சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
15 ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவில் நடைபெற்ற உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு
Posted On:
06 DEC 2024 6:51PM by PIB Chennai
உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் கடந்த 4-ம் தேதி தொடங்கி 6-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. உலகளாவிய கப்பல் போக்குவரத்து – நிலைத்தன்மைக்கான ஒரு போராட்டம் அல்லது நம்பிக்கையின் ஒளி என்ற சிந்தனையை தூண்டும் கருப்பொருளை மையமாக கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது.

உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு என்பது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க், நார்வே, ஸ்பெயின், போர்ச்சுக்கல், இந்தியா, சிங்கப்பூர், சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் கூட்டு தொகுப்பாகும். இது கடல்சார் பொறியியல், கடல்சார் கட்டமைப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. கடல்சார் பொறியியல் நிறுவனத்தின் சென்னை கிளை இந்த மாநாட்டை நடத்தியது. இந்த மாநாடு 2009-ம் ஆண்டு இந்தியாவில் கடைசியாக மும்பையில் நடைபெற்றது. அதன் பின்னர் 2012-ம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ் பர்க், 2015-ம் ஆண்டு ஹூஸ்டன், 2018-ம் ஆண்டில் ஷாங்காய், 2022-ம் ஆண்டு கோபன் ஹெகன் ஆகிய இடங்களில் இதற்கு முன்பு நடைபெற்றது.

மாநாட்டின் முழு அமர்வு கடந்த 4-ம் தேதி மாலையில் நடைபெற்றது. மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறை கூடுதல் செயலரும், தலைமை இயக்குநருமான திரு ஷியாம் ஜெகந்நாதன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து அறிக்கைகளையும் கொண்ட மாநாட்டு சிறப்பு மலரை அவர் வெளியிட்டார். கப்பல் போக்குவரத்துத் துறையின் பதிவாளரும், செயல் தலைவருமான திரு அருண் ஷர்மாவும் இதில் கலந்து கொண்டார். கடல்சார் பொறியாளர்கள், நிறுவனத்தின் தலைவர் திரு ராஜீவ் நய்யார் அமர்வுக்கு தலைமை வகித்தார்.
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இது குறித்து விரிவான விவாதங்களை நடத்தினார்கள். உலக கப்பல் போக்குவரத்தின் எதிர்காலம், செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, டிஜிட்டல் மாற்றம், பிளாக்செயின் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், ஆறுகள், துறைமுகங்கள், ரயில்வேக்களை இணைத்தல், நீடித்த வளர்ச்சி உள்ளிட்ட 16 கருப்பொருட்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் மாலினி சங்கர், கேப்டன் ராகுல் சௌத்ரி, அனில் தேவ்லி, கேப்டன் சுரேஷ் அமிரப்பு மற்றும் பிரபல தொழில் துறை ஆளுமைகள் இதில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

6-ந் தேதி நடைபெற்ற நிறைவு அமர்வில் கடல் உற்பத்தித் துறையின் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் ஜி.சீனிவாசன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி திரு அமிதாப் குமார், தொழில் துறை சந்தித்து வரும் சவால்கள், உலகம் அடைந்துள்ள பயன்கள் ஆகியவை குறித்து உரையாற்றினார்.
மாநாட்டின் பாரம்பரிய விளக்கை, மாநாட்டின் தலைவரான சி.வி.சுப்பராவ், அடுத்த மாநாட்டின் தலைவரும், போர்ச்சுகீசிய பொறியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் டினா பாஸ் டிமாசிடம் முறைப்படி ஒப்படைத்தார். இந்த நிகழ்வுடன் மாநாடு நிறைவடைந்தது. 2027-ம் ஆண்டு அடுத்த மாநாடு போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் நடைபெறும்.

***
(Release ID: 2081634)