மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் மீன்பிடித்தல் உள்கட்டமைப்புக்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
11 MAR 2025 4:38PM by PIB Chennai
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியைப் பெருக்கவும், அதன் மூலம் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போரின் வருமானத்தை அதிகரிக்கவும், மத்திய அரசின் மீன்வளத்துறை, தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உள்நாட்டு மீன்வளர்ப்போருக்கு புதிய நன்னீர் மீன் குஞ்சு பொரிப்பகங்கள், மீன் வளர்ப்புக் குளங்கள், இடுபொருட்கள் உள்ளிட்ட குட்டைகள், நன்னீர் உயிரி குட்டைகள், மறுசுழற்சி நீர்வாழ் உயிரின வளர்ப்பு அமைப்புகள் மற்றும் மீன் தீவன அரங்குகளை அமைத்திட நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மிதவைக்கூண்டுகளில் மீன்வளர்ப்பு மற்றும் மாற்று வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒருங்கிணைந்த நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்திற்காக அரசு ரூ.11.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடல்சார் தொழிலைப் பொறுத்து தமிழ்நாட்டின் 07 மாவட்டங்களில் சுமார் 2,000 மீனவ குடும்பங்கள் கடற்பாசி வளர்ப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது குறிப்பாக மீனவ பெண்களுக்கு ஒரு மாற்று வருமான ஆதாரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வாகனங்கள், பனிக்கட்டி பெட்டிகளுடன் கூடிய இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், நவீன மீன் சில்லறை விற்பனை அங்காடிகள், அங்காடிகள் மற்றும் உயிருள்ள மீன் விற்பனை நிலையங்கள் ஆகியவைகளுக்கு உதவி வழங்கப்பட்டு, மீனவர்களின் வருமானத்தை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மீன்வளத் துறைக்கான உட்கட்டமைப்பு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மத்திய அரசின் மீன்வளத்துறை, ரூ.7,522.48 கோடி மொத்த நிதியுடன் 'மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி' என்ற பிரத்யேக நிதியத்தை உருவாக்கியுள்ளது. இதன்படி மீன்வள உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இந்த நிதியத்தின் கீழ் ரூபாய் 1573.73 கோடி மதிப்பீட்டில் 64 திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளன. தமிழக அரசு தெரிவித்த தகவலின்படி, ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.1664.39 கோடி திட்ட மதிப்பீட்டில் 96 திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மீன்வளத்துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குழு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை முழுவதையும் பயனாளியிடமிருந்து எந்தப் பங்களிப்பும் இன்றி, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்கின்றன. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையில் (i) இறப்பு அல்லது நிரந்தர முழு ஊனம் ஏற்பட்டால் ரூ.5,00,000/-ம், (ii) நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டால் ரூ.2,50,000/- மற்றும் (iii) விபத்து ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவு ரூ.25,000/-ஐ உள்ளடக்கியது. கடந்த மூன்று (2021-22 முதல் 2023-24 வரை) மற்றும் நடப்பு நிதியாண்டில் (2024-25) 131.30 லட்சம் மீனவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். ஆண்டொன்றுக்கு சராசரியாக 32.82 லட்சம் மீனவர்கள் பயனடைந்துள்ளனர். இதன் விளைவாக, இதுவரை பெறப்பட்ட 1710 இழப்பீடு கோரிக்கைகளில் இதுவரை 1047 கோரிக்கை மனுக்கள் தீர்வு செய்யப்பட்டு ரூ.52.13 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இன்று (2025 மார்ச் 11 ) மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/IR/RR/KR/DL
(रिलीज़ आईडी: 2110395)
आगंतुक पटल : 113