சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 08 JAN 2024 8:46PM by PIB Chennai

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரை, அண்ணாநகர் மற்றும் நொளம்பூரில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் இன்று (08.01.2024) கலந்து கொண்டு அவர் பேசினார்.

மோடியின் உத்தரவாத வாகனம் மக்களின் எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி அரசுத் திட்டப் பலன்களை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தப் பயணம் மக்கள் பங்கேற்புடன் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக அவர்  கூறினார். 50 நாட்களில் 10 கோடிப்  பேரை சென்றடைந்துள்ளது  என்று கூறிய அவர், அரசு திட்டங்கள் குறித்து மக்களிடையே இந்தப் பயணம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.  திட்டங்களின் பயன்கள் தகுதியான நபர்களின் வீடுகளுக்கே சென்றடைவதாக அவர் தெரிவித்தார். இந்தப் பயணம்  புதிய இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவை நோக்கியது என்று அவர் தெரிவித்தார்.

    

பிரதமர் திரு நரேந்திர மோடியின் செயல்பாடுகள் 140 கோடி மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும்  81 கோடி பேர் பயனடைவதாகவும், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் பத்து கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஏழைகள் நல உணவுத் திட்டத்தில் 3.5 கோடி பேர் பயனடைவதாகவும், இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தில் இதுவரை 40 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    

தேசத்தின் வளர்ச்சிக்கு, தமிழ்நாட்டின் வளர்ச்சி முக்கியமானது என,  கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பிரதமர் பேசியதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  நல்லாட்சிக்கான செங்கோல் அமிர்த காலத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகிய 4 தரப்பினரின் முன்னேற்றத்தில் அரசு அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் மகளிர் சக்தியை கண்டு தாம் வியப்படைவதாக அவர் குறிப்பிட்டார்.  மாநிலத்தில் மகளிர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதாக அவர் தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு  வங்கிக் கடன்கள் சாதாரண மக்களுக்கு எளிதில் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். தற்போது, அந்த நிலை மாறியுள்ளதாகவும், சாதாரண மக்கள் எளிதில் கடன் பெற முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.  அவர்கள் உரிய முறையில் கடன்களை திருப்பிச் செலுத்துவதால் லாபத்தில் இயங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி திகழ்கிறது என்று அவர் கூறினார்.

    

பிரதமர் திரு நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் நலனில் அதிக அக்கறைக் கொண்டுள்ளதாகக் கூறிய  திரு பியூஷ் கோயல், மாநில மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் போது முத்ரா வங்கிக் கடன் திட்டம், பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பயன்களை பயனாளிகளுக்கு குறிப்பாக பெண் பயனாளிகளுக்கு அதிக அளவில் அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை, வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இன்றைய நிகழ்ச்சிகளுக்கிடையே சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்ற திரு பியூஷ் கோயல், அங்கு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விஜயகாந்தின் மனைவி திருமதி பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

                                     *** 

ANU/SM/PLM/KPG/KRS

 



(Release ID: 1994350) Visitor Counter : 72


Read this release in: English