந்திய தேசிய ஆவணக் காப்பகங்களின் தலைமை இயக்குநர் திரு சஞ்சய் ரஸ்தோகி, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வு நிறுவனத்தின் முதன்மைச் செயலாளர்/ ஆணையர் திரு. ஹர் சகாய் மீனா மற்றும் உயர் அலுவலர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
ஆவணங்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசின் உறுதிப்பாட்டை தமது துவக்க உரையின் போது அமைச்சர் டாக்டர் கோவி செழியன் வலியுறுத்தினார். பழமையான ஆவணங்களை பாதுகாக்க ஜப்பான் திசு முறையில் அவற்றை செப்பனிடும் பணிக்காக கடந்த ஆண்டு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு கூடுதலாக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டின் வரலாறு குறித்த ஆய்வை மேற்கொள்ள இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு மாதந்தோறும் 25,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, 1857-ம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்கள்; மைசூர் போர்களும், தமிழ்நாடு கைப்பற்றப்பட்ட முறைகளும்' என்ற இரண்டு நுால்களையும் அவர் வெளியிட்டார். தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் இணையதளத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு சஞ்சய் ரஸ்தோகி, இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகளைக் குறிப்பிட்டு, அதன் முன்னோடி டிஜிட்டல் தளமான அபிலேக் படல், தற்போது 14 மில்லியன் பக்கங்களை உள்ளடக்கிய பொது ஆவணங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
***
AD/BR/SH
(Release ID: 2168811)