பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 12 MAY 2025 8:48PM by PIB Chennai

அன்பிற்குரிய நாட்டு மக்களுக்கு வணக்கம்.

 

நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் வலிமையையும் அதன் பொறுமையையும்  பார்த்தோம். நான் முதலில் பாரதத்தின் வீரம் மிகுந்த படைகளுக்கும், ஆயுதம் தாங்கிய சேனைகளுக்கும் நமது உளவுத்துறையினருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரப்பிலிருந்தும் வணக்கம் செலுத்த விரும்புகிறேன். நம்முடைய துணிச்சல் மிகுந்த ராணுவ வீரர்கள் ‘ஆபரேஷன்  சிந்தூரின்’ இலக்குகளை அடைவதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நான் அவர்களது வீரத்திற்கும், துணிச்சலுக்கும், பராக்கிரமத்திற்கும் வணக்கம்  செலுத்துகிறேன்.

 

 

நாட்டின் ஒவ்வொரு அன்னைக்கும், ஒவ்வொரு சகோதரிக்கும் மற்றும் ஒவ்வொரு மகளுக்கும் இந்த பராக்கிரமத்தை சமர்ப்பிக்கிறேன்.

 

நண்பர்களே,

 

ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நிகழ்த்திய அந்த மனிதத்தன்மையற்ற தாக்குதல், நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. விடுமுறை காலத்தை கழிக்கவந்த ஒன்றுமறியா அப்பாவி குடிமகன்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு, அவர்களது குடும்பத்திற்கு முன்னே, அவர்களது குழந்தைகளுக்கு முன்பு இரக்கமில்லாமல் கொன்றனர்.

 

இது தீவிரவாதத்தின் மிகவும் வெறுக்கத்தக்க முகமாகும். இது கொடூரம் மிகுந்தது. இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியைத்  தந்தது.

 

 

இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முழு நாடும்ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரே குரலில் தீவிரவாதத்திற்கு எதிராகக் கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தின.

 

நாங்கள் தீவிரவாதிகளை மண்ணோடு மண்ணாக்க, இந்தியப் படைகளுக்கு முழு அனுமதி அளித்தோம். இன்று ஒவ்வொரு தீவிரவாதியும், தீவிரவாதத்தினால் ஏற்படும் விளைவைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

அதாவது, நமது சகோதரிகள், மகள்கள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிப்பதற்கான அந்த செயலின் பிரதிபலன் என்னவாக இருக்கும் என்று அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்.

 

நண்பர்களே,

 

ஆபரேஷன்  சிந்தூர் ஒரு பெயர் மட்டுமல்ல, இந்த நாட்டின் கோடான கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு. ஆபரேஷன்  சிந்தூர் நியாயத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு உறுதிமொழி. மே 6-ஆம் தேதி இரவு, மே 7-ஆம் தேதி காலை, இந்த முழு உலகமும் அந்த உறுதியின் முடிவு என்ன என்பதைக் கண்டது. இந்தியாவின் ராணுவம், பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீது, அவர்களுடைய பயிற்சி மையங்கள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தினார்கள்.

தீவிரவாதிகள் தங்களுடைய கனவில்கூட, பாரதம் இத்தகைய முடிவு எடுக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்கள். ஆனால், நாடு ஒன்றிணைந்து செயல்பட்டபோது, நாடுதான் முதலில் என்ற எண்ணம் நிரம்பி வழிந்து நாட்டின் நலனே முதலில் என்ற எண்ணம் ஏற்பட்டது.  அடிப்படையான முடிவு எடுக்கும்போது, அது சரியான பலன்களைக் கொண்டுவந்து தருகிறது. பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீது பாரதம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியபோது, பாரதம் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியபோது, தீவிரவாதக் குழுக்களின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவற்றின் நம்பிக்கையும் தவிடுபெடியானது. பகவல்பூர் மற்றும் முரிதுகே போன்ற தீவிரவாதிகளின் வாழ்விடங்கள், உலக தீவிரவாதிகளின் பல்கலைக்கழகமாக விளங்கின.

 

உலகில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் எங்கேயாவது நடந்தால்,

செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும்,

லண்டன் பாதாள ரயில் தாக்குதலாக இருக்கட்டும் அல்லது பாரதத்தில் பல ஆண்டுகளாக நடந்த பெரிய பெரிய தீவிரவாத தாக்குதல்களாக இருக்கட்டும், இவற்றின் தொடர்பு எந்த வகையிலேனும் இந்த தீவிரவாத முகாம்களோடு இணைந்திருந்தது. தீவிரவாதிகள் நமது சசோதரிகளின் நெற்றிக் குங்குமத்தை அழித்தனர். இதனால் பாரதம் தீவிரவாதத்தின் தலைமைப் பீடத்தை இப்போது அழித்திருக்கிறது.

