பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
ஒடிசாவில் இந்திய எஃகு ஆணையத்தின் ரூர்கேலா ஆலை விரிவாக்கத் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம்
Posted On:
26 JUN 2025 6:00PM by PIB Chennai
ரூர்கேலா எஃகு உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்வது குறித்து மத்திய கனரக தொழில்கள் அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி, மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சர் திரு ஜுவல் ஓரம் மற்றும் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆகியோர் முன்னிலையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒடிசா மாநில அரசு, இந்திய எஃகு ஆணையம் மற்றும் ரூர்கேலா எஃகு உற்பத்தி ஆலையின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், ரூர்கேலா எஃகு ஆலையின் உற்பத்தித் திறனை 4.5 மெட்ரிக் டன்னிலிருந்து 9.3 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கவும், உற்பத்தி செய்யப்படும் எஃகை எடுத்துச் செல்லவும் அங்குள்ள ரயில் பாதையை இரட்டிப்பாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம்,தொழில்துறை திறனை விரிவுபடுத்துவதற்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய பழங்குடியின விவகாரத் துறை அமைச்சர் திரு ஜுவல் ஓரம், உள்நாட்டு எஃகு உற்பத்தித் துறை எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அத்துறைக்கான மத்திய அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். புலம்பெயர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது உட்பட, வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூர்கேலா விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக கூடுதல் நிலத்தை வழங்க இந்திய எஃகு ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு எஃகு உற்பத்தி ஆலைகளில் எழும் பிரச்சனைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை வழங்க மத்திய எஃகு அமைச்சகம் மற்றும் ஒடிசா மாநில அரசின் மூத்த அதிகாரிகள், இந்திய எஃகு ஆணை அதிகாரிகள் அடங்கிய உயர் நிலைக் குழு அமைப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
***
(Release ID: 2139908)
TS/SV/RR/KR/DL
(Release ID: 2139938)