கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை விரிவுபடுத்துதல்

Posted On: 22 JUL 2025 1:33PM by PIB Chennai

நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கும் அதன் பலன்கள் கடைக்கோடி கிராமங்கள்வரை சென்று சேர்வதற்குமான ஒரு திட்டத்திற்கு அரசு 15-2-2023 அன்று அனுமதி அளித்திருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ஐந்தாண்டு காலத்தில் 2 லட்சம் புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்களும் பால்வளம் மற்றும் மீன்வள கூட்டுறவு சங்கங்களும் நிறுவப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வகையில் மாதிரி துணை விதிகளை அமைச்சகம் தயாரித்துள்ளது. இதனால் இந்த கூட்டுறவு சங்கங்கள் இனி நியாயவிலைக் கடைகள், பொதுச்சேவை மையங்கள், எல்பிஜி/பெட்ரோல்/டீசல் விநியோகம் போன்ற 25 வகையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

இவை தவிர இந்திய அரசு மேலும் பல முக்கிய முன்முயற்சிகளையும் எடுத்து வருகின்றது.

•     தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்குவதற்காக ரூ.2,925.39 கோடியை இந்திய அரசு அனுமதித்துள்ளது. இதுவரை 59,920 கூட்டுறவு கடன் சங்கங்கள் தொழில் நிறுவன வளத் திட்டமிடல் (ஈ.ஆர்.பி) மென்பொருளில் இணைந்துள்ளன.

•     5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களில் புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் சங்கங்களையும் பால்வளம் மற்றும் மீன்வள கூட்டுறவு சங்கங்களையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய கூட்டுறவுத் தரவுத் தொகுப்பின்படி நாட்டில் 22,606 புதிய கூட்டுறவு சங்கங்கள் 30   -6-2025 அன்றைய நிலவரப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.

•     தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிலையில் தானிய சேமிப்பிற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. முன்னோட்டத் திட்டத்தின் கீழ் இதுவரை 11 தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் சேமிப்புக் கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

•     தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வருங்காலத்தில் பொதுச்சேவை மையங்களாக, பிரதமரின் வேளாண் வளர்ச்சி மையங்களாக, பிரதமரின் மக்கள் மருந்தகங்களாகச் செயல்படும்.

கூட்டுறவுத் துறையில் புத்தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு உதவும் வகையில் யுவ சஹகார் திட்டம், மகளிரின் சமூக பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கும் அவர்கள் தொழில் முனைவில் ஈடுபடுவதற்கும் நந்தினி சஹகார் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதற்கு உதவும் வகையில் வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதிஉதவி அளிப்பதற்காக சுயம்சக்தி சஹகார் திட்டம் ஆகியன தொடங்கப்பட்டுள்ளன.

இதனை மக்களவையில் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

***

AD/TS/KR


(Release ID: 2146865)
Read this release in: English , Urdu , Hindi