பிரதமர் அலுவலகம்
சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான இந்தியாவின் முயற்சியில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்: பிரதமர்
சூரத்தில் தொடங்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கம், நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் உத்வேகம் அளிக்கும்: பிரதமர்
ஏழைகளின் கூட்டாளியாக எங்கள் அரசு எப்போதும் அவர்களுடன் துணை நிற்கும்: பிரதமர்
வளர்ந்த பாரதத்தின் பயணத்தில் சத்தான உணவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன: பிரதமர்
Posted On:
07 MAR 2025 8:40PM by PIB Chennai
சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி, சூரத்தின் லிம்பாயத்தில் இன்று தொடங்கி வைத்தார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2.3 லட்சம் பயனாளிகளுக்கு பிரதமர் உதவிகளை வழங்கினார். திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், சூரத் நகரின் தனித்துவமான உணர்வை வலியுறுத்தி, பணி மற்றும் அறப்பணிகளுக்கான அதன் வலுவான அடித்தளத்தை எடுத்துரைத்தார். கூட்டு ஆதரவு மற்றும் அனைவரின் வளர்ச்சியையும் கொண்டாடுவதன் மூலம் வரையறுக்கப்படுவதால், நகரத்தின் சாராம்சம் எவ்வாறு மறக்க முடியாததாகிறது என்பதை அவர் விளக்கினார்.
சூரத், அதன் பரஸ்பர ஆதரவு மற்றும் முன்னேற்ற கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்றது என்று கூறிய திரு மோடி, அங்கு அனைவரின் நலனுக்காக மக்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள் என்றார். இந்த உணர்வு சூரத்தின் ஒவ்வொரு மூலையிலும் காணப்படுகிறது. இந்த உணர்வை மேலும் ஊக்குவித்து, வலுப்படுத்தி, நகரில் உள்ள அனைவரிடமும் ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை வளர்ப்பதை இன்றைய நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். "குஜராத் மற்றும் இந்தியாவின் முன்னணி நகரமான சூரத், இப்போது ஏழைகள் மற்றும் ஒடுக்கட்டப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னிலை வகிக்கிறது. நகரத்தின் உணவு பாதுகாப்பு பிரச்சாரம் நாடு முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கும்" என்று திரு மோடி மேலும் குறிப்பிட்டார். யாரும் விடுபட்டுவிடவில்லை, யாரும் ஏமாற்றப்படவில்லை, பாகுபாடு இல்லை என்பதை இந்தப் பிரச்சாரம் உறுதி செய்கிறது என்று திரு மோடி வலியுறுத்தினார். இது திருப்திப்படுத்துவதைத் தாண்டி அனைவருக்கும் திருப்தி அளிக்கும் உன்னத உணர்வில் கவனம் செலுத்துகிறது. "பயனாளியின் வீட்டு வாசலுக்கே அரசு சென்றடையும்போது, யாரும் ஒதுக்கப்பட மாட்டார்கள். அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன், இந்த அமைப்பை சுரண்ட முயற்சிப்பவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள்" என்று திரு மோடி மேலும் கூறினார்.
உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் அணுகுமுறையின் கீழ், சூரத் நிர்வாகம் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பயனாளிகளை அடையாளம் கண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். அவர்களில் பல்வேறு வயது முதிர்ந்த பெண்கள், ஆண்கள், விதவை பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்த புதிய குடும்ப உறுப்பினர்கள் இப்போது இலவச ரேஷன்கள் மற்றும் சத்தான உணவைப் பெறுவார்கள். இந்த முக்கியமான முன்முயற்சியில் சேர்க்கப்பட்டதற்காக புதிய பயனாளிகள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
உணவைப் பற்றிக் கவலைப்படும் ஏழைகளின் வலியை புரிந்து கொள்வது புத்தகங்களிலிருந்து கற்றுக்கொள்ள கூடிய விஷயம் அல்ல, மாறாக அவர்கள் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்று பிரதமர் வலியுறுத்தினார். "அதனால்தான் கடந்த ஆண்டுகளில், தேவைப்படுபவர்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் இந்த கவலையை நிவர்த்தி செய்வதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. ஏழைகளின் உண்மையான கூட்டாளியாகவும், சேவகனாகவும் அரசு துணை நிற்கிறது" என்று திரு மோடி கூறினார். கோவிட் -19 பெருந்தொற்றின்போது, நாட்டிற்கு மிகவும் ஆதரவு தேவைப்பட்டபோது, ஏழைகளின் சமையலறைகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்காக பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் தனித்துவமான இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படுகிறது. அதிக பயனாளிகள் பயனடைய அனுமதிக்கும் வகையில் வருமான வரம்பை அதிகரிப்பதன் மூலம் குஜராத் அரசு இந்த திட்டத்தை விரிவுபடுத்தியதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஏழைகளின் சமையலறைகளில் அடுப்பு எரிய வேண்டும் என்பதற்காக அரசு ஆண்டுதோறும் ரூ.2.25 லட்சம் கோடியை செலவழித்து வருகிறது.
வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் சத்தான உணவின் முக்கிய பங்கை எடுத்துரைத்த திரு. நரேந்திர மோடி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சினைகளை அகற்ற நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதே அரசின் குறிக்கோள் என்று கூறினார். "பிரதமரின் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், சுமார் 12 கோடி பள்ளி குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. சாக்ஷம் அங்கன்வாடி திட்டம் இளம் குழந்தைகள், தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துகிறது. கூடுதலாக, பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ், கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்தான உணவுக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது" என்று திரு மோடி கூறினார்.
ஊட்டச்சத்து என்பது உணவுக்கு அப்பாற்பட்டது என்றும், தூய்மை என்பது அத்தியாவசியமான அம்சம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். தூய்மையை பராமரிக்க சூரத் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார். “நாட்டின் ஒவ்வொரு நகரமும், கிராமமும் அசுத்தத்தை ஒழிப்பதை நோக்கி செயல்படுவதை உறுதி செய்வதே அரசின் தொடர் முயற்சியாகும். தூய்மை இந்தியா இயக்கம் கிராமப்புறங்களில் நோய்களைக் குறைக்க உதவியுள்ளது என்பதை உலக அமைப்புகள் ஒப்புக் கொண்டுள்ளன" என்று திரு மோடி மேலும் கூறினார். பல்வேறு நோய்களைக் குறைக்கும் முயற்சியில் ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திரு சி.ஆர்.பாட்டீல் தலைமையிலான " இல்லந்தோறும் குடிநீர்" பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
அரசின் இலவச ரேஷன் திட்டத்தின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை திரு. நரேந்திர மோடி பாராட்டினார். இந்தத் திட்டம் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கிடைக்காத ஒரு வாய்ப்பாக, இன்று, தகுதி வாய்ந்த பயனாளிகள் தங்கள் முழு அளவிலான ரேஷன் பொருட்களைப் பெறுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.. 5 கோடிக்கும் அதிகமான போலி ரேஷன் அட்டைதாரர்களை அரசு அகற்றியுள்ளதாகவும், முழு ரேஷன் விநியோக முறையையும் ஆதார் அட்டைகளுடன் இணைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சூரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து பிரதமர் உரையாற்றினார், அவர்களால் முன்பு மற்ற மாநிலங்களில் தங்கள் ரேஷன் அட்டைகளைப் பயன்படுத்த முடியவில்லை. "ஒரு நபரின் ரேஷன் அட்டை எங்கிருந்து வந்தாலும், அவர்கள் நாடு முழுவதும் எந்த நகரத்திலும் பலன்களைப் பெற முடியும் என்பதை உறுதி செய்வதற்காக "ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சூரத்தில் உள்ள பல தொழிலாளர்கள் இப்போது இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இது உண்மையான நோக்கங்களுடன் கொள்கைகள் உருவாக்கப்படும்போது, அவை ஏழைகளுக்கு பயனளிக்கின்றன என்பதை நிரூபிக்கிறது" என்று திரு மோடி மேலும் கூறினார்.
