குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஜம்மு-காஷ்மீரைத் தவிர அனைத்து மாநிலங்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்டது - டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்

370-வது பிரிவை உருவாக்க மறுத்துவிட்டார்: குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

Posted On: 31 OCT 2023 4:30PM by PIB Chennai

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று அவருக்குக் குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் மரியாதை செலுத்தினார். இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்புகளைப் பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், அனைத்து மாநிலங்களையும் வெற்றிகரமாக ஒருங்கிணைத்தது அவரது பெரிய சாதனை என்றார். ஜம்மு-காஷ்மீரைத் தவிர அனைத்து மாநிலங்களின் ஒருங்கிணைப்புப் பணி சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

 

இந்தியப் பொது நிர்வாக நிறுவனத்தின் (ஐ.ஐ.பி.ஏ) அறுபத்தொன்பதாவது ஆண்டுக் கூட்டத்தில் இன்று (31-10-2023) உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக சிறப்புடன் செயல்படுவதாகப் பாராட்டு  தெரிவித்தார்.

 

அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு குறித்துப் பேசிய அவர், இது ரத்து செய்யப்பட்டதால்  இப்போது அனைத்தும் சரியாக நடைபெறுகின்றன என்று குறிப்பிட்டார். அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 370-வது பிரிவை உருவாக்க மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், அது நமது அரசியலமைப்பில் இருந்து இப்போது நீக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

 

நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை  உரையாடல், விவாதம், கலந்துரையாடல் ஆகியவற்றுக்கு ஒரு புனிதமான சபை அது என்று கூறினார். அவைக்குள் குழப்பம் மற்றும் இடையூறு விளைவிப்பவர்கள் குறித்து இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். பொதுமக்களின் அறியாமையை மூலதனமாக்குவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் இது மிகவும் அச்சுறுத்தலானது என்றும் கூறினார். இந்த ஆபத்தான போக்கை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

 

நமது உள்நாட்டு மூலப்பொருட்களின் மதிப்புக் கூட்டலில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குடியரசு துணைத்தலைவர், இது பொருளாதாரத்தைப் பெரிய அளவில் மாற்றி அமைக்கும் என்றார். 2047-ம் ஆண்டுக்குள் உலகளாவிய தலைமைத்துவ நாடாக இந்தியாவின் நிலையைப் மாற்றுவதற்கான திறவுகோலாக இந்த அணுகுமுறை அமையும் என்று அவர் கூறினார்.

.

இந்த நிகழ்ச்சியன் போது, தேச ஒற்றுமை தின உறுதிமொழி, குடியரசு துணைத் தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங், இந்தியப் பொது நிர்வாக நிறுவனத்தின் தலைமை இயக்குநர் திரு சுரேந்திரநாத் திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

===========

Release ID: 1973378

 

SMB/PLM/KPG



(Release ID: 1973465) Visitor Counter : 82


Read this release in: English , Urdu , Hindi