பாதுகாப்பு அமைச்சகம்
"தொழில்நுட்ப ஈடுபாட்டின் ஆண்டு, ராணுவ வீரர்களுக்கு அதிகாரமளித்தல்" என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை இந்திய ராணுவம் நடத்தியது
Posted On:
24 APR 2024 4:49PM by PIB Chennai
"தொழில்நுட்ப ஈடுபாட்டின் ஆண்டு– ராணுவ வீரர்களுக்கு அதிகாரமளித்தல்" என்ற தலைப்பில் இந்திய ராணுவம் சார்பில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று நடைபெற்றது. மானெக்ஷா மையத்தில் இந்திய ராணுவம் சார்பில் நிலப்பகுதி போர் ஆய்வு மையம் இந்த நிகழ்ச்சிகளை நடத்தியது.
இந்த கருத்தரங்கு, தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களை ஒன்றிணைத்து ராணுவக் களத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட வன்பொருள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது குறித்து விவாதித்தது. ராணுவத்தில் தொழில்நுட்ப ஈடுபாட்டுக்கான தற்போதைய முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கு கல்வி மற்றும் பாதுகாப்புத் தொழில்துறைக்கான கூட்டு முயற்சியை வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டிருந்தது.
ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேயின் தொடக்க உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நித்தி ஆயோகின் அடல் புதுமை இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் சிந்தன் வைஷ்ணவ் சிறப்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்புத் துறை முன்னேற்றம் மற்றும் திறன்களை நிரூபிக்கும் கண்காட்சி நடைபெற்றது.
உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் முக்கியமான தொழில்நுட்பங்களில் தன்னிறைவை அடைவதோடு, போர்க் களங்கள் மற்றும் அமைப்புகளில் தற்சார்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை ராணுவத் தளபதி அடிக்கோடிட்டுக் காட்டினார்.
நவீனமான, சுறுசுறுப்பான தகவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத் தயார்நிலைப் படையாக மாறுவதற்கான தனது முயற்சியைத் தொடர இந்திய ராணுவத்தின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். தொழில் பங்குதாரர்கள், புதிய தொழில்முனைவோர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களது முயற்சிகளை ஒருங்கிணைத்து, துடிப்பான தேசிய பாதுகாப்பு சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த கருத்தரங்கு மூன்று அமர்வுகளாக நடத்தப்பட்டது, முதல் அமர்வு "சமகால தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை திறன்கள்" மீது கவனம் செலுத்தியது. இந்த அமர்வை திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் வினீத் கௌர் நெறிப்படுத்தி நடத்தினார்
இரண்டாவது அமர்வை லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரதா சாஹா (ஓய்வு) நெறிப்படுத்தி நடத்தினார். "வீரர்களை மேம்படுத்துதல்: நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தாக்கத்தை பெருக்குதல்" என்பதில் இந்த அமர்வு கவனம் செலுத்தியது.
"தொழில்நுட்ப செயல்திறனை அதிகரித்தல் மற்றும் வீரர்கள் தயார்நிலை" குறித்த இறுதி அமர்வை லெப்டினன்ட் ஜெனரல் பி.ஆர்.சங்கர் (ஓய்வு) நெறிப்படுத்தினார்.
ராணுவத் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தருண் குமார் ஐச்சின் நிறைவுரையுடன் கருத்தரங்கு நிறைவடைந்தது.
***
AD/SMB/RS/RR/DL
(Release ID: 2018772)