இயக்கம் சார்ந்த அணுகுமுறை மூலம் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க கடந்த பத்தாண்டுகளாக அரசு மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். ஏழைகளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வலை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், அவர்கள் ஒருபோதும் உதவிக்காக யாசகம் கேட்க வேண்டியதில்லை என்பதை உறுதி செய்தார். உறுதியான வீடுகள், கழிப்பறைகள், எரிவாயு இணைப்புகள் மற்றும் குழாய் நீர் இணைப்புகளை வழங்குவது, ஏழைகளிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏழை குடும்பங்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களையும் அரசு அறிமுகப்படுத்தியது, கிட்டத்தட்ட 60 கோடி இந்தியர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்தது. "முன்பு ஏழைக் குடும்பங்களுக்கு எட்டாததாக இருந்த ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு இப்போது ஒரு யதார்த்தமாகிவிட்டது. இன்று, 36 கோடிக்கும் அதிகமான மக்கள் அரசு காப்பீட்டுத் திட்டங்களில் சேர்ந்துள்ளனர். கடினமான காலங்களில் அவர்களுக்கு உதவியாக ஏழை குடும்பங்களுக்கு ரூ .16,000 கோடிக்கு மேல் உரிமைகோரல்கள் செலுத்தப்பட்டுள்ளன" என்று திரு மோடி எடுத்துரைத்தார்.
கடந்த காலங்களில் ஏழைகள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டதையும், வங்கிகள் உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்க மறுத்ததையும் திரு. நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார். முத்ரா திட்டத்தைத் தொடங்கி வைத்து, ஏழைகளுக்கு கடன்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொறுப்பை தாம் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டதை திரு மோடி எடுத்துரைத்தார். "முத்ரா திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில், எந்த உத்தரவாதமும் இல்லாமல் சுமார் 32 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையின் அளவைப் பற்றி எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளாத போதிலும், இந்த முயற்சி லட்சக்கணக்கான மக்களுக்கு உதவியுள்ளது" என்று பிரதமர் கூறினார்.
சாலையோர வியாபாரிகள் மற்றும் முன்பு நிதி உதவி இல்லாத தொழிலாளர்களின் பிரச்சனைகள் பற்றி உரையாற்றிய திரு. நரேந்திர மோடி, இந்த தனிநபர்கள் அடிக்கடி கந்துவட்டிக்காரர்களிடமிருந்து கடன் வாங்க வேண்டியிருந்தது, ஆனால் அவர்கள் வாங்கியதை விட அதிகமாக திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது என்று கூறினார். அரசின் பிரதமரின் ஸ்வநிதி திட்டம் இந்த விற்பனையாளர்கள் வங்கிக் கடன்களை அணுக உதவியுள்ளது. அவர்களுக்காக சிறப்பு கடன் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என இந்த வருட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மேலும் கூறினார். "பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் அறிமுகம், பாரம்பரிய கைவினைஞர்களுக்கு பயிற்சி, நவீன கருவிகள் மற்றும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் நிதி உதவி வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவுகிறது. இந்த முயற்சிகள் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன, கடந்த பத்தாண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர்" என்று திரு மோடி கூறினார்.
நாட்டின் வளர்ச்சியில், குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான நடுத்தரக் குடும்பங்கள் வசிக்கும் சூரத்தில் நடுத்தர வகுப்பினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பிரதமர் பாராட்டின. இந்த ஆண்டு பட்ஜெட்டில் வழங்கப்பட்ட நிவாரணம் உட்பட, நடுத்தர வர்க்கத்தை மேம்படுத்த கடந்த தசாப்தத்தில் அரசு மேற்கொண்ட முயற்சிகளை அவர் கோடிட்டுக் காட்டினார். குறிப்பாக ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு பூஜ்ஜிய வரி விலக்கு வழங்கப்பட்டிருப்பது பலரும் எதிர்பார்க்காத ஒரு நடவடிக்கையாகும். மேலும், ஊழியர்களுக்கு ரூ.12.87 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வரி செலுத்துவோருக்கும் பயனளிக்கும் வகையில் புதிய வரி அடுக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது சூரத், குஜராத் மற்றும் நாடு முழுவதும் உள்ள நடுத்தர வர்க்க குடும்பங்கள் தங்கள் வருவாயில் பெரும்பகுதியை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கும், அதை அவர்கள் தங்கள் தேவைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய முடியும்" என்று பிரதமர் கூறினார்.
