சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் 'சமாஜிக் அதிகாரித ஷிவிர்' எனப்படும் சமூக வலுவூட்டல் முகாமை குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்

Posted On: 25 NOV 2023 6:07PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார், குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத்நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சமாஜிக் அதிகாரித ஷிவிர் எனப்படும் சமூக வலுவூட்டல் முகாமை இன்று (25-11-2023) தொடங்கி வைத்தார்.

இதன் கீழ் ஹிம்மத்நகரில் உதவி உபகரணங்கள் விநியோக முகாம் நடைபெற்றது.  இதேபோல் நாடு முழுவதும் 9 மாநிலங்களை உள்ளடக்கிய மற்ற 19 இடங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. இவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை, இந்திய செயற்கை கால்கள் உற்பத்திக் கழகமும் இணைந்து இந்த விநியோக முகாம்களை ஏற்பாடு செய்தன.

குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேசிய மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார். மாற்றுத் திறனாளிகளுக்கான உயர்தர உதவி சாதனங்களைத் தயாரிப்பதற்காக தமது அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் (அவுரங்காபாத்) ஏற்பாடு செய்யப்பட்ட முகாமில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பிரதிமா பௌமிக் கலந்து கொண்டார். அசாமின் நாகோன், பீகாரின் சிவான், ஜெஹானாபாத், நாளந்தா, பாகல்பூர், குஜராத்தின் வல்சாத், சதாரா, சாங்லி, யவத்மால், மகாராஷ்டிராவில் ஜல்னா, தமிழ்நாட்டின் கடலூர், கேரளாவின் மலப்புரம், உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர், மேற்கு வங்கத்தின் மால்டா உள்ளிட்ட இடங்களிலும் இன்று இந்த முகாம்கள் நடைபெற்றன.

மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள், கையால் இயக்கப்படும் மூன்று சக்கரவண்டிகள், சக்கர நாற்காலிகள், நடைபயிற்சி குச்சிகள், பிரெய்லி கருவிகள், ரோலேட்டர்கள், பி.டி.இ காது கேட்கும் கருவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால்கள் மற்றும் காலிப்பர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் இந்த முகாம்களில் வழங்கப்பட்டன.

மாற்றுத் திறனாளிகளுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கி, அவர்கள் ஆக்கப்பூர்வமான, பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ வகை செய்வதே இந்த முகாம்களின் நோக்கமாகும். இந்த உதவி சாதனங்கள் பயனாளிகளை தன்னிறைவு அடையச் செய்வதுடன், சமூக நீரோட்டத்தில் அவர்களை ஒருங்கிணைக்கும்.

*****

ANU/PKV/PLM/DL



(Release ID: 1979790) Visitor Counter : 65


Read this release in: English , Urdu , Hindi , Gujarati