சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி:- வனங்களைப் பாதுகாத்தல்
Posted On:
19 DEC 2024 5:50PM by PIB Chennai
நாட்டின் வனம் மற்றும் வனவிலங்கு வளங்களைப் பாதுகாப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் இந்திய வனச் சட்டம் 1927, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 போன்றவையும் மாநில வனச் சட்டங்களும் உள்ளன. இந்த சட்டங்கள் / விதிகளின் கீழ் வனங்கள், வன உயிரின வளங்களைப் பாதுகாக்க மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கின்றன.
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம், வனத்தீ குறித்த தேசிய செயல் திட்டம் 2018-ஐ உருவாக்கியுள்ளது. இத்திட்டம், காட்டுத்தீயை தடுப்பதற்கான விரிவான நடவடிக்கைகளை எடுத்துரைக்கிறது.
மனித-விலங்கு மோதல்களால் எழும் சூழ்நிலைகளை சிறப்பாக நிர்வகிக்க அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இதுபோன்ற மோதல்களைத் தடுக்கவும், நிர்வகிக்கவும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பின்பற்றக்கூடிய பல்வேறு நடவடிக்கைகளை இந்த ஆலோசனைகள் பரிந்துரைக்கின்றன.
காட்டுத் தீ தடுப்பு, பசுமை இந்தியா இயக்கம், நகர் வனத் திட்டம், வன உயிரின வாழ்விட மேம்பாடு (DWH), யானைகள் திட்டம் ,புலிகள் திட்டம் போன்ற மத்திய அரசு நிதியுதவி திட்டங்களின் மூலம் வனங்கள், வனவிலங்குகளின் பாதுகாப்பில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் ஆதரவு அளிக்கிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2086197)
Visitor Counter : 58