உள்துறை அமைச்சகம்
குற்றச் செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
प्रविष्टि तिथि:
17 DEC 2024 2:52PM by PIB Chennai
இந்திய நீதிச்சட்டம் 2023 ல் (பாரதீய நியாய சன்ஹிதா)முதல் முறையாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளும் விதிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு அவை ஒரே அத்தியாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்க வகைசெய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தால் குற்றவாளிக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படும். திருமணம், வேலைவாய்ப்பு, பதவி உயர்வு அல்லது அடையாளத்தை மறைத்து பொய்யான வாக்குறுதியின் பேரில் உடலுறவு கொள்வது போன்ற புதிய குற்றங்களும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆட்கடத்தல் குற்றங்களைத் தடுப்பதிலும், எதிர்கொள்வதிலும் அரசு உறுதி பூண்டுள்ளது. இந்திய நீதிச் சட்டம், 2023 ன் பிரிவு 143 ஆட்கடத்தல் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்க விதிகளை கொண்டுள்ளது. ஒரு குழந்தையை கடத்தும் குற்றமாக இருந்தால், அதற்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆனால், இது ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் வரை நீட்டிக்கப்படலாம்.
கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான வயது வேறுபாடு அகற்றப்பட்டுள்ளது. முன்னதாக 16 வயது மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தால் வெவ்வேறு தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டன. தற்போது இந்த விதி மாற்றியமைக்கப்பட்டு, பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
பெண்கள் குடும்பத்தின் வயது வந்த உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட நபரின் சார்பாக அழைப்பாணைகளைப் பெறலாம். 'சில வயது வந்த ஆண் உறுப்பினர்' என்பதற்கான முந்தைய குறிப்பு 'சில வயது வந்த உறுப்பினர்' என்று மாற்றப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவருக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதற்கும், பாலியல் பலாத்காரக் குற்றம் தொடர்பான விசாரணையில் வெளிப்படைத்தன்மையை அமல்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் காவல்துறையினரால் ஆடியோ வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்.
பெண்களுக்கு எதிரான சில குற்றங்களுக்கு, பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம், இயன்றவரை, ஒரு பெண் குற்றவியல் நடுவராலும், அவர் இல்லாத பட்சத்தில் ஒரு பெண் முன்னிலையில் ஒரு ஆண் குற்றவியல் நடுவராலும் பதிவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க முடியும்.
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ அறிக்கையை 7 நாட்களுக்குள் விசாரணை அதிகாரிக்கு அனுப்ப மருத்துவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
பதினைந்து வயதிற்குட்பட்ட அல்லது 60 வயதுக்கு மேற்பட்ட (65 ஆண்டுகளுக்கு முன்பு) எந்த ஆண் நபரும் அல்லது ஒரு பெண் அல்லது மனதால் பாதிக்கப்பட்ட அல்லது மாற்றுத்திறனாளி அல்லது கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் இடத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. அத்தகைய நபர் காவல் நிலையத்திற்கு வர விரும்பும் சந்தர்ப்பங்களில், அவர்கள் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படலாம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சை அளிக்க புதிய சட்டங்கள் வகை செய்கின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.
*****
TS/IR/KV/KR/DL
(रिलीज़ आईडी: 2085332)
आगंतुक पटल : 200