விவசாயத்துறை அமைச்சகம்

பிரதமர் கிசான் திட்டத்திற்கு செயற்கை நுண்ணறிவு ஆதரவுடன் கூடிய உரையாடல் அமைப்பை மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் திரு கைலாஷ் சௌத்ரி இன்று தொடங்கி வைத்தார்

Posted On: 21 SEP 2023 6:07PM by PIB Chennai

பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டமான கிசான் சம்மான் நிதி (பி.எம்-கிசான்) திட்டத்திற்கான செயற்கை நுண்ணறிவு உரையாடல் உதவி அமைப்பை  மத்திய வேளாண் அமைச்சகம் இன்று புதுதில்லியில் அறிமுகப்படுத்தியது.

செயற்கை நுண்ணறிவு உரையாடல் (ஏஐ சாட்பாட்)  அறிமுகம்,  பிஎம்-கிசான் திட்டத்தின் செயல்திறனை அதிகரிக்கும்.

இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட்-டைத்  தொடங்கி வைத்து பேசிய மத்திய வேளாண் துறை இணையமைச்சர் திரு கைலாஷ் சௌத்ரி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப விவசாயிகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாகத்தை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். திட்டம் தொடர்பான  தகவல்களை அணுகுவதற்கும் குறைகளைத் தீர்ப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் உதவும் என்று அவர் கூறினார்.   வானிலை தகவல்கள், மண் தன்மைகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் போன்ற பிறவற்றையும் இதனுடன் இணைத்து இந்த சேவையை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இது மத்திய மற்றும் மாநில அரசுகளில் உள்ள வேளாண் அதிகாரிகளின் சுமைகளைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.

வேளாண் மற்றும் குடும்ப நலத் துறையின் செயலாளர் திரு மனோஜ் அஹுஜா பேசுகையில், வரும் மாதங்களில் அமைச்சகத்தின் பிற முக்கிய திட்டங்களுக்கும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். 

தற்போது, இந்த சாட்பாட் சேவை ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிடைக்கிறது. விரைவில் பெங்காலி, ஒடியா, தெலுங்கு, தமிழ், மராத்தி ஆகிய மொழிகளிலும் இந்த சேவை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

***

AD/ANU/PLM/RS/KRS



(Release ID: 1959486) Visitor Counter : 178


Read this release in: English , Urdu , Hindi