சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன், புதுச்சேரி சட்டப்பேரவைக்கான ‘நேவா’ டிஜிட்டல் தளத்தை தொடங்கி வைத்தார்
Posted On:
09 JUN 2025 1:52PM by PIB Chennai

வெளிப்படையான, திறமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிர்வாகத்தை நோக்கிய முயற்சிகளில் ஒன்றாக புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேசிய இ-சட்டப்பேரவை செயலியை (நேவா) மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் புதுச்சேரியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் திரு கே கைலாஷ்நாதன், முதலமைச்சர் திரு என் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் திரு ஆர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தத் தொடக்கத்துடன், பிரதமர் திரு நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க நேவா தளத்தை செயல்படுத்தும் நாட்டின் 19-வது சட்டப்பேரவையாக புதுச்சேரி மாறியுள்ளது. காகிதமில்லா சட்டப்பேரவை செயல்பாடுகளுக்கான இந்த முன்முயற்சிக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் மூலம் மத்திய அரசு 100 சதவீதம் நிதி வழங்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் எல் முருகன், நேவா என்ற மாற்றத்திற்கான இந்த முன்முயற்சி சட்டப்பேரவை நடவடிக்கைகளின் நிகழ்நேர அணுகலை உறுதி செய்வதோடு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது என்றார். உத்தேசிக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, மற்றும் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்களுக்கு ஏற்ப ‘ஒரே நாடு ஒரே செயலி’ என்ற கோட்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா மாறியிருப்பது, நேரடி பயன் பரிமாற்றத்தின் மூலம் நலத்திட்ட உதவி வழங்குதல், தற்சார்பு இந்தியாவின் கீழ் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பாதுகாப்புத் தளவாட இறக்குமதி 50 சதவீதம் குறைந்திருப்பது உட்பட பிரதமர் திரு மோடி தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளின் முக்கிய சாதனைகளையும் டாக்டர் எல் முருகன் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூக மூலதனம் என்ற இரண்டு முக்கிய அம்சங்களால் இயக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய பயணத்தால் 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன், நேவா தொடக்கம் ஒரு மைல்கல் என்று பாராட்டியதுடன், இது சட்டப்பேரவை நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குவது மட்டுமின்றி அவற்றை நேரடியாக காண்பதையும் வெளிப்படைத்தன்மையோடு பொதுமக்கள் அணுகலையும் உறுதி செய்யும் என்றார். டிஜிட்டல் இந்தியா, பசுமை இந்தியா, நல்ல நிர்வாகம் ஆகியவற்றுக்கு உதவி செய்வதோடு ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து டன் வரை காகிதத்தை இதன் மூலம் மிச்சப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேவா தளத்தின் சிறப்பம்சங்கள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்த செயலியின் சுமூகமான பயன்பாட்டிற்கு விழிப்புணர்வு முகாம்கள், திறன் கட்டமைப்பு அமர்வுகள் நடத்தப்பட உள்ளன.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நேவா என்பது ஓர் இயக்க மாதிரியிலான தளமாகும். காகிதமில்லாத, திறன்மிக்க, மக்களை மையப்படுத்திய சட்டப்பேரவை நடவடிக்கைகளை உறுதி செய்ய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்திற்குள் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களையும் கொண்டு வருவது இதன் நோக்கமாகும்.
***
AD/SMB/RR/KR
(Release ID: 2135080)