கலாசாரத்துறை அமைச்சகம்

உலகப் பாரம்பரிய குழுவின் 46-வது அமர்வை 2024, ஜூலை 21 அன்று பிரதமர் தொடங்கிவைப்பார்

Posted On: 19 JUL 2024 7:04PM by PIB Chennai

உலகப் பாரம்பரிய குழுவின் 46-வது அமர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2024, ஜூலை 21 அன்று தொடங்கிவைப்பார்.

புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இதனைத் தெரிவித்தார்.  முதன்முறையாக இந்தியா நடத்துகின்ற  இந்தக்கூட்டம் ஜூலை 21 முதல்  31 வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார். தொடக்க விழாவில், யுனெஸ்கோ அமைப்பின் தலைமை இயக்குநர்  திருமதி ஆட்ரே அசுலே, யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய செயலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், தூதர்கள், பல்வேறு நாடுகளின் நிபுணர்கள் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

46-வது உலகப் பாரம்பரிய குழுவின் கூட்டம் இந்தியாவின் பன்முக, தனித்துவ கலாச்சாரத்தையும், இயற்கையான பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் என்றும், இதன் மூலம் இந்தியாவின் கலாச்சாரப் பெருமை புதிய உச்சத்திற்கு செல்லும் என்றும் அமைச்சர் திரு ஷெகாவத் கூறினார்.

இந்தக் கூட்டத்திற்கான இலச்சினையை வெளியிட்ட அமைச்சர், உலகப் பாரம்பரிய இடமான ஹம்பியும், கல்ரதமும் இந்தியாவின் கட்டிடக்கலை பெருமையையும், சிற்ப திறனையும் எடுத்துக்காட்டுவதாக  இருக்கும் என்று கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் உலக பாரம்பரிய குழுவின் தலைவரும், யுனெஸ்கோ அமைப்புக்கான இந்திய நிரந்தர தூதரும், பிரதிநிதியுமான திரு விஷால் வி சர்மா, இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநர்  திரு யதுவீர்  சிங் ராவத் ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034457

*** 

SMB/RS/DL



(Release ID: 2034494) Visitor Counter : 35


Read this release in: Urdu , English , Hindi