மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ. 127 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தேசிய கடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல் முருகன் அடிக்கல் நாட்டினர்

Posted On: 02 SEP 2023 6:50PM by PIB Chennai

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில், 127 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தேசிய கடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டினர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில், மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த மீனவர்கள் & மகளிர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, தாங்கள் உற்பத்தி செய்யும் கடற்பாசியை பாதுகாப்பாக வைக்கத் தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், முத்ரா வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் அதிகளவில் பயன்பெற்ற மாநிலங்களில் தமிழகம் 2-ஆவது இடத்தில் உள்ளது. நம் மகளிர்கள் எவரையும் சாராமல் இருக்க ஏதுவாக மகளிர் பெயரில் குடியிருப்புக் கட்டி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடற்பாசிப் பூங்கா இங்கு அமைக்கப்படுவது மீனவ சகோதரிகளுக்கு மிகப்பெரிய வரம். இந்த கடற்பாசி உணவு, ஊட்டச்சத்து பொருட்கள், மருந்து தயாரிப்பு, விவசாயம் போன்ற பல்வேறு பயன்பாட்டுக்கு உதவுகிறது. எனவே கடற்பாசி உற்பத்தியில் முதல் நாடாக நம் இந்தியா வளர வேண்டும். அதற்காக மீனவர்கள் மற்றும் மகளிர்கள் அதிகளவில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா, நாட்டிலேயே முதல் முறையாக கடற்பாசிப் பூங்கா தமிழகத்தின் ராமநாதபுரத்தில் அமையவுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அதற்கு காரணமாக உள்ள மண்ணின் மைந்தர் மத்திய இணையமைச்சர் முருகனுக்கு வாழ்த்துகள். எங்கள் குஜராத் பகுதியில் கடற்பாசியை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். ஆனால் நமது பிரதமர் மோடி, பல்வேறு பயன்பாட்டுக்கு தமிழகத்தில் கடற்பாசியைப் பயன்படுத்துவதை அறிந்து இங்கு இதற்கான பல்வகைப் பயன்பாட்டு தேசிய கடற்பாசிப் பூங்கா அமைக்க முடிவு செய்தார். 127 கோடி மதிப்பில் கட்டப்படவுடுள்ள இந்தப் பூங்காவால் தமிழகத்தின் ராமேஸ்வரம் உள்ளிட்ட 6 கடலோர மாவட்ட மீனவ சமுதாயத்தினர் பெரிதும் பயனடைவர். இதன் கட்டுமானப் பணிகள் முடிய 2 ஆண்டுகள் ஆகும் என அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் கட்டுமானப்பணியை முடிக்க நான் கேட்டுக் கொண்டுள்ளேன். ராமநாதபுரத்தில் மட்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகளுடன் இணைந்து செயல்பட்டு 300-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு 4 கோடி மதிப்பில் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டார்.

பின்னர் மீனவர்களுக்கு கடன் அட்டைகளை அமைச்சர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். விஷ்ணு சந்திரன், மத்திய மீன்வளத் துறை இணைச் செயலாளர் நீத்து பிரசாத், தமிழ்நாடு மாநில மீன்வளத்துறை ஆணையர் டாக்டர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 



(Release ID: 1954414) Visitor Counter : 129


Read this release in: English , Urdu , Hindi