வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
"பிரிவினையின் கொடூர நினைவு தினம்- நமது தேசத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான நாள்: பிரதமர்"
Posted On:
14 AUG 2023 3:34PM by PIB Chennai
நாடு முழுவதும் இன்று, பிரிவினை கொடூர நினைவு தினமாக அனுசரிக்கப்படும் நிலையில், நாட்டின் பிரிவினையின் போது உயிரிழந்தவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்களின் போராட்டங்களை நினைவு கூர்ந்தார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“பிரிவினை கொடூர நினைவு நாள், நாட்டின் பிரிவினையில் உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவுகூருவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும், அதே நேரத்தில், இந்த நாள் இடம்பெயர்வின் சுமைகளை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் துன்பங்களையும் போராட்டத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. அத்தகைய மக்கள் அனைவருக்கும் எனது மரியாதை’’ என்று அவர் கூறியுள்ளார்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி, இன்று கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்த பிரிவினை கொடூர நினைவு தினத்தில், பிரிவினையின் சோகத்தை எதிர்கொண்ட 75 பெரிய ஆளுமைகளை கௌரவித்தார். அந்த நேரத்தில் ஏற்பட்ட வகுப்புவாத பதட்டங்கள் (வெறுப்பு மற்றும் வன்முறை) காரணமாக இடம்பெயர்ந்த எண்ணற்ற மக்களின் வலி மற்றும் துன்பங்களை எதிர்கால சந்ததியினர் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்பதை இந்த நாள் உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.
துயரமான பிரிவினையின் போது இழந்த உயிர்கள் மற்றும் இடப்பெயர்வின் கற்பனைக்கு எட்டாத துன்பங்களை நினைவு கூர்ந்த அமைச்சர், பொறுப்பில் இருந்தவர்களின் கொள்கைகள் இந்தியப் பிரிவினைக்கு வழிவகுத்தன என்று கூறினார். இந்த மிகப்பெரிய மனித துயரத்தின் அழிவுகளால் எனது பெற்றோர் பாதிக்கப்பட்டனர். 1952-ல் பிறந்த நான், என் தந்தை எப்படி அற்புதமாக இனப் படுகொலையிலிருந்து தப்பினார், லாகூரிலிருந்து கடைசி எல்லைப்புற மெயிலில் ஏறினார் என்பதைக் கேட்டு வளர்ந்தேன். எனது பெற்றோரும் குடும்பத்தின் பல உறுப்பினர்களும் தங்கள் வாழ்க்கையை புதிதாகத் தொடங்க வேண்டியிருந்தது,என்று அவர் தமது சொந்த வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், பிரிவினை அருங்காட்சியகம், ஐ.ஜி.என்.சி.ஏ மற்றும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வின் போது, திரு. ஹர்தீப் எஸ்.பூரி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகேஷ் சின்ஹாவுடன் பிரிவினையின் கொடூரங்கள் குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். 1947 பிரிவினையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களிடையே உரையாற்றினார்.
***
(Release ID: 1948646)