கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், பீகாரில் கலுகாட் ஐ.டபிள்யூ.டி முனையம்,14 சமுதாய படகுத்துறைகளை நாளை திறந்து வைக்கிறார்

Posted On: 14 FEB 2024 3:17PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், பீகார் மாநிலம் சரனில் உள்ள கலுகாட் .டபிள்யூ.டி முனையம் (உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முனையம்) மற்றும் 14 சமுதாய படகுத்துறைகளை நாளை (2024 பிப்ரவரி 15) திறந்து வைக்கிறார். பீகாரின் பெட்டியாவில் கந்தக் ஆற்றின் கரையில் இரண்டு சமுதாய படகுத்துறைகளுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளார். ஜார்க்கண்டில் இரண்டு படகுத் துறைகளையும் அவர் திறந்து வைக்கிறார். இந்தத் திட்டங்கள் உள்நாட்டு நீர்வழிப் பாதை இணைப்புகளை மேம்படுத்தி வர்த்தகத்தை எளிதாக்கும்.

பீகாரின் சரண் மாவட்டத்தில் கங்கை நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள கலுகாட், அந்தப்பகுதியின் போக்குவரத்து கட்டமைப்பில் ஒரு முக்கிய மையமாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலை -19 க்கு நேரடி அணுகலுடன், இந்த முனையம் சரக்கு போக்குவரத்துக்கு ஒரு முக்கியமான இணைப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக ரக்சால் மற்றும் வடக்கு பீகாரின் உள்பகுதி வழியாக நேபாளத்திற்கு செல்லும் சரக்குகளுக்கு இது ஒரு முக்கியமான இணைப்பாக உள்ளது. ரூ. 82.48 கோடி செலவில் கட்டப்பட்ட அதன் புதிய உள்கட்டமைப்பு அதிக செயல்பாட்டு செயல்திறனை உறுதி செய்யும். ஹால்டியா / கொல்கத்தா துறைமுகங்களுடன் தடையற்ற இணைப்பை ஏற்படுத்தி, பிராந்திய வர்த்தகத்தை கலுகாட் மேலும் மேம்படுத்தும்.

கந்தக் ஆற்றின் கரையில் மங்கல்பூர் மற்றும் பெட்டியா ஆகிய இடங்களில் மிதக்கும் பாண்டூன் ஜெட்டிகள்,(படகுத்துறை) ரூ.3.33 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இவை நேபாளத்தையும் இந்தியாவையும் தேசிய நீர்வழிப்பாதை-37 வழியாக இணைக்கும். இந்தப் படகுத்துறைகள் பல்வேறு பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு சந்தை அணுகலை மேம்படுத்தும். கூடுதலாக, பீகாரில் தேசிய நீர்வழித்தடம் 1-ல் ரூ. 17.50 கோடி செலவில் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய படகுத்துறைகள், உள்ளூர் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு நேரடி சந்தை அணுகலை வலுப்படுத்தும்.

***

(Release ID: 2005861)

ANU/PKV/PLM/RS/KRS

 



(Release ID: 2005949) Visitor Counter : 81


Read this release in: English , Urdu , Hindi