தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
பாதுகாப்புத் துறையின் தகவல், தொடர்புத் தொழில்நுட்ப மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது
Posted On:
22 MAY 2024 7:25PM by PIB Chennai
"இந்திய தொலைத் தொடர்புத் துறை சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. தொலைத்தொடர்பு சாதனங்களை வடிவமைத்து, தயாரித்து, ஏற்றுமதி செய்யும் பல இந்திய நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு உபகரணங்கள் இப்போது சுமார் 70 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.”
புதுதில்லியில் இன்று நடைபெற்ற பாதுகாப்புத் துறையின் தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்ப மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய தொலைத் தொடர்புத் துறையின் டிஜிட்டல் தொடர்பு ஆணையத்தின் உறுப்பினர் (தொழில்நுட்பம்) திருமதி மது அரோரா இதனைத் தெரிவித்தார். மொத்தம் 21 நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையின் தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்ப மாநாட்டில் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தின.
தொலைத்தொடர்புத் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தியாவின் ஏற்றுமதி 35% அதிகரித்துள்ளது என்றும், உலகின் சிறந்த உற்பத்தியாளர்களுடன் தரத்தில் சமமான அளவில் இந்தியா போட்டியிடுகிறது என்றும் திருமதி மது அரோரா கூறினார். உள்நாட்டில், இந்தியா சுமார் 4,42,000 5-ஜி அடிப்படை நிலையங்களை நிறுவியுள்ளது இந்தியாவில் 5-ஜி வெளியீட்டில் பயன்படுத்தப்படும் சுமார் 80% உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்கு) திரு ஜெய்தீப் மஜும்தார், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் திரு என்.ஜி.சுப்பிரமணியம், தலைமை இயக்குநர் திரு அருண் குப்தா உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் உரையாற்றினர்.
12 க்கும் மேற்பட்ட சுதந்திர காமன் வெல்த் அரசுகள் மற்றும் ஆசியான் நாடுகளின் தூதர்கள், பாதுகாப்பு இணைப்பாளர்கள், வர்த்தகப் பிரிவுகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021355
----
SMB/KPG/DL
(Release ID: 2021369)