புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
எஸ்இசிஐ வெளியிட்ட பசுமை அமோனியா ஒப்பந்தம்: சமர்ப்பிக்க கடைசி நாள் 26.06.2025
Posted On:
23 JUN 2025 12:14PM by PIB Chennai
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'நவரத்னா' மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய சூரிய எரிசக்தி கழக நிறுவனம் (எஸ்இசிஐ), இந்தியாவின் உரத் துறையை கார்பன் உமிழ்வு இல்லாததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட பசுமை அமோனியாவை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது. இது ஒரு மைல்கல் சாதனையாகும். இறுதி ஏல சமர்ப்பிப்புகள் விரைவில் வரவுள்ள நிலையில், பசுமை ஹைட்ரஜன் மாற்றத்திற்கான உத்திசார் தலையீடுகள் திட்டத்தின் கீழ், 13 உர ஆலைகளில் ஆண்டுதோறும் 7,24,000 டன் பசுமை அம்மோனியாவை உற்பத்தி செய்து வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எஸ்இசிஐ-யின் தேவையைப் பொறுத்து, நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும். இது உற்பத்தியாளர்களுக்கு 10 ஆண்டு ஒப்பந்தக் காலத்தில் சந்தை உறுதிப்பாட்டை வழங்கும். 2024 ஜூன் 07 அன்று ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது. ஏலம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2025 ஜூன் 26 ஆகும்.
யூரியா மற்றும் பிற நைட்ரஜன் சார்ந்த உரங்களில் இன்றியமையாத அங்கமான அம்மோனியா, தற்போது புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது அதிக பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது. எஸ்இசிஐ-யின் ஒப்பந்தப்புள்ளியானது புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி பசுமை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியாவை உற்பத்தி செய்வதற்கானதாகும். இது குறைந்த கார்பன் உமிழ்வோடு உள்நாட்டு உர உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
நிதி நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்பு உதவித் தொகை முதல் மூன்று ஆண்டுகளுக்கு முறையே கிலோவுக்கு ரூ.8.82, ரூ.7.06 மற்றும் ரூ.5.30 என்ற விலையில் வழங்கப்படும். மொத்த ஆதரவு ரூ.1,533.4 கோடியாகும். உர நிறுவனங்களிடமிருந்து சாத்தியமான கட்டண தாமதங்களைச் சமாளிக்க மத்திய அரசு ஒரு வலுவான கட்டண பாதுகாப்பு செயல்முறையையும் உறுதி செய்துள்ளது. இது விநியோகதாரர்களுக்கு நிலையான பணப்புழக்கத்தை உறுதி செய்கிறது. அதிக பங்கேற்பு மற்றும் நிதியுதவியை ஊக்குவிக்கிறது. இந்தியா ஆண்டுதோறும் சுமார் 17-19 மில்லியன் டன் அம்மோனியாவைப் பயன்படுத்துகிறது. மேலும் அதன் ஹைட்ரஜன் தேவையில் 50%-க்கும் அதிகமானவை உர உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இதில் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை எரிவாயுவிலிருந்து பெறப்படுகின்றன. எஸ்இசிஐ-யின் முன்முயற்சி இந்த சார்புநிலையை வெகுவாகக் குறைப்பதுடன், உலகளாவிய எரிவாயு விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும். மேலும், வர்த்தக பற்றாக்குறையையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் போது, ஒரு கிலோவிற்கு 2 கிலோ கரியமில வாயு என்ற அளவுக்குக் குறைவாகவே வெளியிடுகிறது, வழக்கமான சாம்பல் ஹைட்ரஜனிலிருந்து 12 கிலோ அளவுக்கு கரியமில வாயு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு பசுமை அம்மோனியா உற்பத்தி புவிசார் அரசியல் சீர்குலைவுகளின் போது மீள்தன்மையை அதிகரிக்கும் என்பதுடன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி 2070-ம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகும். மேலும் வளர்ந்த, நிலையான மற்றும் சுயசார்பு இந்தியாவுக்கான பரந்த பார்வையை இது ஆதரிக்கிறது. புத்தாக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் உலகளாவிய தாக்கத்துடன் தூய்மையான எரிசக்தி சந்தைகளில் முன்னோடியாக விளங்கும் எஸ்இசிஐ-யின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, ஏலதாரர்கள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த திட்டங்களை முன்வைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
---
(Release ID: 2138823)
VL/PKV/KPG/KR
(Release ID: 2138875)