 

பாரதத்தின் இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான கொடிய தீவிரவாதிகள் இறந்திருக்கிறார்கள். தீவிரவாதத்தின் பல கிளைகள் கடந்த 25-30 ஆண்டுகளாக  வெளிப்படையாக பாகிஸ்தானில் உலாவி வருகின்றன. இத்தகைய தீவிரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வந்தார்கள். அவர்களை பாரதம் ஒரே அடியில் அழித்து விட்டது.

 

நண்பர்களே,

 

பாரதத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் மிகப்பெரிய நிராசையில் வீழ்ந்து விட்டதோடு விரக்தியிலும் வீழ்ந்து விட்டது.

நிலைகுலைந்து போய் விட்டது. இந்த நிலைகுலைவின் காரணமாக பாகிஸ்தான் மற்றுமொரு அசட்டுத்தனமான நடவடிக்கையை எடுத்தது. தீவிரவாதத்தின் மீது பாரதத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோவதை விட்டுவிட்டு, பாகிஸ்தான் பாரதத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

 

பாகிஸ்தான் நமது பள்ளிகள், கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், சாமான்ய குடிமக்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான், நம்முடைய ராணுவ முகாம்களைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தியது. ஆனால், இதில்கூட பாகிஸ்தானின் முகத்திரை கிழிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் ஆகியவை பாரதத்தின் முன்னே செயலிழந்து போனதை உலகம் கண்டது. இந்தியாவின் பலம் வாய்ந்த பாதுகாப்பு கட்டுமானங்கள், அவற்றை வானிலேயே தடுத்து அழித்தன. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், தாக்குதல் நடத்தத் தயாராக இருந்தது. ஆனால், பாரதம் பாகிஸ்தானின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தியது.

 

பாரதத்தின் ட்ரோன்கள், ஏவுகணைகள் துல்லியமாக தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானின் விமானப்படையின் ஏர் பஸ் விமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தினோம். இந்த விமானங்கள் மீது பாகிஸ்தானுக்கு மிகுந்த கர்வம் இருந்தது. பாரதம் முதல் மூன்று நாட்களில் பாகிஸ்தானில் ஏற்படுத்திய அழிவுகள் எப்படிப்பட்டவை என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. எனவேபாரதத்தின் தாக்குதல் செயல்பாடுகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் தப்பிப்பதற்கான வழிமுறைகளை தேடத் தொடங்கியது. இந்தத் தாக்குதலை குறைப்பதற்கான வழிமுறைகளைச் செய்யுங்கள் என பாகிஸ்தான் உலகம் முழுவதிலும் மன்றாடியது. மேலும், முற்றிலுமாக அடிவாங்கிய பின்னர், மே 10-ஆம் தேதி மதியத்திற்கு மேல் ஒரு கட்டாயத்தின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி, நம்முடைய ராணுவத் தளபதியோடு தொடர்பு கொண்டார். அதற்குள்ளாகவே நாம் தீவிரவாத கட்டமைப்புகளை மிகப்பெரிய அளவில் அழித்து விட்டோம். தீவிரவாதிகளை மரணத்தின் எல்லைக்குக் கொண்டு சென்றோம்.

 

பாகிஸ்தான் தன் மையத்தில் மறைத்து வைத்திருந்த தீவிரவாத முகாம்களை நாம் அழித்து விட்டோம். இதனால், பாகிஸ்தானிலிருந்து பெரிய அழுகுரல் கேட்கத் தொடங்கியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து இது சொல்லப்பட்டபோது,

அதாவது, அவர்களது தரப்பிலிருந்து தீவிரவாத தாக்குதலோ, ராணுவத்தின் மூலம் அசட்டுத்தனமான தாக்குதல்களோ இனிமேல் இருக்காது என்று சொன்னபோது, உடனே, பாரதம் அதைப் பற்றி யோசனை செய்தது.

 

நான் மீண்டும் சொல்கிறேன். பாகிஸ்தானின் தீவிரவாத ராணுவ முகாம்கள் மீது எங்களுடைய பதிலடி நடவடிக்கைகள் இப்போது சிறிது காலத்திற்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. வருகிற நாட்களில் பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம். அது எந்த மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்றுகிறது என்பதை கவனிப்போம்.

 

நண்பர்களே,

 

பாரத்தின் முப்படைகளும், நம்முடைய விமானப்படை, நம்முடைய தரைப்படை, கடற்படை, நம்முடைய எல்லைப் பாதுகாப்புப்படை, பாரதத்தின் துணை ராணுவப்படை அனைத்தும் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றன.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழி தாக்குதலுக்கு பிறகு இப்போது ஆபரேஷன்  சிந்தூர் பாரதத்தின் வழிமுறையாகி விட்டது.

 

 

ஆபரேஷன்  சிந்தூர், தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு புதிய கோட்டை கிழித்துள்ளது. ஒரு புதிய அளவுகோல், ஒரு புதிய தரக்கட்டுப்பாடு உருவாகி இருக்கிறது. முதலில், பாரதத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். நாங்கள் எங்களுடைய வழிமுறையில், எங்களுடைய விதிமுறைகளுக்கேற்ப, பதிலடி தருவோம். தீவிரவாதத்தின் வேர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று கடுமையான நடவடிக்கை எடுப்போம். இரண்டாவதாக, பாரதம் அணுஆயுத தாக்குதல் என்ற மிரட்டலையெல்லாம் பொறுத்துக்கொள்ளாது. அணுஆயுத தாக்குதல் என்கின்ற மிரட்டலோடு செயல்படுகின்ற தீவிரவாத முகாம்கள் மீது பாரதம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்.  மூன்றாவதாக, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு மற்றும் தீவிரவாத குழுக்கள் இவற்றை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை.

