தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத் தொடர்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுக்கான செயற்கை நுண்ணறிவு தரநிலைகள் குறித்த பயிலரங்கை தேசிய தொடர்பியல் கல்விக் கழகம்(நிதி )அமைப்பு நடத்தியது
Posted On:
05 MAY 2025 6:17PM by PIB Chennai
தொலைத் தொடர்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுக்கான செயற்கை நுண்ணறிவு தரநிலைகள் குறித்த 4 நாள் பயிலரங்கு புதுதில்லியில் உள்ள தேசிய தொடர்பில் கல்விக் கழகத்தில் (நிதி) இன்று தொடங்கியது. இதற்கு சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் பிராந்திய அலுவலகம் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மையம், தேசிய தொடர்பியல் கல்விக் கழகம்(நிதி), மத்திய தொலைத் தகவல் தொடர்புத் துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. பிம்ஸ்டெக் நாடுகளான பங்களாதேஷ், பூடான், நேபாளம், இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் ஆகியவற்றை சேர்ந்த பங்கேற்பாளர்களுடன் சர்வதேச நிபுணர்கள், ஒழுங்குமுறையாளர்கள், தொழில்துறை சங்கங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்தப் பயிலரங்கில் இணைந்துள்ளனர்.
இந்தப் பயிலரங்கின் தொடக்க நிகழ்வில் மத்திய தொலைத் தொடர்புத் துறையின் டிசிசி உறுப்பினர் (நிதி) திரு மனீஷ் சின்ஹா முக்கிய உரையாற்றினார். செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுக்கு சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் கட்டமைப்பில் பொதுக் கருத்து உருவாவது முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார். இத்தகைய கருத்து அனைத்து நாடுகளுக்கும் பயனுடையதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் என்பதில் குறிப்பாக டிஜிட்டல் பாரத் நிதி போன்ற முன்முயற்சிகள் மூலம் இதை செயல்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாடு பற்றியும் அவர் பேசினார்.
பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் திரு இந்திரமணி பாண்டேயின் பதிவு செய்யப்பட்ட செய்தி இந்தப் பயிலரங்கில் ஒலிபரப்பப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தரநிலைகளில் பிராந்திய ஒத்துழைப்பு என்பது விருப்பம் சார்ந்தது அல்ல என்றும், நமது கூட்டான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சேவையாற்றுவதை உறுதி செய்ய மிகவும் முக்கியமானது என்றும் அந்த செய்தியில் அவர் கூறியுள்ளார்.
தேசிய தொடர்பியல் கல்விக் கழகம் – நிதி அமைப்பின் தலைமை இயக்குநர் திருமதி மாதவி தாஸ் தமது வரவேற்புரையில், செயற்கை நுண்ணறிவு என்பது மாற்றத்திற்கான சக்தி என்றாலும் அது வலுவானதாக, உள்ளடக்கிய தர மதிப்பீடுகள் இல்லாமல் சாத்தியமாகாது என்றார். தரப்படுத்துதல் என்பது வெறும் தொழில்நுட்ப நடைமுறை அல்ல என்றும், வேகமாக உருவாகி வரும் டிஜிட்டல் உலகத்தில் அது பாதுகாப்பு, நெறிமுறை, சமத்துவ அணுகல் ஆகியவற்றுக்கான உறுதிப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127110
***
(Release ID: 2127110)
TS/SMB/RR/DL
(Release ID: 2127132)