சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
துஷான்பே-யில் நடைபெற்ற உயர்நிலை சர்வதேச மாநாட்டில் பனிப்பாறைகள் பாதுகாப்பிற்கான நிலைப்பாட்டிற்கு இந்தியா மீண்டும் வலியுறுத்தல்
Posted On:
31 MAY 2025 12:26PM by PIB Chennai
தஜிகிஸ்தானில் உள்ள துஷான்பே-யில் 2025-ம் ஆண்டுமே 29 - ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்ற பனிப்பாறைகள் பாதுகாப்பிற்கான சர்வதேச உயர்நிலை மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து துறை சார்ந்த நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் முக்கிய நன்னீர் நீர்த்தேக்கங்களாகவும், பருவநிலை மாற்றத்தின் குறிகாட்டிகளாகவும் செயல்படும் பனிப்பாறைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கபட்டது.
பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு எச்சரிக்கை மட்டுமின்றி, நீர் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உடனடியான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பதாக உள்ளது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
பனிப்பாறைகள் உருகுவதால் உலகளவிலும், பிராந்திய அளவிலும் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்த அமைச்சர், வேகமாக மாறி வரும் இயற்கைக் சூழல், இமயமலை போன்ற மலைப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் பெரும் தாக்கங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இமயமலையில் உள்ள பனிச் சிகரங்களுடன் கூடிய சுற்றுச்சூழல் மண்டலத்துடன் இணைக்கப்பட்ட ஒரு நாடாக இந்தியா இருப்பதன் காரணமாக, இது போன்ற நிகழ்வுகள் கலையளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் பனிப்பாறை உருகும் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் தொடர் கண்காணிப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
நாட்டின் தேசிய பருவநிலை மாற்ற செயல் திட்டத்தின் முக்கிய அங்கமான இமயமலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் அமைப்பை நிலைநிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தின் கீழ் உத்திசார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இமயமலைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் மற்றும் பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக உருவான ஏரிகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கிரையோஸ்பியர் மற்றும் பருவநிலை மாற்ற ஆய்வுகளுக்கான மையம் அமைக்கப்படவுள்ளதாகவும் திரு கீர்த்தி வர்தன் சிங் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132964
****
AD/SM/SV/RJ
(Release ID: 2132967)