ஆபரேஷன்  சிந்தூர் நடவடிக்கையின் மூலம், உலகம் பாகிஸ்தானின் உண்மையான ரூபம் என்ன என்று பார்த்திருக்கிறது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது, பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனர். ஒரு நாட்டால் ஆதரிக்கப்படும் தீவிரவாதத்திற்கு இதைவிட பெரிய சாட்சி என்ன இருக்கிறது? நாங்கள் பாரதம் மற்றும் எங்களுடைய குடிமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாத வண்ணம் திடமான முடிவுகளை எடுப்போம்.

 

நண்பர்களே,

 

யுத்த பூமியில் நாங்கள் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை தவிடுபொடியாக்கி இருக்கிறோம். மேலும், இந்த முறை ஆபரேஷன்  சிந்தூர் ஒரு புதிய கோணத்தை சேர்த்திருக்கிறது. நாங்கள் பாலைவனங்கள், மலைகள் மீது எங்களுடைய திறமையை மிகப் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறோம்.

 

 

மேலும், புதிய யுக போர் என்ற பெயரில் எங்களது திறமையை காண்பித்திருக்கிறோம். இந்த ஆபரேஷன்  மூலமாக  நம்முடைய இந்தியாவிலேயே தயாரிப்போம் முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் திறமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 21 -ஆம் நூற்றாண்டின் போர் முறைகளில் இந்தியாவின் போர்க்கருவிகள் எப்படி இருக்கின்றன என்பதை இன்று உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

 

நண்பர்களே,

 

இந்த மாதிரியான தீவிரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.  நம்முடைய ஒற்றுமை, நம்முடைய மிகப்பெரிய சக்தியாகும். உண்மையில் இந்த யுகம், போருக்கானது அல்ல, ஆனால் இந்த யுகம் தீவிரவாதத்திற்கானதும் அல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை, ஒரு நல்ல உலகத்திற்கு உறுதி அளிக்கிறது.

 

நண்பர்களே,

 

பாகிஸ்தானின் ராணுவம், பாகிஸ்தானின் ஆட்சி எந்த வகையில் தீவிரவாதத்திற்குத் துணை போகின்றதோ அது ஒருநாள் பாகிஸ்தானை முடிவுக்குக் கொண்டுவரும். பாகிஸ்தான் தப்பிக்கவேண்டும் என்றால், தன் நாட்டில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளை அது சுத்தப்படுத்த வேண்டும். இதைதவிர, அமைதிக்கு வேறு வழியே இல்லை.  பாரதத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவார்த்தையும், ஒருங்கே செல்லவியலாது. தீவிரவாதமும், வணிகமும் ஒருங்கே செல்லவியலாது.

மேலும், தண்ணீரும், ரத்தமும் ஒரேசேர பாய முடியாது.  நான் இன்று உலக சமுதாயத்திற்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்களுடைய அறிவிக்கப்பட்ட நீதி என்னவென்றால், பாகிஸ்தானுடன் ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால் அது தீவிரவாதம் பற்றியதாக இருக்கும்.

ஒருவேளை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால் அது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்ற காஷ்மீரைப் பற்றியதாக இருக்கும்.

 

அன்புக்குரிய நாட்டுமக்களே,

 

இன்று புத்த பூர்ணிமா. பகவான் புத்தர் நமக்கு அமைதியின் பாதையைக் காட்டியிருக்கிறார். அமைதியின் பாதை வலிமையோடுதான் செல்கிறது. மனிதகுலம் அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் நடக்கவேண்டும்.

ஒவ்வொரு இந்தியரும் அமைதியோடு வாழ வேண்டும். வளர்ச்சியடைந்த பாரதம் என்கின்ற நம்முடைய கனவு நிறைவேறவேண்டும். இதற்காக பாரதம் ஆற்றல் வாய்ந்த நாடாக இருக்கவேண்டியது அவசியம். மேலும் தேவை ஏற்படும்போது இந்த சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும். மேலும் கடந்த சில நாட்களில் பாரதம் இதைதான் செய்திருக்கிறது.

நான் மீண்டும் ஒருமுறை பாரதத்தின் ராணுவம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன். பாரத குடிமக்களின் நம்பிக்கைக்கும், ஒற்றுமைக்கும் வணக்கம் செலுத்துகிறேன்.

 

 

நன்றி

பாரத் மாதாகி ஜெய்

பாரத் மாதாகி ஜெய்

பாரத் மாதாகி ஜெய்

***

SM/RB/DL


(Release ID: 2128277) Visitor Counter : 2
Read this release in: English