சூரத்தை தொழில்முனைவு மையமாக பிரதமர் குறிப்பிட்டார். இங்கு உள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) ]மில்லியன் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. எம்.எஸ்.எம்.இ.களுக்கு கணிசமான ஆதரவை வழங்குவதன் மூலம் உள்ளூர் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். "எஸ்.சி., எஸ்.டி., தலித், பழங்குடியினர் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சூரத் மற்றும் குஜராத்தின் இளைஞர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவர்களுக்கு ஆதரவளிக்க அரசு தயாராக உள்ளது" என்று திரு மோடி கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சியில், குறிப்பாக ஜவுளி, ரசாயனம் மற்றும் பொறியியல் துறைகளில் சூரத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை திரு மோடி பாராட்டினார். நகரத்தில் இந்த தொழில்களை விரிவுபடுத்துவதற்கான அரசின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். "சூரத் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம், பிரத்யேக மேற்கு சரக்கு வழித்தடம், தில்லி-மும்பை விரைவுச்சாலை மற்றும் வரவிருக்கும் புல்லட் ரயில், சூரத் மெட்ரோ திட்டம் ஆகியவை நகரத்தின் இணைப்பை மேலும் மேம்படுத்தும், இது நாட்டின் நன்கு இணைக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகும். இந்த முன்முயற்சிகள் சூரத் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குகின்றன" என்று திரு மோடி வலியுறுத்தினார்.
ஊக்கமளிக்கும் கதைகளை நமோ செயலியில் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நாடு முழுவதும் உள்ள பெண்களை திரு. நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய இந்த உத்வேகம் அளிக்கும் பெண்களில் சிலரிடம் தனது சமூக ஊடக கணக்குகளை ஒப்படைப்பதாக பிரதமர் அறிவித்தார். பல்வேறு துறைகளில், குறிப்பாக குஜராத்தில் பெண்களின் பங்களிப்பை எடுத்துரைத்த அவர், அவர்களின் சாதனைகளைக் கொண்டாட இந்த நாள் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டார். பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நவ்சாரியில் ஒரு பெரிய நிகழ்வில் கலந்து கொள்வதாகவும் அவர் கூறினார். சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் கலந்து கொண்டதைப் பாராட்டிய பிரதமர், தற்போது நடைபெற்று வரும் நிகழ்ச்சியால் அவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார்.
சூரத்தை ஒரு சிறிய இந்தியாவாகவும், உலக அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க நகரமாகவும் தொடர்ந்து மேம்படுத்தும் தனது உறுதிப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்தினார். "சூரத்தில் உள்ளவர்களைப் போன்ற துடிப்பான மக்களுக்கு, எல்லாம் தனித்துவமாக இருக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் முன்முயற்சிகளின் பயனாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று முன்னேற வாழ்த்துகிறேன்" என்று கூறி திரு மோடி தனது உரையை நிறைவு செய்தார்.
பின்னணி
சூரத் லிம்பாயத்தில் சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தை தொடங்கி வைத்த பிரதமர், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2.3 லட்சம் பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார்.
அரசால் மேற்கொள்ளப்படும் பணிகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் முக்கியமானதாக இருந்து வருகிறது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, அவர்களின் முழுமையான வளர்ச்சியை நோக்கி நடவடிக்கை எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
***
RB/DL
(Release ID: 2109291)
Visitor Counter : 29
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam